.

Tuesday, August 21, 2007

ஜெர்மனியில் இந்தியர்கள் மீது தாக்குதல்

ஜெர்மனியின் மிக்லன் நகரில் ஒரு கண்காட் சியையொட்டி கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கலை நிகழ்ச்சியில் இந்தியர்களும் கலந்து கொண்டனர். ஏராளமான இந்தியர்கள் பார்வையாளர்கள் வரிசை யில் உட்கார்ந்திருந்தனர்.

அப்போது ஜெர்மனி நாட்டவர்கள் திடீர் என்று இந்தியர்களுக்கு எதிராக கோஷம் போட்டனர். இந்தியர்கள் மீது 50க்கும் மேற்பட்டவர்கள் கண்மூடித்தனமாக தாக் குதல் நடத்தினார்கள். பாட்டில்களாலும் தாக்கி னார்கள். நாற்காலிகளை தூக்கி இந்தியர்களை அடித்தனர்.

இந்தியர்கள் உயிர் பிழைக்க சிதறி ஓடினார்கள்.உயிர் தப்ப அருகில் உள்ள அறையில் புகுந்து தாளிட்டுக்கொண்டனர். அந்த கலவரக்கும்பல் விடவில்லை. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து இந்தியர் அடித்து உதைத்தனர்.

போலீசார் பெரும்பாடுபட்டு வன்முறை வெறியாட் டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினார்கள்.

இந்தியர்களுக்கு எதிரான இந்த இனவெறி தாக்குதலில் 8 இந்தியர்கள், 2போலீசார் காயம் அடைந்தனர்.

மாலைமலர்

சிலிக்கான் நகராக மாறிவரும் சென்னை நகருக்கு வயது 368

சிலிக்கான் நகராக மாறிவரும் சென்னை நகருக்கு வயது 368
சுருக்கமாக அதன் வரலாறு மற்றும் அறிய பல ஒளிப்படங்களுடன்
- எம். ஹூஸைன்கனி

பழைய சினிமா படங்களில் சென்னையைக் காண்பிக்கும்போது சென்டிரல் ரெயில் நிலையத்தையும் அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தையும் காட்டுவார்கள்.
இன்று எல்.ஐ.சி. கட்டிடத்தை விட உயரமான பெரிய பெரிய கட்டிடங்களையும், கம்ப்யூட்டர் நிறுவனங்களையும் ஆங்காங்கே பார்க்கலாம். குதிரை வண்டிகள் ஓடிய அண்ணா சாலையில் இன்று விதவிதமான வெளிநாட்டு சொகுசு கார்கள் சீறிப்பாய்ந்து செல்கின்றன.

வானளாவிய உயர்ந்த கட்டிடங்களையும், நவீன வசதிகளையும் கொண்டுள்ள சென்னை நகரம் உருவான வரலாறு நீண்ட நெடியது. 2007 ஆகஸ்ட் 22-ந்தேதி (புதன்கிழமை) சென்னைக்கு 368 வயது ஆகிறது.

சென்னையை உருவாக்கியவர்கள்

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன் ஆகிய இருவரும்தான் சென்னையை உருவாக்கியவர்கள். இப்போதைய சென்னை அந்த காலத்தில் 'சென்னப்பட்டினம்' என்றும், 'மெட்ராஸ்பட்டினம்' என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

இதற்கு முன்பு மைலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், திருவொற்றியூர் என்று பல்வேறு சிறுசிறு கிராமங்களாகவும், குட்டி குட்டி நகரங்களாகவும் சென்னைப்பட்டினம் காட்சி அளித்தது. புதர்கள், காடுகள், மரங்கள் சூழ்ந்த இந்த ஊர்களுக்கு இடையே கூவம், அடையாறு போன்ற ஆறுகள் பாய்ந்து ஓடின.

ஆங்கிலேயர்கள் வருகை

சென்னப்பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாசனை திரவியம் மற்றும் ஜவுளி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தது. போர்ச்சுக்கீசியர்களின் வருகைக்குப் பின்னரே அது வளர்ச்சி அடையத் தொடங்கியது. கி.பி. 1552-ம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்கள் சாந்தோமில் குடியேறி வியாபாரம் செய்தனர்.

சென்னப்பட்டினத்தில் விலை உயர்ந்த ஜவுளி மூலப்பொருட்கள் கிடைத்தன. இதை குறிவைத்து இங்கு கால்பதிக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். இதற்காக கிழக்கிந்திய கம்பெனி பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன் என்ற 2 வியாபாரிகளை சென்னப்பட்டனத்திற்கு அனுப்பி வைத்தது. சென்னப்பட்டினத்துக்கு வந்த அவர்கள் இருவரும் வணிக மையம் கட்டுவதற்காக இடம் பார்த்தனர்.

ஜார்ஜ் கோட்டை

அதற்காக பூந்தமல்லி நாயக்கர் மன்னரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை வாங்கினார்கள். அந்த இடத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக மையத்தையும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் 22.8.1639-ல் கட்டினர். இதுதான் சென்னை உருவாக காரணமாக அமைந்தது.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. வணிக வளாகம் கட்டப்பட்டதால் ஐரோப்பியர்கள் நிறைய பேர் வந்தனர். அவர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை சுற்றிலும் வீடு கட்டி குடியேறினர். அந்த பகுதி வெள்ளை பட்டினம் என்று அழைக்கப்பட்டது. அதற்கு வெளிப்புற பகுதியில் ஆந்திராவில் இருந்து வந்த ஏராளமான நெசவாளர்கள் குடியேறினர். இது கறுப்புபட்டினம் என்று அழைக்கப்பட்டது. இந்த பகுதிதான் பின்னர் ஜார்ஜ் டவுண் ஆனது.

கைமாறியது

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னப்பட்டினம் என்றும், தெற்குப் பகுதி மதராஸ் பட்டனம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டணங்களையும் ஒன்றுசேர்த்து ஆங்கிலேயர்கள் மதராஸ் பட்டினம் என்றும், தமிழர்கள் சென்னப்பட்டினம் என்றும் அழைத்தனர்.

1653-ல் சென்னப்பட்டினம் சென்னை மாகாணமாக மாறியது. அதன் பின்னர் 1702-ல் முகலாயர்களாலும், 1741-ல் மராட்டியர்களாலும் அது தாக்குதலுக்கு உள்ளானது. 1746-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைவசமானது.

பெயர் மாற்றம்

பின்னர் ஆங்கிலேயர்களின் கைக்கு போனது. 1758-ல் மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். ஆனால், 2 மாதங்களிலேயே ஆங்கிலேயர்கள் திரும்பவும் மீட்டனர். அன்றுமுதல் 1947-ம் ஆண்டுவரை சென்னை மாகாணம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

சென்னை மாகாணம் 1968-ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

அதுபோல, மெட்ராஸ் என்று இருந்த பெயர் 1997-ம் ஆண்டு சென்னை என்று மாற்றப்பட்டது.

30 ஆயிரம் மக்கள்தொகையுடன் உருவான சென்னை நகரின் மக்கள்தொகை தற்போது 60 லட்சத்தை தாண்டிவிட்டது. சென்னை நகரின் பரப்பும் விரிவடைந்து கொண்டே போகிறது.

'மெட்ராஸ் டே'

1639-ம் ஆண்டு உருவான சென்னை நாளை (22-ந் தேதி) தன்னுடைய 368 வயதை அடைகிறது.


hussainghani@gmail.com

சோனியாவின் தெ.ஆ சுற்றுப்பயணம் குறைப்பு.

கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் காந்தி தத்துவம் பற்றி உரை நிகழ்த்துவதற்காக சோனியாகாந்தி தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது தெரிந்ததே (முந்தைய சற்றுமுன்)

தொடர்ந்து அவர் டர்பன் நகருக்கு சென்றுபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் காந்தி வாழ்ந்த போது டர்பன் நகரில் தான் தங்கி இருந்தார். எனவே அந்த இடத்தை பார்ப்பதுடன் காந்தியை இன வெறிகாரணமாக ரெயிலில் இருந்து தள்ளிய பீட்டர்மரிட்ஸ் பார்க் ரெயில் நிலையத்தையும் பார்வையிட சோனியா திட்டமிட்டு இருந்தார்.

காந்தி அமைதி மையத்தையும் தொடங்கி வைக்க இருந்தார். ஆனால், இப்போது நடுவண்அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் டர்பன் நகர நிகழ்ச்சிகள் அனைத்தையும் சோனியா தனது நிரலில் இருந்து நீக்கம் செய்து விட்டார்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரண மாக பயண நாட்களை குறைத்து கொண்டு இடையிலேயே அவசரமாக நாடுதிரும்புகிறார். எனவே கேப்டவுன் நிகழ்ச்சி முடிந்ததும் ஜோகன்ஸ்பர்க் திரும்பி அங்கிருந்து டெல்லி வருகிறார். சோனியா டர்பன் நகர நிகழ்ச்சிகள் விலக்கம் செய்யப்பட்டு இருப்பதை தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி உறுதி செய்துள்ளார்.

கருத்தடை மாத்திரை விளம்பரம் - ஆனந்த விகடனுக்கு நோட்டிஸ்

சிப்லா (CIPLA) நிறுவனத்தின் தயாரிப்பான ஐ-பில் (I-PILL) எனும் பெண்களுக்கான கருத்தடை மாத்திரையை விளம்பரம் செய்ததற்காக ஆனந்த விகடன் வார இதழக்கு தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநனரகம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

மேலும் செய்திக்கு "CNN-IBN TV".

NCA விலிருந்து கபில்தேவ் நீக்கம் - BCCI

தேசிய கிரிக்கெட் அகடமியின்(NCA) சேர்மன் பதவியிலிருந்து முன்னாள் இந்திய கிர்க்கெட் கேப்டன் கபில்தேவ் நீக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு(BCCI) போட்டி என கருதப்படும் இந்தியன் கிரிக்கெட் லீக் (ICL) என்ற அமைப்போடு கபில்தேவ் தன்னை இனைத்துக்கொண்டதால் இந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிகிறது.

மேலும் செய்திக்கு "CNN-IBN TV".

அணுசக்தி ஒப்பந்தம்: சீனாவுடன் பாக்கிஸ்தான்.

இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் போன்று தங்கள் நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள சீனாவும் பாக்கிஸ்தானும் முயன்று வருகின்றன. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.

பிராந்திய பாதுகாப்பை சமநிலைப்படுத்தும் நோக்கில் இவ்விரு நாடுகளும் இம்முயற்சியில் இறங்கியுள்ளன என்று கூறப்படுகிறது.

இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தை, அணுசக்தி தயாரிப்புக்கான மூலப் பொருள்களை விற்கும் நாடுகள் (என்எஸ்ஜி) அங்கீகரித்துவிட்டால் பாக்கிஸ்தானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தும் முயற்சியில் சீனா தீவிரமாக இறங்கிவிடும் என்று பெய்ஜிங்கில் இருந்து வெளிவரும் தகவல்கள் கூறுகின்றன.

அணுசக்தி விஷயத்தில் இந்தியா பலம் பெற்றுவிட்டால் அதற்கு இணையான பலத்தைப் பெற தங்களுக்கும் உதவ வேண்டும் என்று சீனாவிடம் பாக்கிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. இதுமட்டுமல்லாமல், இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளும் அமெரிக்காவுக்கு போட்டியாக அல்லது பதிலடியாக தானும் பாக்கிஸ்தானுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என சீனாவும் விரும்புகிறது.

இதற்கு முன்னோடியாக பாக்கிஸ்தான் ராணுவ தலைமை அதிகாரி ஒரு உயர்நிலைக் குழுவுடன் இம்மாத ஆரம்பத்தில் சீனா சென்று சீன துணை அதிபர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோருடன் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து பேச்சு நடத்திவிட்டு வந்துள்ளார்.

பதிலுக்கு சீனாவும் தனது உதவி வெளியுறவுத் துறை அமைச்சர் குய் தியான்காயை இஸ்லாமாபாத்துக்கு அனுப்பி அதிபர் பர்வீஸ் முஷாரப், பிரதமர் ஷெüகத் அஜீஸ், வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரி உள்ளிட்டோரை சந்திக்க வைத்துள்ளது. அப்போது "சீனா-பாக்கிஸ்தான் சிவிலியன் அணுசக்தி உத்தேச ஒப்பந்தம்" குறித்து விவாதித்ததாக தெரிகிறது.

சீனாவுக்கும் இப்போது இந்தியா மீது பலவிதங்களில் அதிருப்தி இருக்கிறது. எல்லைப் பிரச்னையில் உள்ள தேக்க நிலை, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவுக்கு இருக்கும் நெருக்கம் ஆகியன சீனாவை எரிச்சலூட்டி வருகின்றன.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டங்கள் அதன் தூய நோக்கம் கெடாதபடி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதையும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தி கூறி வருகிறது.

இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தால் சர்வதேச ஆயுதப் பரவல் தடை முயற்சிகளுக்குப் பின்னடைவு ஏற்படும் என்று சீனாவின் 2 அதிகாரபூர்வ ஏடுகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

"இந்தியாவில் ஆட்சி மாற்றம் வரும்'

அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்திய அரசியலில் புயல் கிளம்பும். ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றெல்லாம் சீனப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அணுசக்தி தொடர்பான 123 ஒப்பந்தம் பற்றிய இடதுசாரிகளின் கருத்துகளை சீனப் பத்திரிகைகள் விரிவாக வெளியிட்டுள்ளன. அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு உலக அரங்கில் இந்தியாவை பகடைக்காயாக பயன்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாகவும் சீன பத்திரிகைகள் குற்றம்சாட்டியுள்ளன.

தினமணி

தென் ஆப்பிரிக்கா சென்றார் சோனியா.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 4 பயணமாக திங்கள்கிழமை இரவு தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படும் நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா தென்ஆப்பிரிக்கா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தென்ஆப்பிரிக்க அதிபர் தபோ பெகியைச் சந்தித்துப் பேச்சு நடத்த உள்ள சோனியா, முன்னாள் அதிபர் நெல்சன் மன்டேலாவையும் மரியாதை நிமித்தமாகச் சந்திப்பார்.

"21-ம் நூற்றாண்டில் காந்தியத் தத்துவங்களின் பொருத்தப்பாடு" என்ற தலைப்பில் கேப்டவுன் பல்கலை.யில் உரையாற்ற உள்ளார் சோனியா காந்தி.

திருமணப்பதிவு கட்டாயமாகிறது?

திருமணப்பதிவைக் கட்டாயமாக்கும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் வேங்கடபதி திங்கள்கிழமை தெரிவித்தார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதில் ஒன்றில் அவர் இதைத் தெரிவித்தார். நிலைமையின் முக்கியத்துவம் மற்றும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கூடிய விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என்றார் அவர்.

தினமணி

கிளாஸ்கோவில் இறந்தது கபீல் தானா?

பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்று, தீயில் கருகி இறந்தவர் பெங்களூரைச் சேர்ந்த கபீல் அகமதுதானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று பெங்களூர் போலீஸôர் கூறுகின்றனர்.

எனவே, அவரது உடலையும் மருத்துவமனையிலிருந்து யாரும் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது எரியும் ஜீப்பை மோதி தகர்க்க பயங்கரவாதிகள் முயற்சி செய்தனர். அப்போது, தீப் பிடித்து எரிந்த ஜீப்பில் இருந்து ஓர் இளைஞரை பிரிட்டிஷ் போலீஸôர் மீட்டனர். அவர், பெங்களூரைச் சேர்ந்த ஏரோனாட்டிகல் என்ஜினீயர் கபீல் அகமது என்று பிரிட்டிஷ் போலீஸôர் கூறினர்.

90 சதவீத தீக் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த அவர் சில வாரங்களுக்கு முன் இறந்தார். அவரது சடலம் ஸ்காட்லாந்தில் உள்ள மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

""ஸ்காட்லாந்தில் இறந்தது கபீல் அகமதுதானா என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் பிரிட்டனில் இருந்து எங்களுக்கு இதுவரை வரவில்லை'' என்று கர்நாடக காவல் துறையின் குற்றப் பிரிவு இணை ஆணையர் கோபால் ஹொசூர் கூறினார்.

தினமணி

செப்-1 முதல் புதிய செயற்கைக்கோள் இன்சாட்-4 சிஆர்.

அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளான "இன்சாட்-4 சிஆர்' செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து செப்டம்பர் 1-ம் தேதி மாலையில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு ஜூலையில் "ஜிஎஸ்எல்வி-எப்02' ஏவு வாகனம் (ராக்கெட்) மூலம் "இன்சாட்-4சி' செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. ஆனால், அது வெற்றிகரமாக விண்ணுக்குச் செல்லவில்லை.

எனவே, இப்போது இன்சாட்-4 சிஆர் செயற்கைக்கோளைச் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. "வீட்டுக்கே நேரடி ஒளிபரப்பு'க்குப் பயன்படக்கூடிய மற்றும் விடியோ படத் தொகுப்புகள், டிஜிட்டல் தகவல்களை அனுப்ப உதவும் அதிநவீன உயர்திறன் கொண்ட 12 கியூ-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் இச் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள் காலம் 10 ஆண்டுகள்.

"கடந்த முறை நமது முயற்சி தோல்வி அடைந்ததால், இப்போது, அதை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன' என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறினார்.

தினமணியிலிருந்து..

அமெரிக்காவுக்கான தூதரைத் திரும்பப் பெற மா.கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள், "தலையில்லாத கோழிகள்" என்று கிண்டல் செய்த, தூதர் ரொனேன் சென் உடனடியாக திரும்ப அழைக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வலியுறுத்தினார்.

"வாஷிங்டனில் நமக்கொரு தூதர் இருக்கிறார்; ஆனால் அவர், நமக்குத் தூதராக இல்லாமல், ஜார்ஜ் புஷ்ஷுக்குத் தூதராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்திய அரசுக்கு சுய மரியாதை என்று ஏதேனும் இருக்குமானால், உடனடியாக அவரைத் தாய்நாட்டுக்கு வரவழைக்க வேண்டும்' என்றார் பிரகாஷ் காரத்.

தினமணி

ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை

ஜப்பான் பிரதமர் சின்சோ அபே அவரது துணைவியார் அகி யுடன் இந்தியாவிற்கு இன்று வந்துள்ளார். இந்திய தொழிலதிபர்களுடன் வர்த்தக ஒத்துழைப்பை அதிகரிக்க 200 தொழில் நிர்வாகிகளுடன் அவர் வந்துள்ளார்.

Japan's Prime Minister Shinzo Abe (L) and his wife Akie walk down from the plane upon their arrival at the airport in New Delhi August 21, 2007. Abe arrived in India on Tuesday for a high-profile visit with around 200 business executives in a trip designed to boost trade with a booming economy and counterbalance China. REUTERS/B Mathur

"மணல் குவாரி விதிமுறைகளை மாற்றுக" - இராமதாஸ்

மணல் குவாரி நடத்துவதில் விதிமுறைகளை மாற்றி அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

மணல் குவாரியில் இடைத் தரகர்களைத் தவிர்த்து, பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்காத இடத்தில் ஊராட்சியின் ஒப்புதல் பெற்று கனிமவள விதிப்படி மணல் எடுத்து ஆற்றங்கரையோரம் கொட்டி அதிகாரிகளே மணலை விற்க வேண்டும்.

இதைக் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அரசுக்கு பெருமளவு வருவாய் கிடைக்கும்.


திருவள்ளூர் மாவட்டம், விடையூர் அருகேயுள்ள குசஸ்தலை ஆற்றில் மணல் எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இராமதாஸ் பேசினார்

தேசிய கிரிக்கெட் அகாதமி தலைவர் பதவியிலிருந்து கபில் நீக்கம்

ஸீ - தொ.கா. குழுமத்தினரின் இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதால் தேசிய கிரிக்கெட் அகாதெமி தலைவர் பதவியிலிருந்து கபில்தேவ் நீக்கப்பட்டுள்ளார்.

இன்று மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக தன்னை நீக்குமாறு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு கபில்தேவ் சவால் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய கிரிக்கெட் அகாதெமியின் துணைத் தலைவராக இருந்த அஜய் ஷிர்கே தற்காலிகமாக பொறுப்புத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவிக்கு செப்டம்பர் 28ல் நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் புதிய தலைவரின் பெயர் அறிவிக்கப்படும்.

இதற்கிடையே, இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பில் இந்தியாவின் 44 கிரிக்கெட் வீரர்களும், வெளிநாட்டவர்களான பிரையன் லாரா, இன்சமாம், அப்துல்ரஸாக், லான்ஸ் குளூஸ்னர் போன்றவர்களும் இணைந்துள்ளதாகத் தெரிகிறது, பாக்கிஸ்தான் வீரர் முகமது ஆசிஃப்புக்கு மூன்று வருட ஒப்பந்தத்திற்கு ரூ.10 கோடி வழங்க லீக் அமைப்பினர் முன் வந்துள்ளதாகவும் தெரிகிறது

தமிழகம்: நுழைவு வரியை எதிர்த்து வழக்கு.

வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் வெண்சுருட்டு (சிகரெட்),
பளிங்குகல் (கிரானைட்)) போன்ற பொருட்களுக்கு தமிழக அரசு நுழைவு வரி விதித்தது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எனவே 32 வகை பொருட்களுக்கு நுழைவு வரி விதித்தது செல்லாது என்று தீர்ப்பு வந்தது ஆனாலும் வழக்கில் சம்பந்தப்படாத நிறுவனங்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டு வந்தது.

இதை எதிர்த்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பாணை அனுப்ப நீதிபதி மணிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பிரதீபா பட்டீல் - புதிய குற்றச்சாட்டு

குடியரசுத்தலைவர் வேட்பாளராக பிரதீபாபட்டீல் அறிவிக்கப்பட்ட போது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. அவர் உறவினர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

பிரதீபா பட்டீல் அதை மறுத்தார். என்றாலும் எதிர்க்கட்சிகள் திரும்ப திரும்ப அதே குற்றச்சாட்டுகளை கூறி வந்தன.

பின்னர் அவர் வெற்றி பெற்று குடியரசின் தலைவர் ஆனார். தற்போது பிரதீபாபட்டீல் குடியரசுத்தலைவர்மாளிகையில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். இப்போதும் அவர் மீது புதிய குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் மாளிகையில் அவரது மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும், ஏற்கனவே அவருக்கு கீழ் பணிபுரிந்தவர்களையும் வேலைக்குச் சேர்த்து வருகிறார் என்ற புகார் எழுந்துள்ளது. இம்மாளிகை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் விக்ராந்த்தத்தா. இவர் பிரதீபா பட்டீல் ராஜஸ்தான் மாநிலத்தில் கவர்னராக இருந்த போது விமானப் படை அதிகாரியாக இருந்தவர்.

தேர்தல் பிரசாரத்தின் போது இவரைப் பற்றிய செய்திகள் வெளியானது. எனவே ஜெய்ப்பூர் விமானப்படைபணிக்கு அனுப்பப்பட்டார். பிரதீபா குடியரசுத்தலைவரான பிறகு மீண்டும் அவருடைய சிறப்பு அதிகாரியாக விக்ராந்த் தத்தா நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக குடியரசுத்தலைவரின் செயலாளரிடம் இருந்து பாதுகாப்பு அமைச்சகத்துக்கு
கடிதம் எழுதப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மாலைமலர்

ஆஸி. நீதிமன்றத்தில் நீதி நிலைத்தது

ஆஸ்திரேலிய அரசிற்கு ஒரு பெருத்த தர்மசங்கடமாக பிரிஸ்பேன் நீதிமன்றம் இந்திய மருத்துவர் முகமது ஹனிஃபிற்கு கொடுத்திருந்த வேலைக்கான விசாவை முடக்கியதை தள்ளுபடி செய்து மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்தது.குடியேற்ற அமைச்சர் தமது எல்லைக்கு புறம்பாக முடிவெடுத்ததாக மாநில நீதிபதி ஜெஃப் ஸ்பெண்டர் கூறினார். இருப்பினும் அமைச்சர் மேல்முறையீடு செய்ய 21 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளதால் ஹனிஃப் ஆசிக்கு திரும்ப சற்று தாமதமாகலாம்.ஹனிஃபின் சட்டமுறையீட்டின் செலவுகளையும் அரசு வழங்க உத்திரவிட்டுள்ளார்.


Aus Court reinstates Haneef’s visa

இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும்!

இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்று வைகோ தெரிவித்தார். மேல்மலையனூர் ஒன்றியம் செக்கடிகுப்பம் கிராமத்தில் மதிமுக கிளை சார்பில் தமிழ் மன்னர்களின் கலை இலக்கியப் பண்பாட்டு பெருவிழா நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது, தமிழர்களின் மீது சிங்கள ராணுவம் குண்டு மழை பொழிகிறது. இதற்கு இந்தியா ஆயதங்களையும், விமானங்களையும், ரேடார்களையும் அளிக்கிறது. தமிழர்களுக்கு விரோதமான அரசு மன்மோகன்சிங் அரசு. தமிழர்கள் ஆண்ட ஈழத்தை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியிடம் கோரிக்கைவைத்தேன். ஆலோசனை நடத்தி வருவதாக அவர் பதில் அளித்தார். ஆனால் அவர் இறந்து விட்டது துரதிர்ஷ்டமாக போய்விட்டது. அவர் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக தனி ஈழம் ஏற்பட்டிருக்கும் என்று வைகோ தெரிவித்தார்.

"திருப்பதி" சிறப்பு வழிபாட்டு மண்டலம் - கிருத்துவர்கள் வருத்தம்.

இந்து கோவில்களில் முக்கியமான ஒன்றான திருப்பதி கோவிலை சிறப்பு வழிபாட்டு மண்டலமாகா ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதனால் திருப்பதியை சுற்றியுள்ள 110 கி.மீ. பகுதில் இந்து தவிர மற்ற மதப்பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிருத்துவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். மேலும் செய்திக்கு "CNN-IBN TV".

துபாயில் இந்திய வீட்டு விற்பனைக் கண்காட்சி

துபாயில் இந்திய வீட்டு விற்பனைக் கண்காட்சி

துபாயில் இந்திய வீட்டு விற்பனைக் கண்காட்சி தேரா பகுதியில் உள்ள ரெனைஸன்ஸ் ஹோட்டலில் ஆகஸ்ட் 23 ந் தேதி முதல் 25 ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

23 ந் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் , 24 மற்றும் 25 ந் தேதி வெள்ளி மற்றும் சனிக்கிழமையன்று காலை பத்து மணி முதல் நண்பகல் ஒரு மணி வரையும், பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இக்கண்காட்சி நடைபெறும்.

இக்கண்காட்சியில் சென்னையைச் சேர்ந்த முன்னணி ரியல் ஸ்டேட் நிறுவனங்கள் பங்கேற்று வீடுகளை விற்பனை செய்ய உள்ளது. வங்கி கடன் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



கண்காட்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு அஜய் 050 843 2131 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

-o❢o-

b r e a k i n g   n e w s...