Sunday, August 19, 2007

சுதந்திர நாளில் சுதந்திரத்தை மறுத்த கைதி.

முதல் சுதந்திரப்போரின் 150வது நாளை முன்னிட்டு, சுதந்திர நாளில் விடுதலை செய்யப்பட்ட கைதி ஒருவர், தனது விடுதலையை ஏற்க மறுத்து சிறையிலேயே இருக்கப்போவதாகத் தெரிவித்தார்.

விசாகப்பட்டினம் சிறையில் உள்ள தண்டனைக் கைதிகள் பட்டியலில் முதலாக இருந்தவர் கொண்டிசு சோமு நாயுடு; வயது 78. அவரை விடுதலை செய்ய, சிறை அதிகாரிகள் முடிவுசெய்தனர். சில கைதிகளுக்கு தண்டனைக்குறைப்பும் கிடைத்தது. ஆனால், சோமு நாயுடு,"நான் எங்கே போவேன்; எனக்கு இந்த சிறையில் தான் சுதந்திரம்' என்று கூறி, விடுதலையை ஏற்க மறுத்துவிட்டார்.

விழிநகரம் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில் வசித்து வந்த சோமு நாயுடு, 1995ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 2000ம் ஆண்டு, ஆயுள் சிறை விதிக்கப்பட்டார். இவருக்கு இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். ஆனால், கொலை வழக்கில் இவர் தண்டனைபெற்ற பின், யாரும் எட்டிப்பார்க்கவில்லை. கிராமத்தில் இருந்து வெளியேறி சென்று விட்டனர். "என் பிள்ளைகள் என்னை ஒரு முறை வந்து பார்த்தனர். அப்புறம் வரவே இல்லை. முகவரியும் தரவில்லை. நான் விடுதலையாகி எங்கே போவேன். எனக்கு இந்த சிறை வாழ்க்கையே சுதந்திரமாக உள்ளது. நான் இங்கேயே தங்கி விடுகிறேன்' என்று அதிகாரிகளிடம் கூறினார் சோமு நாயுடு. ஆனால், விடுதலை செய்யப்பட்ட கைதியை, சிறையில் வைத்திருக்க முடியாது என்று விதி உள்ளதால், சோமு நாயுடுவை, தன்னார்வ தொண்டு நிறுவன காப்பகத்தில் சிறை அதிகாரிகள் சேர்த்து உள்ளனர்.

தினமலர்

1 comment:

  1. Shawshank redemption எனும் படத்தில் Brooks எனும் கைதி விடுதலை ஆகி விட்டு , வெளியுலகத்தில் வாழ் தெரியாமல் தற்கொலை செய்து கொள்வார்!!
    இந்த செய்தியை கேட்டால் அந்த கதை தான் ஞாபகம் வருகிறது!! :-)

    ReplyDelete