Wednesday, April 4, 2007

ச: "தசாவதாரம்" யாருடைய கதை? படத்தை நீதிபதி பார்க்க வேண்டும்

சென்னை, ஏப். 4-
கமலஹாசன் நடிக்கும் தசாவதாரம் படத்தின் கதை யாருடையது என்பது குறித்து முடிவு செய்ய அந்தப் படத்தை நீதிபதி பார்க்க வேண்டும் என்று கோர்ட்டில் மனுதாரர் வக்கீல் வாதிட்டார்.

தசாவதாரம் படத்தின் கதை மனுதாரர் செந்தில்குமாருக்கு சொந்தமானது. இந்தக் கதை தொடர்பாக கமலஹாசன் வீட்டில் உள்ளவர்களுடன் போனில் பேசியதற்கு டேப் ஆதாரம் உள்ளது. எங்களுடைய கதையை மூடிய கவரில் வைத்து கோர்ட்டில் தாக்கல் செய்துவிட்டோம். தன்னுடைய கதை என்று கூறும் கமலஹாசன், அந்தக் கதையை கோர்ட்டில் இதுவரை தாக்கல் செய்யவில்லை.

தற்போது படத்தை எடுத்து முடித்துவிட்டார்கள். இந்தப் படத்தை நீதிபதி பார்க்க வேண்டும். அதற்காக, கோர்ட்டில் படத்தை திரையிட கமலுக்கு உத்தரவிட வேண்டும். மனுதாரர் கதையையும், கமலஹாசன் கதையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும். எனவே, படத்தை திரையிட கமலஹாசனுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு வக்கீல் கே.சுப்பிரமணியம் வாதிட்டார்.

கமலஹாசன் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, படத்தின் கதை கமலஹாசன் கற்பனையில் உருவானது. மனுதாரர் கூறுவது முற்றியலும் பொய்யானது. இதை கோர்ட் ஏற்கக்கூடாது. படத்தின் கதையை விரைவில் தாக்கல் செய்துவிடுகிறேன் என்றார்.
அப்போது வக்கீல் கே.சுப்பிரமணியம் குறுக்கிட்டு, படத்தை பார்த்துதான் நீதிபதி முடிவு செய்ய வேண்டும். எனவே, கோர்ட்டில் தசாவதாரம் படத்தை திரையிட வேண்டும் என்றார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, மறு தேதி குறிப்பிடாமல் விசாரணையை தள்ளிவைத்தார்.

மாலை முரசு

1 comment:

  1. கமல் தசாவதாரம் முடிவதற்குள் ஒரு வழியாகிவிடுவார் போல. படம் வெளிவந்தால் சரி.

    ReplyDelete