தமிழகம் முழுவதும் உஷார் நிலை
முன்னெச்சரிக்கையாக 700 பேர் கைது
ஆகஸ்ட் 26, 2007
சென்னை: ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம், சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வட மாநிலங்களிலிருந்து வரும் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
இதேபோல கோவையிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகர மற்றும் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.
மேலும் தமிழத்தின் இதர பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்ள், கோவில்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடங்களிலும் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாமீனில் வெளியே இருக்கும் குற்றவாளிகள் உட்பட 700க்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
wwww.thatstamil.com
No comments:
Post a Comment