வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா எதிர்பாராத தோல்வியை சந்தித்ததற்கு, அந்த அணியின் அபாரமான பந்துவீச்சு, அதற்கு பக்கபலமாக நின்ற பீல்டிங், இந்திய வீரர்களின் படுமோசமான ஆட்டம் என்று பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் விட தோல்விக்கு பிரதான காரணம் முக்கியமான இந்த முதல் ஆட்டத்தில் பாமில் இல்லாத வீரேந்திர ஷேவாக்கை களமிறக்கியதுதான்.
ரன் குவிக்க முடியாமல் திணறி வரும் ஷேவாக்கை அணியில் சேர்த்தது சர்ச்சைக்கு இலக்கானது. தேர்வுக் குழுவினர் எதிர்ப்பை மீறி கேப்டன் திராவிட் இவரை அணியில் சேர்த்தார். ஷேவாக்கின் மேட்ச் வின்னர் அந்தஸ்தை வைத்து திராவிட் அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம். அது தவறில்லை. எப்படியும் ஷேவாக்கின் தேர்வை ஒரு சூதாட்டம் என்றே பலரும் கருதினர். பலனிக்கலாம், அணியையே கவிழ்க்கலாம் என்று கருத்தப்பட்டது.
இந்திய ரசிகர்கள் அஞ்சியது போலவே ஷேவாக் சூதாட்டம் அணியை மண்ணை கவ்வ வைத்துவிட்டது. உலக கோப்பையில் முத்திரை பதிக்க வேண்டிய முதல் ஆட்டத்தில் ஷேவாக்கை களமிறக்கியது, அதுவும் துவக்க வீரராக ஆடவைத்தது பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.
சமீபகால வழக்கப்படி அவர் எடுத்த எடுப்பிலேயே ஆட்டம் இழந்து விட இந்திய அணி திணறத் துவங்கிவிட்டது. இதனால் இந்த சரிவிலிருந்து இந்தியா மீளவே இல்லை. முன்னாள் கேப்டன் வெங்கட்ராகவன் கேட்டது போல, பார்மில் இல்லாத கங்குலியை துவக்க வீரராக களமிறக்க யோசித்த அணி நிர்வாகம், தடுமாறும் ஷேவாக்கை முதலில் ஆடவைத்தது ஏன்? என்பது ரசிகர்கள் மனதில் எழுந்திருக்கும் கேள்வி.
ஷேவாக்கிற்கு பதிலாக உத்தப்பா துவக்க வீரரராக களமிறங்கி ஆரம்ப விக்கெட்டை இந்தியா இழக்காமல் இருந்திருந்தால், ஆட்டமே மாறியிருக்கக் கூடும்.
மாலைச் சுடர்