தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களைத் தடை செய்ய மாட்டோம் என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை அவர் கூறியதாவது:
ஊடகவியலாளர்கள் தாங்கள் கொண்டு சேர்க்க விரும்புகிற செய்தியை மக்களிடத்தில் சேர்ப்பதற்கான உரிமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் பாதுகாக்கும்.
தமிழ்நெட் இணையத்தளத்தை முடக்கியதன் பின்னணியில் அரசாங்கம் செயற்பட்டதாகக் கூறப்படுவதை நிராகரிக்கிறோம். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அந்த இணையம் செயற்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் ஒரு பயங்கரவாத இயக்கத்தின் உத்தியோகப்பூர்வமான தளமாக நாம் அதனைக் கருதவில்லை.
விடுதலைப் புலிகள் இரு உத்தியோகபூர்வமான தளங்களை இயக்கி வருகின்றனர்.
தமிழ்நெட் இணையத்தளம் குறித்து அரசாங்கம் கவலை கொண்டிருக்குமேயானால் ஏன் அந்த இரண்டு இணையத்தளங்களை ஏதும் செய்யாதிருக்கிறோம்? தமிழ்நெட் இணையத்தளத்தின் செய்தி தொடர்பில் கவலை கொண்டிருந்தோமேயானால் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலக இணையத்தளத்தில் பல தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன- அது குறித்து நாம் கவலை கொள்ளாதிருப்போமா? என்றார் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே.
Puthinam Tamil Daily News Page
No comments:
Post a Comment