.

Wednesday, August 22, 2007

அபுதாபிக்கு இந்திய போர்க் கப்பலின் நல்லெண்ணப் பயணம்

அபுதாபிக்கு இந்திய போர்க் கப்பலின் நல்லெண்ணப் பயணம்


இந்திய போர்க்கப்பல்களான ஐ.என்.எஸ். ராஜ்புத் மற்றும் ஐ.என்.எஸ். பெத்வா ஆகியவை எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் 30 ம் தேதிக்குள் ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபிக்கு நல்லெண்ணப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அபுதாபியில் உள்ள இந்திய தூதரக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்தியா மற்றும் அமீரகம் இடையேயான நட்புறவு அதிகரிக்க உதவிகரமாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Goodwill visit: Indian warships to arrive in Abu Dhabi

http://www.godubai.com/gulftoday/article.asp?AID=34&Section=Home

தாய்நாடு திரும்ப இயலாமல் தவித்த இந்தியர்களுக்கு இலவச விமான பயணச்சீட்டு

தாய்நாடு திரும்ப இயலாமல் தவித்த இந்தியர்களுக்கு இலவச விமான பயணச்சீட்டு

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா காலம் முடிந்தபின்னரும் சட்டவிரோதமாக தங்கியுள்ள பலரும் நாட்டை விட்டு வெளியேற பொதுமன்னிப்பு அளித்து எவ்வித அபராதமும் இன்றி தாய்நாடு செல்ல அமீரக அரசு சலுகை வழங்கியுள்ளது.

இதன் மூலம் சட்டவிரோதமாக தங்கியுள்ள பல்வேறு நாட்டவரும் அமீரக அரசிடம் விண்ணப்பித்து தாய்நாடு திரும்பி வருகின்றனர். எனினும் இந்தியாவைச் சேர்ந்த சிலர் தாய்நாடு திரும்ப விமான பயணச்சீட்டு வாங்க இயலாத நிலையில் உள்ளனர். இதனை அறிந்த வேலி ஆப் லவ் ( valley of love ) எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஷார்ஜா இந்திய சங்கத்தில் திங்கள்கிழமை மாலை முதல் கட்டமாக 36 இலவச விமான பயணச்சீட்டுகளை வழங்கியது.

இன்னும் பங்களாதேஷ், இலங்கை, எத்தியோப்பியா உள்ளிட்ட நாட்டவர்களும் இலவச விமான பயணச்சீட்டு கேட்டு தங்களை அணுகி இருப்பதாக வேலி ஆப் லவ் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Amnesty seekers relieved as they get free passage
http://www.gulfnews.com/nation/Immigration_and_Visas/10148320.html

புதியநிலா பத்தாமாண்டு தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

புதியநிலா பத்தாமாண்டு தொகுப்புநூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூர்: புதியநிலா மாத இதழின் பத்தாமாண்டு தொகுப்புநூல் வெளியீட்டுவிழா சுல்தான் பள்ளிவாசல் இணைமண்டபத்தில் 19-08-2007 மாலை 5.00 மணிமுதல் இரவு 8.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

தமிழறிஞர் டாக்டர் சுப.திண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவுக்கு மா.அன்பழகன் மற்றும் எம்.ஒய்.முஹம்மது ர•பீக் முன்னிலை வகிக்க , திரு எம். இலியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மூத்த கவிஞர் திரு இக்குவனம் தொகுப்பாசிரியர் திரு ஜஹாங்கீர் அவர்களைப் பாராட்டி அந்தாதி வெண்பா பாடி மகிழ்ந்தார்.

தொலைக்காட்சிப் படைப்பாளர் திரு அ.முகம்மது அலி , சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக ஆங்கில விரிவுரையாளர் டாக்டர் சித்ரா சங்கரன், பன்னூலாசிரியர் டாக்டர் ஹிமானா சையத் வாழ்த்துரை வழங்கினர்.

புதியநிலா பத்தாமாண்டு நிறைவு தொகுப்பு மலரை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி சுமார் ஒரு மணி நேரம் நூலின் நயங்களைச் சுவையுடன் விரித்துரைத்தார்.

சிங்கப்பூர் எம்.இ.எஸ். உரிமையாளர் ஹாஜி அப்துல் ஜலீல், ஜமால் கஜூரா உரிமையாளர் ஹாஜி ஜமால் முஹம்மது ஆகியோர் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
புதியநிலா இதழின் நிறுவனரும் சிறப்பாசிரியரும் சிறப்பு மலரின் தொகுப்பாசிரியருமான திரு மு.ஜஹாங்கீர் ஏற்புரையும் நன்றியுரையும் நிகழ்த்தினார்.

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ நிகழ்ச்சிகளை கவித்துவமாய்த் தொகுத்து வழங்கிய அவ்விழாவில் சிங்கப்பூர் கவிச்சோலை/ கவிமாலைக் கவிஞர்கள் ஆறுபேர் 'புதியநிலா' என்ற தலைப்பில் கவிதை பாடியமைக்காக நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.

சிங்கப்பூரின் முன்னணி பத்திரிகையாளர்கள் /படைப்பிலக்கியவாதிகள்/தமிழறிஞர்கள்/வணிகர்கள்/பிரமுகர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்ட அவ்விழா ஓர் இலக்கியச் சங்கமமாகத் திகழ்ந்தது.

செய்தி: 'ஐனுல் மாஹிரா' , சிங்கப்பூர்

சீனாவின் ஏற்றுமதிகள் குறித்து தொடர்ந்து கவலைகள்

சீனாவின் ஏற்றுமதிப் பொருட்களின் தரம் குறித்த கவலைகள் தற்போது அந்நாட்டில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கும் பரவியுள்ளன. சீனாவில் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆடைகளில், அதிக அளவு ஃபார்மால்டிஹைட் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஆராயும் புலனாய்வு தற்போது நியூசிலாந்தில் துவங்கியுள்ளது.

துணி பூஞ்ஞைக்காளானால் பாதிக்கப்படாமல் இருக்க இந்த ரசாயனப் பொருள் உதவுகிறது. இருந்தும் இது தோலிலும், கண்ணிலும், தொண்டையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியது. சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொம்மைகள், டயர்கள், உணவுப் பொருட்கள், பற்பசைகள் போன்ற பொருட்களால் உடலுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் குறித்த அச்சங்களைத் தொடர்ந்து தற்போது இந்தப் பிரச்சனை வந்துள்ளது.

இது போன்ற அச்சங்கள், வர்த்தக பாதுகாப்புக்கான புதிய உத்தி என்று சீனா வர்ணித்திருப்பது முற்றிலும் தவறானது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் பீட்டர் மெண்டல்சன் கூறியுள்ளார்.

தமிழ் பிபிசி

China reports quality problems with U.S. soybean imports - International Herald Tribune
Chinese-made blankets recalled over formaldehyde content in Australia, New Zealand - International Herald Tribune
FT.com / In depth - Poison clothes add to China export scares

திருச்சி - இலங்கைத் தமிழருக்கு வந்த சோதனை - 3 ஏட்டு கைது

திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள எல்.ஐ.சி. காலனி காவேரி நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது பெரியம்மாவின் மகன் ரமேஷ் (32). இலங்கைத் தமிழரான இவர், லண்டனில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவருக்கு ரோகிணி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்ற இவர்கள், லண்டன் நகரில் உள்ள லெஸ்தர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

கடந்த 3-ம் தேதி லண்டனில் இருந்து திருச்சி வந்த ரமேஷ், தனது உறவினரான ஜெயராஜ் வீட்டில் தங்கியிருந்தார். 19-ம் தேதி அதிகாலை ஜெயராஜ் வீட்டுக்கு வந்த 6 பேர் தங்களை சிபிசிஐடி குற்றப்பிரிவு போலீசார் என்று அறிமுகம் செய்து கொண்டனர். வீட்டில் இருந்த ரமேஷ் யார் என்று கேட்டனர்.

பின்னர், ரமேஷைப் பார்த்து, ‘உனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கு சில ஆதாரங்களும் உள்ளது. உன் மீது வழக்கு போடாமல் இருக்க எங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்Õ என்று கூறி மிரட்டினர்.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.

சதாமின் மகளை இராக்கிடம் ஒப்படைக்க ஜோர்தான் மறுப்பு

இராக் முன்னாள் அதிபர் மறைந்த சதாம் ஹுசேனின் மூத்த மகள் ரகாத்தை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என இராக் விடுத்த கோரிக்கையை செவ்வாய்க்கிழமை நிராகரித்தது ஜோர்தான்.

பல ஆண்டுகளுக்கு முன் சதாம் ஹுசேன் மற்றும் அவரது மகன்களை இராக் அரசு கைது செய்தபோது, சதாமின் 2 மகள்களும் ஜோர்தான் நாட்டுக்கு குடிபெயர்ந்தனர். தந்தையின் மறைவுக்கு கூட அவர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜோர்தானில் உள்ள மூத்த மகள் ரகாத், தனது தந்தையின் மரண தண்டனைக்குப் பின் அவரது ஆதரவாளர்களுடன் கைகோர்த்து கொண்டு இராக்கில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியது.

இதையடுத்து, ரகாத்தை தங்கள் நாட்டு விசாரணைக்கு உட்படுத்த உதவி செய்ய வேண்டும் என்று இன்டர்போலிடம் இராக் அரசு கேட்டது. இன்டர்போலும் ஜோர்தான் அரசு, ரகாத்துக்கு முன்னதாக நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், ரகாத்தை ஒப்படைக்க ஜோர்தான் மறுப்பு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி

"மத்திய அரசு கவிழாது" - கருணாநிதி பேச்சு.

மத்திய அரசு கவிழாது என்று முதல்வர் கருணாநிதி உறுதிபடக் கூறினார். மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசும் கவிழாது என்று ஜீவானந்தம் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவர் சூசகமாகக் குறிப்பிட்டார்.

கலைவாணர் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் பேசியது:

"இது அரசு விழா, நிச்சயமாக அரசு விழா அதை பன்மையில் புரிந்துகொள்ளுங்கள். மாநில அரசும், மத்திய அரசும் விழாது -என்பதே அதன் பொருள்."

எனக்கும் ஜீவானந்தத்திற்கும் இடையே முரண்பட்ட கருத்துகள் இருந்தபோதிலும், அவரைப் பற்றி நானும் என்னைப் பற்றி அவரும் கடுமையாக விமர்சித்தபோதிலும் ஒருவரை ஒருவர் மதிக்கும் போக்கு இருவரிடமும் இருந்தது.

இதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரும் வெளிப்படுத்தியுள்ளார். இன்றளவும் நான் வெளிப்படுத்திக் கொண்டுதான் வருகிறேன்.

1955-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தமிழ் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று ஜீவானந்தம் வலியுறுத்திப் பேசினார். அவரது கருத்தை வலியுறுத்தித்தான் தமிழை ஆட்சிமொழியாக, நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக கொண்டுவர அரசு முயற்சிகள் எடுக்கும் என்று கடந்த ஜனவரி 27-ம் தேதி சட்டப்பேரவையில் குறிப்பிட்டேன்.

மத்திய அரசுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இங்கே பலரும் குறிப்பிட்டார்கள். அத்தகைய நெருக்கடியை நாம் ஒற்றுமை மூலம் வென்று காட்டுவோம்.

அதுவும் முடியவில்லை என்றால் ஜீவா குறிப்பிடுவதைப்போல ஜனசக்தியைத் திரட்டி வெல்வோம் என்றார் கருணாநிதி.

தினமணி

சிபு சோரென் விடுதலை:சிபிஐ தலைகுனிவு

கொத்ரோக்கியை கோட்டைவிட்ட சிபிஐயிற்கு மற்றுமொரு ஏமாற்றமாக தில்லி உயர்நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சொரெனை அவரதி தனிச்செயலர் சசிநாத் ஜாவை கொலைசெய்த குற்றத்திலிருந்து போதிய சாட்சிகள் இல்லாததால் விடுவித்தது. கீழ்நீதிமன்றம் வித்திதிருந்த ஆயுள்தண்டனையை இரத்துசெய்த நீதியரசர்கள் ஆரெஸ் சோதி மற்றும் எஹ் ஆர் மல்ஹோத்ரா அடங்கிய பென்ச் சிபிஐயின்சாட்சிகளை காட்டமுடியாத 'இயலாமை'யை மிகவும் மோசமாக எடுத்துரைத்தது. அவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற நால்வரையும்-- நந்தகிஷோர் மேத்தா, சைலேந்திர
பட்டாசார்யா,பசுபதிநாத் மேத்தா, அஜய்குமார் மேத்தா-- அதே காரணங்களால் விடுதலை செய்தது.

The Hindu News Update Service

மும்பையில் பதின்மவயது சிறுவன் கொலை


பதினாறு வயது அத்னன் பத்ரவாலாவின் கொலை மும்பைநகரையே கலக்கிக் கொண்டிருக்கிறது. சனிக்கிழமையன்று காணாமல்போன சிறுவனின் பெற்றோருக்கு ரூ.இரண்டு கோடி கேட்டு வந்த தொலைபேசி அழைப்பின் பின்னரே அது ஒரு கடத்தல் முயற்சி எனத் தெரியவந்தது. அவன் 'ஆர்குட்' தளம் மூலம் அறிமுகமான நண்பர்களால் கடத்தப் பட்டதும் பின் செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து பீதியடைந்த பதின்மவயது குற்றவாளிகள் அவனைக் கழுத்தை நெறித்து கொலை செய்ததும் நேற்றும் இன்றும் ஊடகங்களில் பேரிடத்தை எடுத்துக் கொண்டுள்ளன. சமூக கூட்டமைப்பு தளங்களான ஆர்கூட், மைஸ்பேஸ், ஃபேஸ்புக் முதலியவற்றின் தாக்கம் குறித்து பல விவாதங்கள் நடத்தப் படுகின்றன.

கைது செய்யப்பட்டுள்ள மூவரில் 28 வயதான சுஜித் நாயர்தான் இச்சதியின் இயக்குவிசையென காவலர்கள் கருதுகின்றனர். முன்னாள் BPO ஊழியரான இவர் கடந்த ஒரு வருடமாக வேலை ஏதும் இன்றி இருந்திருக்கிறார். பிணைப்பணத்துடன் துபாய்க்கு தப்பியோட திட்டமிட்டிருந்தார்.ஆனால் பதின்ம வயது கூட்டாளிகள் பயந்து அத்னனுக்கு தூக்கமாத்திரைகளைக் கலந்து மது கொடுத்து பின்னர் கழுத்து நெரித்து கொன்றுள்ளனர்.

ஆனால் இரு சிறுவர்களின் பெற்றோர்கள் தங்கள் மக்கள் தவறிழைக்க வாய்ப்பேயில்லை என ஊடகங்களில் கூறிவருகிறார்கள். சிலமாதங்கள் முன் பதின்ம வயது சிறுவன் கையில் ஸ்கோடா காரைக் கொடுத்து நடைபாதை மக்களை வதம்செய்த மும்பையில் பொறுப்பற்ற பெற்றொர்களின் மற்றுமொரு அத்தியாயமே இது.
NDTV.com: New angle emerges in Adnan murder case

DNA - Mumbai - Adnan murder: 3 sent to cop custody - Daily News & Analysis

தாக்காவில் மாணவர் கலவரம்

பங்களாதேசத்தின் இடைக்கால அரசு அடக்கமுயன்றாலும் மாணவர்களின் கலவரம் தாக்கா நகரெங்கும் பரவி வருகிறது. நேற்று இரவு கல்வி அமைச்சர் அயூப் கத்ரியின் வீட்டை சூழ்ந்து கல்லெறிந்தனர்.தாக்கா பல்கலையில் மாணவர்களை இராணுவத்தினர் அடித்ததாக கூறப்படும் நிகழ்வை நீதிபதி ஒருவர் மூலம் விசாரிக்கவும் பல்கலைக்கழகத்திலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்ளவும் அரசு முடிவு செய்துள்ளது.

NDTV.com: Student riots spread in Dhaka

ஆந்திர ஆளுநராக திவாரி பதவியேற்பு

மூத்த காங்கிரஸ் தலைவர் என் டி திவாரி இன்று ஆந்திர மாநில ஆளுநராக இராஜ்பவனில் நடந்த எளிய நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் ஜி எஸ் சிங்வி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். மாநில முதல்வர் இராஜசேகர ரெட்டி, அவரது அமைச்சர்கள் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் இவ்வைபவத்தில் பங்கேற்றனர்.உத்தரபிரதேச முதல்வராக மூன்றுமுறையும் புதியதாக உருவாக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநில முதல்வராகவும் திவாரி பணியாற்றியுள்ளார். இதுவரை ஒரிசாவின் ஆளுநர் ராமேஷ்வர் தாக்குர் ஆந்திராவிற்கும் ஆளுநராக அதிகபொறுப்பு வகித்துவந்தார்.

The Hindu News Update Service

பெங்களூருவில் டெங்கு சுரம்

கடந்த ஜூலை மாதத்தில் 26 பேரும் இந்த மாதத்தில் இதுவரை ஏழுபேரும் பாதிக்கப்பட்டிருக்கும்நிலையில் எம் எஸ் இராமையா நினைவு மருத்துவமனையினர் பெங்களூருன் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில்் 'டெங்கு' விஷ சுரம் பரவிவருவதாக கருதுகின்றனர். இதனை BBMP மறுத்துள்ளது.

Dengue on the rise in Bangalore-Bangalore-Cities-The Times of India

பி.டி.ஐ தலைவராக 'தி ஹிண்டு' ரவி தேர்வு

செய்தி முகவர் நிறுவனமான பி.டி.ஐ. நிறுவனத்தின் தலைவராக, "தி ஹிண்டு' நாளிதழ் ஆசிரியர் என்.ரவி, ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இதுவரை துணைத் தலைவராக இருந்துவந்தார்

"வாஷிங்டன்' இதழின் செய்தியாளராக பணியாற்றிய ரவி, 1991ம் ஆண்டு முதல், "தி இந்து' நாளிதழ் ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். .பி.டி.ஐ., நிறுவனத்தின் 59வது ஆண்டு வருடாந்திரப் பொதுக்குழு கூட்டத்தில் பிலிப் மாத்யூ (மலையாள மனோரமா), வினீத் குமார் ஜெய்ன் (டைம்ஸ் ஆப் இண்டியா), சேகர் குப்தா (இண்டியன் எக்ஸ்பிரஸ்), வீரேந்திர குமார் (மாத்ரு பூமி), சாந்த குமார் (டெக்கான் ஹெரால்டு), விஜய் குமார் சோப்ரா (ஹிந் சமாச்சார்) ஆகியோர், பி.டி.ஐ.,யின் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களில் அடங்குவர்.

புவியியல் வல்லுனர் சி.வி.சிட்னிஸ், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.பி.பரூச்சா, புகழ்பெற்ற நீதிபதி பாலி நரிமன் ஆகியோர், பொது நல இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஈராக்கில் ஹெலிகாப்டர் வீழ்ச்சி:14 US இராணுவத்தினர் மரணம்

வடக்கு ஈராக்கில் ஹெலிகாப்டர் ஒன்று நொறுங்கி விழுந்ததில் 14 அமெரிக்க படைவீரர்கள் இறந்தனர். இது கடந்த இரண்டாண்டு காலத்தில் நடந்த மிக மோசமான விபத்தாகும்.அதேநேரம் பாஜி நகரில் காவல்நிலையத்தின் வாயிற்கதவில் எண்ணெய் இலாரியுடன் தற்கொலைப்படையினர் மோதியதில் 20 பேர் வரை மரணமடைந்துள்ளனர்.

மேலும்...World | Africa - Reuters.com

நாடாளுமன்றத்தில் ஜப்பான் பிரதமர்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் இணைந்த கூட்டத்தில் ஜப்பானின் பிரதமர் சின்சோ அபே இன்று உரையாற்றினார். அணுசக்தி எரிபொருள் விற்கும் குழுமத்தைச் சேர்ந்த ஜப்பானின் பிரதமர் இவ்வாறு இந்த நேரத்தில் உரையற்றியது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இடதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி இருநாட்டு பிரதமர்களின் பேச்சுவார்த்தையில் அணுசக்தி ஒத்துழைப்பு முக்கிய இடம் வகிக்கும். பொருளாதார பங்கீடல் மற்றும் தில்லி- மும்பை தொழிற்தடம் திட்டத்திற்கு பண உதவி ஆகியவை குறித்து அபேயின் தற்சமய வருகையின்போது முடிவெடுக்கப்படும்.

NDTV.com: Japan PM addresses Parliament

39 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த விமானப்படை வீரரின் சடலம்.

இமயமலைப் பகுதியில் கடந்த 39 ஆண்டுகளுக்கு முன் நடந்த விமான விபத்தில் பலியான இந்திய வீரரின் சடலம் நேற்று முன் தினம் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் தகனம் செய்யப்பட்டது.

காஷ்மீரில் லே பகுதியில், கடந்த 1968ம் ஆண்டு, பிப்., 7ம் தேதி, விமானப் படைக்கு சொந்தமான ஏ.என். 12 என்ற விமானம் விபத்துக்குள்ளானது. இமயமலையை அடுத்துள்ள சந்திரபாகா மலைப் பகுதியில் ஆறாயிரத்து 264 மீட்டர் உயரத்தில் விபத்து நடந்ததால், அந்த விமானத்தில் இருந்த ராணுவ மற்றும் விமானப் படையைச் சேர்ந்த 102 பேரும் இறந்து விட்டதாக கருதப்பட்டது.இந்நிலையில், கடந்த 2003ம் ஆண்டு ஜூலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் எஞ்சிய பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

அதன் பிறகு, ஒவ்வொரு ஆண்டும், கோடைக் காலத்தில், விமானத்தின் வேறு பாகங்களோ அல்லது வீரர்களின் உடல்களோ கிடைக்குமா என்று ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தி வந்தது.அதன்படி, இந்த ஆண்டும் கடந்த 2ம் தேதி முதல் தேடுதல் வேட்டை தொடங்கியது. அப்போது, பனி மலையால் மூடப்பட்ட நிலையில், மூன்று சடலங்களை இந்திய ராணுவம் கண்டு பிடித்தது. அவற்றில், ஒரு சடலம் ராணுவ சீருடை மற்றும் அடையாள அட்டையுடன், அப்படியே இருந்தது. அந்த அடையாள அட்டையில் இருந்த குறிப்புகளைக் கொண்டு, அப்போது 20 வயதாக இருந்த மகேந்திர நாத் புகோன்வாஸ் என்னும் வீரருடைய சடலம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.அவரது குடும்பம் குறித்து விசாரித்ததில், அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து, 360 கி.மீ., தொலைவில், தியோதாய் என்ற கிராமத்தில் அவர்கள் வசித்து வருவது தெரியவந்தது. அதனால், மகேந்திர நாத் உடல், தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டியில் வைத்து, கடந்த திங்கட்கிழமை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று, முழு ராணுவ மரியாதையுடன், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில், மகேந்திர நாத் உடல் தகனம் செய்யப்பட்டது.

ராணுவ வீரர் மகேந்திராவின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் மூன்று சகோதரர்கள். அவர்களில் இரண்டாவது சகோதரர் துபேன் திருமணம் கடந்த 1967ல் நடந்தது. அப்போது தான், மகேந்திரா, தனது சொந்த ஊருக்கு வந்து, குடும்பத்தினருடன் சேர்ந்து இருந்தார்.இதுகுறித்து துபேன் கூறுகையில், "எங்கள் குழந்தைகளிடம் காட்டுவதற்கு, துரதிர்ஷ்டவசமாக மகேந்திராவின் போட்டோ கூட எங்களிடம் இல்லை. கடைசியாக அவனை சடலமாக பார்ப்பதற்கு, எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது' என்றார்.

துர்காநாத் என்ற இளைய சகோதரர் கூறும் போது, "எனது சகோதரர் பயணம் செய்த விமானம், கடந்த 39 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கியது. அந்த இடத்தில் இருந்து, தற்போது சடலம் கிடைத்து இருப்பதை, எங்களால் நம்பவே முடியவில்லை. இதை தெய்வாதீன செயல் என்று தான் கூற வேண்டும். இது கனவு போல இருக்கிறது. எனினும், எனது அன்பு தம்பியின் சடலம் கிடைத்து, அதற்கு இறுதி மரியாதை செய்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்' என்றார்.மூத்த சகோதரர் ஜித்தன் கூறுகையில், "விமான விபத்து நடந்தது குறித்து கேள்விப்பட்டு, நாங்கள் சில நாட்கள் காத்திருந்தோம். ஆனால், அதன் பிறகு, நாங்கள் இறுதிச் சடங்கு செய்து விட்டோம். தற்போது, இரண்டாவது முறையாக, இறுதிச் சடங்கு செய்கிறோம்' என்றார்.

தினமலர்

"சிறுபான்மையினருக்காகத் தொடர்ந்து போராடுவேன்" - மதானி

கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான மதானி கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து விடுதலையான பிறகு அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். கேரளாவில் பல்வேறு கட்சி தலைவர்களும் மதானியை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள்.

கோழிக்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மதானி,

கேரள மக்கள் ஜனநாயக கட்சி சிறுபான்மை மக்களுக்காகத் தொடங்கப்பட்டது. சிறுபான்மை மக்கள் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து போராடுவோம். பிரச்னைகளின் அடிப்படையில் இடதுசாரி அரசுக்கு ஆதரவு கொடுக்கப்படும்
என்றார்.

மருத்துவர் ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியா செல்கிறார்

லண்டன் மற்றும் கிளாஸ்கோ விமான நிலைய கார் குண்டு சம்பவங்களைத் தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த மருத்துவர் ஹனீப் கைது செய்யப்பட்டார்.அவரது ஆஸ்திரேலிய நுழைமதியும் தடை செய்யப்பட்டது. ஒரு மாத கால சிறைவாசத்துக்கு பிறகு ஹனீப் குற்றமற்றவர் என்று கூறி அவரை ஆஸ்திரேலிய நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதைத்தொடர்ந்து இந்தியா வந்த ஹனீப், தான் மீண்டும் ஆஸ்திரேலியா சென்று பணியாற்ற விரும்புவதாகவும், தடை செய்யப்பட்ட தனது நுழைமதியை மீண்டும் தர வேண்டும் என்றும் கோரினார். இதுதொடர்பாக ஆஸ்திரேலியா நீதிமன்றத்தில் ஹனீப் தொடர்ந்த வழக்கில் ஹனீப்புக்கு மீண்டும் நுழைமதி வழங்குமாறு உத்தரவானது. இதையடுத்து அவர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை குயின்ஸ்லாந்து சுகாதார அமைச்சர் ஸ்டீபன் ராபர்ட்சன் உறுதிபடுத்தியுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் என்ன தவறு? - உச்ச நீதிமன்றம் கேள்வி.

பிற்படுத்தபட்டோர்க்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதில் என்ன தவறு உள்ளது என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய விசாரணையின் போது இடஒதுக்கீட்டை அமல் படுத்துவதில் என்ன தவறு என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் நாட்டில் உள்ள 20 முதல் 30 சதவீதமே உள்ள பிரிவினர் மட்டும் சலுகைகளை பெற வேண்டும் என்பது விதியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமலர்

கிரிக்கெட்:இங்கிலாந்துடன் இந்தியா படுதோல்வி.

இங்கிலாந்து அணியுடனான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா படு மோசமாக ஆடி தோல்வியைத் தழுவியது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் ஏற்கனவே வென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. செளதாம்டனில் முதலாவது போட்டி நடந்தது. இதில் இந்திய அணி டாஸ் வென்றது. ஆனால் பேட்டிங்கைத் தேர்வு செய்யாத கேப்டன் டிராவிட், இங்கிலாந்து அணியை பேட் செய்ய வருமாறு பணித்தார். இங்கிலாந்து அணியின் தொடக்கமே அபாரமாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரரான அலிஸ்டைர் குக் படு சிறப்பாக ஆடினார். அவர் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நிலையில் மறு முனையில் பிரியர் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து இயான் பெல், குக்குடன் இணைந்தார். இருவரும் சேர்ந்து ஆடத் தொடங்கியபோது ஆட்டத்தில் பொறி பறந்தது. இருவரும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். இவர்களைப் பிரிக்க இந்தியப் பந்து வீச்சாளர்கள் கடுமையாக திணறினர். அதிரடியாக ஆடிய குக் 102 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்.பி.சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆனாலும் இயான் பெல்லின் ஆட்டத்தில் சற்றும் தொய்வில்லை. தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 126 ரன்களைச் சேர்த்தார். கெவின் பீட்டர்சன் ஆட்டமிழக்காமல் 33 ரன்களைக் குவித்தார். இறுதியில், 50 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 288 ரன்களை சேர்த்தது இங்கிலாந்து அணி. கடினமான வெற்றி இலக்குடன் ஆடத் தொடங்கிய இந்தியாவுக்கு எடுத்தவுடனேயே சோதனை காத்திருந்தது. இளம் வீரர்களான திணேஷ் கார்த்திக்கையும், கவுதம் காம்பீரையும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் வழக்கம் போல சச்சின் டெண்டுல்கரும், கங்குலியும் தொடக்க வீரர்களாக இறக்கப்பட்டனர். ஆனால் இருவரும் மோசமாக ஆடி துரிதமாக ஆட்டமிழந்தனர். கங்குலி 2 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.

டெண்டுல்கர் 17 ரன்களையே சேர்த்தார். பின்னால் வந்த கம்பீர் 3 ரன்களே போதும் என நினைத்து வெளியேறினார். இப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி தடுமாறத் தொடங்கியது. கேப்டன் டிராவிட் மட்டும் சற்று சமாளித்து ஆடினார். அவரும் கூட 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் திணேஷ் கார்த்திக் மட்டும் சிறப்பாக ஆடி 44 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா. இதன் மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து முதல் வெற்றியை சுவைத்தது. பிரமாதமாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்த இயான் பெல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை: கேள்வி கேட்ட பயணிகளை இறக்கிவிட்ட ஏர்-டெக்கன்!!

சென்னை: விமானத்தில் ஏர்-கண்டிசன் செயல்படாததை தட்டிக் கேட்ட 4 பயணிகளை இறக்கிவிட்ட ஏர்-டெக்கன் நிறுவனம் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்து அசிங்கப்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இன்று இச் சம்பவம் நடந்தது.

இன்று காலை சென்னையில் இருந்து மும்பைக்குச் செல்ல இருந்த ஏர் டெக்கன் விமானத்தில் ஏசி செயல்படவில்லை. இதனால் பயணிகள் புழுக்கத்தில் தவித்தனர். விமானத்தில் 132 பயணிகள் இருந்தனர்.

இது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த ராய் (56) விமானப் பணிப் பெண்களிடம் புகார் செய்தார். ஆனால், அவர்கள் எந்த பதிலும் தரவில்லை. இதையடுத்து அவரது மனைவி (வயது 49) மற்றும் மகள் (வயது 25) ஆகியோர் பணிப் பெண்களை கேள்வி கேட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக கார்த்திகேயன் (47) என்பவரும் பேசினார்.

ஏசி செயல்படாததற்கு பதில் சொல்ல மறுத்த விமான ஊழியர்கள், அவர்களை விமானத்தை விட்டு இறங்குமாறு கூறினர். அதை ஏற்க 4 பயணிகளும் மறுத்தனர்.

இதையடுத்து இவர்கள் இறங்காவிட்டால் விமானத்தை கிளப்ப மாட்டோம் என விமானிகளும் முரண்டு பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து ஏர் டெக்கன் நிறுவன ஊழியர்கள் விமான நிலைய பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் தகவல் கூறினர். அவர்கள் விமானத்தில் ஏறி 4 பயணிகளையும் வெளியேற்றினர்.

பின்னர் அவர்களை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக 6.20க்குப் புறப்பட்டுச் சென்றது.

ஏர் டெக்கன் மீது தவறு இருந்தாலும் பயணிகளை அவர்கள் நடத்திய விதம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இறக்கிவிடப்பட்ட பயணிகள் மீது ஏர் டெக்கன் புகார் ஏதும் தரவில்லை. இதையடுத்து அவர்களை போலீசார் விடுவித்தனர். இன்று மாலை விமானத்தில் அவர்களை மும்பைக்கு அழைத்துச் செல்வதாக ஏர் டெக்கன் உறுதியளித்துள்ளது.

செய்தி வழி : தட்ஸ்தமிழ்.காம்

இணையத்தில் இன்று - 08/21/07

இரண்டாம் திருமணத்தில் பலர் ஆர்வம். இந்திய நகரங்களில் விவாகரத்துக்கள் சகஜமாகி வருவதைக் காட்டுகிறது இணையத் தளம்.
Website shows urban India shedding divorce stigma - Reuters

ஸ்கைப் மீண்டும் சேவையைத் துவங்கியது
Skype restores service after outage last week - Reuters

குழந்தை பிறந்ததும் இணையத் தளம் பதிவு செய்யும் பெற்றோர்கள்.
Tots Getting Internet Identity at Birth - FOX News

இணையத்தில் போதைப்பொருள் விற்றவர் கைது.
High-ranking drug control official detained Interfax Russia



வாஜ்பாய் சுகவீனம் - மருத்துவமனையில் அனுமதி

வாஜ்பாய் சுகவீனம் - மருத்துவமனையில் அனுமதி

ஆகஸ்ட் 21, 2007



டெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நிலை ஸ்திரமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை செய்தித் தெடார்பாளர் சக்தி குப்தா கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நடுக்கமும், மயக்கமும் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது. அவரை டாக்டர்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர். அவரது உடல் நிலை தற்போது ஸ்திரமாக உள்ளது. தொடர்ந்து அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்றார்.

www.thatstamil.com

-o❢o-

b r e a k i n g   n e w s...