இந்தியன் ஏர்லைன்சின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ஏடிஆர்-42 ரக விமானம் கொல்கத்தாவில் இருந்து அகர்தலாவுக்கு கிளம்ப இருந்தது. அப்போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ரிப்பேர் வேலைகள் நடந்தன.
இதைத் தொடர்ந்து 44 பயணிகளுடன் அந்த விமானம் ரன் வேயில் ஓட ஆரம்பித்தது. அப்போது விமானத்தின் உள்ளே கடும் வெப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிலர் மயங்க ஆரம்பித்தனர்.
இதைத் தொடர்ந்து விமான சிப்பந்திகள் ஆக்ஸிஜன் மாஸ்குகளை பயணிகளுக்குப் பொறுத்தினர். இது தாற்காலிகமான பிரச்சனை தான், விமானம் பறக்க ஆரம்பித்ததும் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறிய விமானி விமானத்தை தொடர்ந்து இயக்கினார்.
ஆனால், பறக்க ஆரம்பித்த பிறகும் நிலைமை சீரடையவில்லை. பயணிகள் நிலைமை மேலும் மோசமானது. இதையடுத்து விமானம் திரும்ப தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர்.
ஆனால், அதற்குள் பல பயணிகளின் நிலைமை மோசமாகிவிட்டது. பலரால் நடக்கக் கூட முடியவில்லை. இதையடுத்து விமான நிலைய மருத்துவக் குழுக்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தன.
22 வயது பெண்ணும், 12 வயது சிறுவனும் மயக்கமடைந்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
நீண்ட நேரத்துக்குப் பின் விமானத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு 42 பயணிகளுடன் அந்த விமானம் மீண்டும் கிளம்பிச் சென்றது.
விமானத்திற்குள் காற்று அழுத்தத்தை சீராக வைக்கும் கருவியில் கோளாறு ஏற்பட்டதால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது
No comments:
Post a Comment