.

Sunday, April 1, 2007

சற்றுமுன்: ரிசர்வ் வங்கி வட்டி அதிகரிப்பு -வங்கி கடன்கள் வட்டி எகிறும்

வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க நினைப்பவருக்கு இன்றைய தேதி உண்மையிலேயே ஒரு ஏமாற்ற தினமாகத்தான் இருக்கக்கூடும். ஆம். ஒரே நேரத்தில் வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தையும், ரொக்க கையிருப்பு விகிதத்தையும் (சிஆர்ஆர்) ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் ஒவ்வொரு வங்கியும் முதலீடு செய்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம் சிஆர்ஆர். இதேபோல, வர்த்தகத்துக்காக ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் கடன் தொகை மீதான வட்டி ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டையும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு உண்டு.

இந்த நிதி ஆண்டில் பணவீக்க விகிதத்தை 5 முதல் 5.5 சதவீதத்துக்குள் வைத்திருக்க ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், உணவுப் பொருட்கள், வீடு, மனை உட்பட பலவற்றின் விலை கடந்த சில மாதங்களாக கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து வருகின்றன. இதனால் பணவீக்க விகிதம் 6.46 சதவீதமாக உள்ளது.

எனவே, அதைக் கட்டுப்படுத்த வங்கிகளின் ரொக்க இருப்பதை அதிகரிக்கும் வகையில் சிஆர்ஆர் விகிதத்தை ரிசர்வ் வங்கி இப்போதுள்ள 6.25ல் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இது இந்த மாதம் 14 முதல் 28ம் தேதி வரை இரு கட்டங்களாக நடைமுறைக்கு வரும்.

இந்த நடவடிக்கையால் அதிர்ந்துள்ள வங்கிகளை மேலும் அதிரச் செய்யும் வகையில் ரெப்போ விகிதமும் கால் சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் ஆயிரக்கணக்கான கோடி வட்டியை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

அத்துடன், சிஆர்ஆர் அதிகரிப்பால் வங்கிகளின் ரூ.15,500 கோடி கூடுதல் வர்த்தக தொகை ரிசர்வ் வங்கி வசமாகி விடும். எனவே, அவற்றைக் கடனாக அளிப்பதன்மூலம் கிடைக்க வாய்ப்புள்ள ரூ.1,600 கோடி வட்டியை வங்கிகள் இழக்க நேரிடும். மொத்தமாக வங்கிகளிடம் இருந்து சுமார் 17,000 கோடி ரிசர்வ் வங்கிக்கு கைமாறும்.

இதனால், கடன் அளிப்பதற்கான வங்கிகளின் நிதி வரம்பு மேலும் கட்டுப்படுத்தப்படும். அதிக வருமானம் ஈட்ட வேறுவழியின்றி வீடு, வாகன, தனிநபர் கடன் வட்டிகளை வங்கிகள் மீண்டும் கடுமையாக உயர்த்தத் தொடங்கி விட்டன

- தினகரன்

1 comment:

Anonymous said...

கட்டுமானத்துறைக்கு சாவு மணி அடிக்க தயாராகிவிட்டார்கள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...