.

Monday, September 10, 2007

ஜெயலலிதா தேர்தல் வழக்கு

அதிமுக தலைவர் ஜெயலலிதா 2001 தமிழக தேர்தல்களில் போட்டியிட்டபோது விதிமீறல்கள் எதுவும் நடைபெறவில்லை என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. நடப்பு வழக்கில், தேர்தல் அதிகாரிகளின் கவனமான ஆய்வின்படி, 177 பிரிவு( பொய்த் தகவல்களை அரசு அதிகாரிக்கு தருதல்) படி எந்தக் குற்றமும் காண இயலவில்லை என கூறியுள்ளது. தேர்தல் விண்ணப்பங்களில் பொய்த் தகவல்கள் கூறியதாக தன் மீது நடவடிக்கை எடுக்க சென்னை நீதிமன்றத்தின் ஜூன் 13 ஆணையிட்டதை எதிர்த்து முன்னாள் முதல்வர் உச்சநீதிமன்ரத்தில் பதிந்த மேல்முறையீட்டினை ஒட்டி தேர்தல் ஆணையம் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

உயர்நீதிமன்றம் தேர்தல் ஆனையத்தை குறைகண்டிருந்ததை குறிப்பிட்டு " தேர்தல் அதிகாரிகளே சட்டப்படி விண்ணப்பங்களை வாங்கவும் பரிசீலிக்கவும் தகுதியானவர்கள்; அதனால் இதற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள்தான் இம்மனுக்கள் குற்றவியல் சட்டம் பிரிவு 177 உடன் பிரிவு 195 படி நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள்; அவர்கள் இவ்விதயத்தில் செயல் நீதிமன்ற அதிகாரத்தைப் பெறுகிறார் " என அவர்களை கைகாட்டி விட்டது.

இந்த நிலைப்பாட்டால் நாளை தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியுமா இல்லை புதிய பிரச்சினைகள் கிலம்புமா எனத் தெரியவில்லை.

The Hindu News Update Service

ஃபெடரர் மீண்டும் மீண்டும்!!!

யு.எஸ் ஓப்பன் டென்னிஸ் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில்
ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் ஃபெடரரும், செர்பியா நாட்டின்
நோவாக் ஜோகோவிச்சும் இன்று விளையாடினர்.

மிகப்பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 7- 6 , 7-6 , 6 -4
என்ற நேர் செட் கணக்கில் ரோஜர் ஃபெடரர் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இது இவருடைய நான்காவது நேரடி யு.எஸ் சாம்பியன் பட்டமாகும்.
2004,2005,2006 மற்றும் 2007 ஆண்டுகளில் பட்டங்களை வென்றுள்ளார்.

உலக ஆட்டக்காரர்கள் நிலைப்பட்டியலில் முதலாம் நிலையை தொடர்ந்து
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தக்க வைத்து கொண்டிருக்கும் ரோஜர் ஃபெடரர்
இன்றைய போட்டியில் வென்ற பரிசுத்தொகை 24 இலட்சம் டாலர்கள்.

Sunday, September 9, 2007

சற்றுமுன்: ஸ்ரீகாந்த் - வந்தனா


புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க....அப்ப பழைய கல்யாணம்?

சற்றுமுன் செய்திகள் இப்போது இங்கே....http://satrumun.com/

Friday, September 7, 2007

திட்டமிட்டபடி படகுகளில் யாழ்ப்பாணம் செல்வோம்!

திட்டமிட்டபடி இராமேஸ்வரத்திலிருந்து எதிர்வரும் 12 ஆம் தேதி உணவு மருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு படகுகளில் யாழ்ப்பாணம் செல்வோம். இதில் எந்தவித மாற்றத்துக்கும் இடமில்லை என்றும் தமிழர் விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 12 ஆம் தேதி வரை இரு பிரிவுகளாக படகு பிரசார பயணம் மேற்கொள்வோம். மதுரையில் இன்று இடம்பெறும் பிரசார தொடக்க விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், மற்றும் சேதுராமன், ஜனதாதள மாநில பொதுச் செயலாளர், ஜான் மோசஸ் ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நெடுமாறன் மேலும் கூறியதாவது, தமிழின விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இலங்கை யாழ்ப்பாணத்தில் பட்டினி கிடக்கும் தமிழர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் உணவு மற்றும் மருந்து பொருட்களை திரட்ட தொடங்கினோம். 2 மாதங்களில் ரூ. 2 கோடி மதிப்புள்ள மருந்து மற்றும் உணவுப்பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.இந்த பொருட்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கு அனுப்ப இந்திய தேசிய செஞ்சிலுவைச் சங்கத்தை கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி அணுகினோம். அவர்கள் அதற்கு உடன்பட்டனர்.

இதைத் தொடர்ந்து இலங்கைக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை கொண்டு செல்ல அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடந்த 9.2.07 அன்று கடிதம் எழுதினோம். மேலும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்கள்.

Tuesday, September 4, 2007

நாளை முதல் satrumun.com

சற்றுமுன் செய்தித் தளம் நாளை காலை இந்திய நேரம் 6 மணி முதல் ப்ளாகர் சேவையிலிருந்து விலகி satrumun.com எனும் தனித் தளத்திலிருந்து இயங்கவிருக்கிறது. satrumun.com பல மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் இயங்கும். விரைவில் ஒவ்வொன்றாக இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.

சற்றுமுன்னின் Blogger செய்தி ஓடையைப் (Feed) பயன்படுத்தி வந்தவர்கள் புதிய ஓடைக்கு மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். புதிய ஓடை http://feeds.feedburner.com/satrumun

சற்றுமுன் மின்னஞ்சல் சேவை தொடர்ந்து கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் புதிய தளத்தில் பதிந்துகொள்ள வேண்டுகிறோம். சிரமத்துக்கு வருந்துகிறோம்.

புதிய தளத்தில் பயனர் கணக்கு உருவாக்கிக் கொண்ட உறுப்பினர்கள் மட்டுமே பின்னூட்டமிட இயலும் என்பதால் உங்கள் பயனர் கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம். பயனர் கணக்கு உருவாக்க இங்கு செல்லுங்கள்.

புதிய தளம் குறித்த கருத்துக்கள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

சற்றுமுன்.com தமிழ்மணம் திரட்டியில் தெரிவதில் தாமதம் இருப்பதால் தமிழ்மணம் பயனர்கள் நேரடியாக சற்றுமுன் தளத்தைப் பார்வையிடக் கேட்டுக் கொள்கிறோம்.

சற்றுமுன் குழுவில் இணைந்து செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் பதிவர்களை சற்றுமுன் அன்புடன் வரவேற்கிறது. satrumun at gmail dot com என்ற முகவரிக்கு மடல் செய்யவும்.

satrumun.comல் சந்திப்போம்.

கலக்கும் சென்னை - தபால் துறையில் GPS - வீடியோ.

தபால் பட்டுவாடா செய்யும் வாகனங்களில் GPS பொருத்தி தபால்களை சரியான நேரத்தில் சென்றடைய சென்னைத் தபால் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

மேலும் செய்திக்கு "CNN - IBN TV..."


விடுதலைப் புலிகளின் புத்தகங்களை வைத்திருந்தவர் கைது

சென்னையிலிருந்து கோலாலம்பூருக்குச் செல்லவிருந்த சுரேஷ் என்கிற 29வயது இளைஞர், விடுதலைப் புலிகள் பிரசுரித்த புத்தகங்களை வைத்திருந்ததால் க்யூ பிரிவு காவால்துறையினரால் கைது செய்யப்பட்டார். சுரேஷ் திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடியைச் சார்ந்தவர்.

Passenger carrying pro-LTTE books held - The hindu

தீவிரவாத பட்டியல்: வடகொரியாவை நீக்க அமெரிக்கா நிபந்தனை.

தீவிரவாத நாடுகள் பட்டியல் : வடகொரியாவை நீக்க அமெரிக்கா நிபந்தனை


வடகொரியாவை தீவிரவாத நாடுகள் பட்டியலிலிருந்து விடுவிக்க அந்நாட்டிடமிருந்து மேலும் சில நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. கடந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற்ற அமெரிக்க வடகொரிய தலைவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா தனது தீவிரவாத நாடுகள் பட்டியலிலிருந்து வடகொரியாவை நீக்கும் என்று வடகொரிய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இதை மறுத்த அமெரிக்க பிரதிநிதி வடகொரியா அணுஆயுத திட்டங்களில் மேலும் சில நம்பிக்கையான செயல்களில் ஈடுபடும் வரை அந்நாட்டை பட்டியலிலிருந்து நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார்.

தினமலர்

'ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்காது' - ஈரான் அதிபர்

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்காது என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறார் ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜாத். அதற்கான வலுவான கணித ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக கூறுகிறார் அவர்.

"அடிப்படையில் நான் ஒரு பொறியாளர். அதிலும், கணக்கிடுதல், அட்டவணைப்படுத்துதலில் நிபுணர். என்னுடைய கணித ஆற்றலை பயன்படுத்தி பல மணி நேரம், விதவிதமான ஹிபோதிசஸ் கணக்குகளை போட்டுப் பார்த்தேன். இதிலிருந்து ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருக்கிறேன். என் கணக்குப்படி, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வாய்ப்பே இல்லை' என்று உறுதிப்பட கூறுகிறார் மஹமூத் அகமதிநிஜாத்.

போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடுதல் துறையில் பிஎச்.டி பட்டம் பெற்றிருக்கும் அவர், ஏராளமான அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

மிகுந்த மத நம்பிக்கையுடைய அவர் மேலும் கூறுகையில், "நீதியின் வழியில் நடப்பவர்கள் வெற்றியடைவார்கள் என்று இறைவன் கூறியிருப்பதை நான் நம்புகிறேன். நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம்' என்கிறார்.

அதிபர் மஹமூத் அகமதுநிஜாத் கூறியதாக திங்கள்கிழமை பத்திரிகைகளில் வெளியாகி உள்ள இந்த செய்தி தான் ஈரான் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. அதிபர் மஹமூத், அப்படி என்ன கணக்கு போட்டு பார்த்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

கடந்த 2003-ல் அணுகுண்டை தேடுகிறோம் என்று இராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, அதேபாணியில் ஈரான் மீதும் போர் தொடுக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அதற்கு அச்சாரமாக அதிபர் புஷ்ஷுன் அண்மைக்கால பேச்சுக்களும் அட்சதை தூவி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி

தமிழ்நாட்டில் இன்டெல் நிறுவனம் 1800 பள்ளிகளுக்கு உதவி

கணீனி சிப்களை உருவாக்கும் இன் டெல் நிறுவனத்தின் இந்தியப்பிரிவு தமிழக அரசுடன் ஒப்பிட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் 1800 உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி சோதனைச்சாலைகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வி சம்பந்தமான பொருளடக்கத்தை கைக்கொள்ள வகை செய்து தர முன்வந்துள்ளது. கல்விச்சாலைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் உடல்நலமையங்களை இணைக்கும் கணினி வலையமைப்பை இரு தரப்பும் ஒத்துழைத்து உருவாக்கும்.
இது பற்றிய மேல்விவரங்களுக்கு...The Hindu News Update Service

சென்னை: ஒரேநாளில் 4000 விளம்பரப் பலகைகள் அகற்றம்

சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 4,000 விளம்பரப் பலகைகள் திங்கள்கிழமை ஒரே நாளில் அகற்றப்பட்டன என்று மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது:

சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலையோரங்களிலும், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் விளம்பரப் பலகைகள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டுள்ளன.

அனுமதியின்றி மிகப் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பலகைகளால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சாலையை மறைத்து வைக்கப்படும் இந்த மின்னணு விளம்பரப் பலகைகளால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

இதுதவிர மழைக்காலத்தில் காற்று வீசுவதால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதையடுத்து அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அனுமதியின்றி நிறுவப்பட்டிருந்த விளம்பர அட்டைப்பலகைகள் , துணிப்பலகைகள் (பேனர்) மற்றும் மின்னணு விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை மட்டும் நகரில் இருந்த 4,000 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. காவல்துறையினரின் இந்நடவடிக்கைகள் தொடரும்.

அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பாக நிறுவப்படும் விளம்பரப் பலகைகளை 2 முதல் 5 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்த காலவரம்பிற்குள் விளம்பரப் பலகைகளை நீக்காவிட்டால், உடனடியாக அப்புறப்படுத்தப்படும்.

உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவு பெற்ற நிறுவனங்களைத் தவிர இதர நிறுவனங்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளுடன் காவல்துறையினர் இணைந்து புறநகர்ப் பகுதிகளிலும் இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

விதிகளை மீறி விளம்பரப் பலகைகளை வைத்திருந்தாலும், புதிதாக நிறுவினாலும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவல் ஏதும் இல்லை. எனினும் நகரில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார் நாஞ்சில் குமரன்.

தினமணி

உலகத் தரத்திற்கு இந்தியத் தொடர்வண்டி நிலையங்கள்.

புதுதில்லி உட்பட நாட்டின் முக்கிய தொடர் வண்டி நிலையங்களை உலகத் தரத்திற்கு உயர்த்த இந்திய இரயில்வே முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள 22 தொடர்வண்டி நிலையங்களை உலகத்தரத்திற்கு உயர்த்த தேர்வு செய்துள்ளது.

அதன் முதற்கட்டமாக புதுதில்லி, பாட்னா, ஆக்ரா, ஆனந்த விகார், ஜெய்ப்பூர், அமிர்தசரஸ் ஆகிய நிலையங்களில் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

ஹாங்காங்கைச் சேர்ந்த டெர்ரி பெரல் என்ற நிறுவனம் புதுதில்லி நிலைய பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளது.

தினமணி

"மிக மோசமான அமெரிக்க அதிபர் புஷ்" - ஆஸ்திரேலியர்கள் கருத்து

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் ஜார்ஜ் புஷ் தான் என்று ஆஸ்திரேலியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தங்கள் நாட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்த புஷ்ஷுக்கு அவர் கடும் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

21 நாடுகள் பங்கேற்கும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு வரும் சனிக்கிழமை ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் தொடங்கவுள்ளது. இதையொட்டி அமெரிக்க அதிபர் புஷ், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்காவின் வரலாற்றில் மோசமான அதிபராக உள்ளவர் தங்கள் நாட்டுக்கு வர அனுமதிக்கமாட்டோம் என்று அந்நாட்டு மக்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

போருக்கு எதிரான அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் புஷ்ஷுக்கு எதிராக 52 சதவீத வாக்குகளும், 32 சதவீதம் பேர் நடுநிலையாகவும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராக் மீது வலுக்காட்டாயமாக போர் தொடுத்ததே புஷ் மீதான வெறுப்புக்கு முக்கிய காரணம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாங்கள் அமெரிக்கர்களின் நண்பர்கள். அமெரிக்கர்கள் நல்லவர்கள். ஆனால், புஷ் நல்லவரல்ல. நாங்கள் புஷ்ஷை எதிர்ப்பவர்கள். அவரது கொள்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை. மனித உரிமை மீறல்களுடன் மற்ற நாடுகள் மீது படையெடுப்பது கண்டனத்துக்குரியது.

புஷ்ஷின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிட்னி நகரின் முக்கிய ரயில் நிலையங்கள் முன் பேரணி, மாநாடு நடக்கும் சிட்னி ஓபரா மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் போர் எதிர்ப்பு அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். ஆனால், பேரணி நடத்துபவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுமென போலீஸôர் எச்சரித்துள்ளனர்.

மாநாடு நடக்கவுள்ள ஓபரா மாளிகையைச் சுற்றி 5 கி.மீ. அளவுக்கு பாதுகாப்பு வேலி அமைத்துள்ளனர். பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்கும் ஹோட்டல்களைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

புஷ் அதிபராக இருக்கும் வரை அமெரிக்காவுடன் எந்த கூட்டணியும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், புஷ்ஷின் நண்பராக செயல்பட்டு வருகிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட். புஷ் எடுத்துவரும் அனைத்து கொள்கை முடிவுகளுக்கும் இவர் தலையசைத்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முன்னதாக, திங்கள்கிழமை ஆஸ்திரேலியா வந்த சீன அதிபர் ஹூ ஜின்டாவோவுக்கும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி

எந்த அரசியல் கட்சிக்கு அடிக்கும் யோகம்: மும்பை கண்ணன் பிறந்தவிழாவில்

கண்ணன் பிறந்த நாளன்று மராட்டிய இளைஞர்கள் உரி கட்டி அதனை மனித மலை எழுப்பி கைக்கொள்வது ஒரு பாரம்பரியமான செயலாக இருந்தூ வந்தது. தயிர்பானை எனப்பொருள்படும் தஹிஹண்டியை 'கோவிந்தாக்கள்' எனப்படும் இளைஞரணி அடித்து எடுக்கும்போது தற்காலங்களில் அதில் பணம் வைப்பது வழக்கமானது. ஆறு அல்லது ஏழு கட்ட மனித பிரமிட்கள் உருவாவது பிரமிப்பாக இருக்கும்.

இந்த விளையாட்டு வாக்குவங்கியில் பிரபலமாக இருப்பதைப் பார்த்து அரசியல் கட்சிகள் வாளாவிருக்குமா? மராட்டிய கட்சிகள் அனைத்தும் களத்தில் குதித்து இப்போது இது பயங்கர பணம் காய்க்கும் கூட்டம் சேர்க்கும் நிகழ்வாக மாறிவிட்டது. இவ்வருடம் 40 அடி உயரத்தில் ஒன்பது அடுக்குகள் கொண்டே எட்டக் கூடியனவாகவும் இலட்சக் கணக்கான பரிசுப்பணத்தை புரவலர்கள் கொடுத்தும் பிரம்மாண்ட நிலையை அடைந்துள்ளது. இது பங்கெடுப்போரின் உயிருக்கே ஆபத்தாகக் கூடிய நிலை என மஸ்கான் தாட்வாடி கோவிந்தா மண்டலின் தலைவர் யஸ்வந்த் ஜாதவ் கூறுகிறார்.

மேல் விவரங்களுக்கு...Mumbai politicos high on hitting Janmashtami jackpot

ஐந்து நாடுகள் கப்பற்படை பயிற்சி வங்காளவிரிகுடாவில் துவங்கியது

இந்திய கடற்பிரதேசத்திலேயே மிகப்பெரிய கப்பற் கூட்டமாக ஐந்து நாடுகலைச் சேர்ந்த கப்பற்படையினரின் போர்க்கலங்கள் தங்கள் திறன்களை சோதிக்கும் பயிற்சியை இன்று வங்காள விரிகுடாவில் துவங்கின. ஏவுகனைகள், நீர்மூழ்கிக் கலங்கள்,வானூர்தி திறன் இவை போர்க்கால நடப்பில் எவ்வாறு இயக்கப்படும் என முன்னோட்டம் நடத்தப்படுகின்றன. உண்மையான ஆயுதங்கள் பயன்படுத்த படாது. மயான்மரின் கோகோ தீவிற்கு 50 கடல்மைல்கள் தொலைவில் இப்பயிற்சி நடக்கிறது. அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் 26 கப்பல்கள் பங்கேற்கின்றன. இப்பாதையில் வரவேண்டாம் என வர்த்தக கப்பல்கள் எச்சரிக்கப் பட்டுள்ளன.

Zee News - Multi-nation Naval exercise in Bay of Bengal

இந்திய வரையறை நேரத்தை முப்பது நிமிடங்கள் முன்வைத்தால் ஆயிரம் கோடி சேமிக்கலாம்

இந்திய வரையறை நேரத்தை அரைமணிநேரம் முன்னே வைப்பதால் மின்சக்தி/எரிசக்தி பயன்பாட்டில் கணிசமான சேமிப்பு ஏற்படும் என்றும் பண அளவில் ரூஆயிரம் கோடிவரை மிச்சமாகும் என்றும் விஞ்ஞானிகள் குழுவொன்று பரிந்துரைத்துள்ளது. இப்படிச் செய்தால் கிரீன்விச் நடுமட்ட நேரத்தைவிட இப்போதிருக்கும் ஐந்தரை மணி நேரம் முன்னிருப்பதற்கு பதிலாக ஆறுமணி நேர இடைவெளி இருக்கும். தற்போது 82.5 பாகை கிழக்கு நெடுக்கோட்டில் (East Longitude) உள்ள நேர வரையறை 90 பாகைக்கு மாற வேண்டும். சக்தி சேமிப்பிற்காக மற்றநாடுகள் ஒன்றிற்கு மேற்பட்ட நேர மண்டலங்களை வைத்திருந்தாலும் இந்தியாவிற்கு அவை சரிப்பட்டு வராது என இக்குழு கருதுகிறது.

இக்குழுவின் அறிக்கையின் விவரங்களுக்கு....India eNews - Advance IST by 30 minutes, save Rs.10 bn: scientists

ஞாபகத்திறனுக்கொரு முகமது ஃபைசல்.

குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி எண்களையே நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் பலர் திண்டாடும்போது, 20 வயதான முகமது பைசல் என்பவர், ஒரு நிமிடத்தில் 50 கை பேசி எண்களை மளமளவென்று கூறுகிறார். புதுடில்லி, ராஜ்தானி ஓக்லாவில் வசிப்பவர் முகமது பைசல்(20).

எல்.ஜி., நிறுவனத்தில் சேவைப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு நினைவுத் திறன் மிக அதிகமாக உள்ளதால், 50 கை பேசிஎண்களை மளமளவெனக் கூறுகிறார். 224 நாட்டின் தலை நகரங்கள் மற்றும் அதன் ஐ.எஸ்.டி.டி., எண் அனைத்தையும் ஒப்பிக்கிறார். எந்த நாட்டைப் பற்றிய செய்தியையும் 0.8 செகண்டில் தந்து, நடமாடும் குறிப்பேடாக (டைரக்டரி)'யாக இருக்கிறார்.

பைசலின் சாதனை இதோடு நிற்கவில்லை. 600 வருடம் வரை உள்ள நாட்காட்டியை முழுவதுமாக நினைவு வைத்துள்ளார். அவர் கூறுவது 100 சதவீதம் உண்மையாக இருப்பதால், அவருடைய பெயர், "ஹோல்டர்ஸ் ரிபப்ளிக் புக் ஆப் வேல்டு ரெக்கார்டு,' மற்றும் "ஓபன் புக் ஆப் வேல்டு ரெக்கார்டு' ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ளது.

தன்னுடைய ஞாபகத் திறன் குறித்து பைசல் கூறியுள்ளதாவது: முதலில் ஒரு பொருளை நினைவில் நிறுத்தி வைக்க, ஆர்வம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நான் எந்த ஒரு பொருளையும் ஐந்து புலன்கள் மூலம் நினைவில் வைத்துக் கொள்வேன். பொருள்களை பார்த்து, கேட்டு, தொட்டு உணர்ந்து, படித்து, அனுபவித்து மூளையில் பதிவு செய்கிறேன். இவ்வாறு பைசல் கூறுகிறார். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதே இவரது இலட்சியமாம்.

தினமலர்

ICL அமைப்பில் இணையும் பாக்கிஸ்தான் வீரர்களுக்கு ஆயுட்காலத் தடை?

இந்தியன் கிரிக்கெட் லீக்கில் இணைபவர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படும் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் போர்டு எச்சரித்துள்ளது. இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பில் பல வீரர்கள் சேர்ந்து வருகின்றனர். இந்தியாவிலும் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் சேர்ந்துள்ளனர். வெஸ்ட்இண்டீஸ் வீரர் லாராவும் இதில் உள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களான இன்சமாம் உல்ஹக், அப்துல் ரசாக், இம்ரான் பர்கத், முகமது யூசுப் ஆகியோர் இதில் இணைய உள்ளனர். அவ்வாறு இணைபவர்களுக்கு கிரிக்கெட் விளையாட ஆயுட்கால தடை விதிக்கப்படும் எனவும் விரைவில் தங்கள் முடிவை மாற்றி கொள்ள வேண்டும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நசீம் அஷ்ரப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமலர்

பாக்கிஸ்தான்: இரு குண்டுவெடிப்புகளில் பலர் பலி

பாக்கிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த இரு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 15 பேர் பலியாகியுள்ளனர். பாக்கிஸ்தானின் ராவல்பிண்டி நகரின் ஆர்.ஏ.பஜார் பகுதியில் அணுசக்தி ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் குண்டுவெடித்ததில் 17 பேர் பலியாகினர். இரண்டாவது குண்டுவெடிப்பு ராவல்பிண்டி நகரின் வர்த்தகப்பகுதியான குவாசிம் பஜாரில் நிகழ்ந்தது. இதில்12 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 38 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலிபான் மற்றும் அல்காய்தா அமைப்புகள் இதன் பின்னணியில் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர்

இதயநோய் கருத்தரங்கில் இதயநோயால் மாண்ட மருத்துவர்

சுமார் 25 ஆயிரம் பிரபல இதய நோய் சிறப்பு மருத்துவர்கள் அருகில் இருந்தும், இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இதய நோய் சிறப்பு மருத்துவரை காப்பாற்ற முடியவில்லை.

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த இதய நோய் கருத்தரங்களில் ஐரோப்பாவை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். செப்டம்பர் ஒன்று முதல் 5 வரை நடக்கும் அந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள இத்தாலியை சேர்ந்த 46 வயது பெண் இதய சிகிச்சை மருத்துவ நிபுணர் (கார்டியாலஜிஸ்ட்) ஒருவரும் வந்திருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து போன அவருக்கு அங்கு கூடியிருந்தவர்கள் சிகிச்சை அளித்து அவரை ஒரளவு இயல்புநிலைக்கு கொண்டு வந்தனர். பின் அவசரம் அவசரமாக அவரை வியன்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரது நிலை மீண்டும் மோசமாகி, பின்னர் இறந்து விட்டார். 25 ஆயிரம் சிறப்பு இதய சிகிச்சை நிபுணர்கள் கூடி இருந்தும், இன்னொரு மருத்துவரைக் காப்பாற்ற முடியாமல் போனது.

தினமலர்

அணுசக்தி விவகாரம்: அப்துல்கலாம் ஆதரவு

முன்னாள் குடியரசுத்தலைவரும் ஏவுகணை விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தனியார் தொ.கா ஒன்றுக்கு அளித்த நேர்காணலில்..

இந்தியா அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொண்ட நடவடிக்கை தனிச் சிறப்பு வாய்ந்தது. ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தேன். அப்போது அவரிடம், 'தோரியம் அணு உலை'முக்கியத்துவத்தை விளக்கினேன்.

பார்லிமென்ட் நடக்கும்போது கட்சிகளுக்குள் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இதனால், சபை நடவடிக்கை பாதிக்கப்படக் கூடாது. சபை தொடர்ந்து நடக்க வேண்டும். சபை நடவடிக்கைகளின் போது, அதை ஏராளமான மக்கள் கவனிக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் பலர் கவனிக்கின்றனர். உறுப்பினர்கள் இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாவை திருப்பி அனுப்பியதால் தான் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகும் வாய்ப்பு எனக்கு பறிபோனதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. இதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இது ஒரு பெரிய விஷயம் அல்ல.

மக்களுக்காகவே இரண்டாவது முறையாக ஜனாதிபதியாவது குறித்து ஆலோசித்தேன். அரசியல் கட்சிகளுக்கு இடையே இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இது பற்றி சர்ச்சை எழுந்தபோது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்காக கவலைப்படவில்லை. வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகிய இருவருமே பல்வேறு விஷயங்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர்கள்.
இவ்வாறு அப்துல்கலாம் கூறினார்.

தினமலர்

நஜ்மா ஹெப்துல்லாவின் கணவர் மரணம்.

முன்னாள் ராஜ்ய சபா துணைத்தலைவரும், எம்.பியுமான நஜ்மா ஹெப்துல்லாவின் கணவர் அக்பர் அலி ஹெப்துல்லா இன்று காலமானார். சிறந்த மனித ஆற்றல் ஆலோசகரான இவரது வயது 75. வயிற்றுவலி காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்பர் அலி ஹெப்துல்லா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தினமலர்

ஈழத் தமிழர் வரலாறு

சென்னை, செப். 4: ‘தமிழ் பாசறை’ என்ற பட நிறுவனம் ஈழத் தமிழர் வரலாற்று திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதை வி.சி.குகநாதன் இயக்குகிறார். தேவா இசை அமைக்கிறார். அர்ச்சனா, ராரி, சுஜா நடித்துள்ளனர். பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள். 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. நவம்பர்-26 ம் தேதி படம் வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து தினகரன் நிருபரிடம் வி.சி.குகநாதன் கூறியதாவது:

ஈழத்தில் வாழும் தமிழர்களின் வரலாறு, அங்கு ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள், பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற கதைகளை உள்ளடக்கிய வரலாற்று திரைப்படம் இது.
50 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. தேவா இசையில் 8 பாடல்கள் பதிவாகி இருக்கிறது. இதில் 3 பாடல்களை யார் கண்ணன், புகழேந்தி தங்கராஜ், செல்வராஜன் ஆகியோர் படம் பிடிக்கிறார்கள்.

ரியாஸ்கான் இலங்கை மன்னராக நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் ஒரு மணி நேர படமாக தயாரிக்கப்பட்டு ஆங்கிலம், ஜெர்மன், கனடா, பிரஞ்சு உள்ளிட்ட உலக மொழிகளில் சப் டைட்டிலுடன் வெளியிடப்படுகிறது.

இவ்வாறு வி.சி.குகநாதன் கூறினார்.


நன்றி: தினகரன்

9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்று நோய் மையம்

9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்று நோய் மையம்

இந்தியாவில் முதல் முறையாக, சென்னை எழும்பூரில் 9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்றுநோய் நிறுவனம் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் இந்த புற்றுநோய் நிறுவனத்துக்கு, முதல் கட்டமாக ரூ. 300 கோடி வரை முதலீடு செய்யப்படும்.

இதற்கான பணிகள் 6 மாதத்துக்குள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:


சென்னை எழும்பூரில் உள்ள மத்திய அரசு மருந்து இருப்புக் கிடங்கில் தேசிய புற்றுநோய் நிறுவனம் அமைய இருக்கிறது. மருந்து இருப்புக் கிடங்கை மேம்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த கிடங்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மருந்து இருப்புக்கிடங்கு ஏறத்தாழ 18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதில், பாதி அளவுக்கு இடத்தை எடுத்து, தேசிய புற்றுநோய் நிறுவனம் தொடங்கப்படும்.

மருந்து இருப்புக் கட்டடங்கள் 200 ஆண்டுகள் பழமையானவை. இதனால், அனைத்துக் கட்டடங்களும் இடித்து மாற்றி அமைக்கப்படும்.

முதல் தவணையாக ரூ. 300 கோடி: தேசிய புற்றுநோய் நிறுவனம் தொடங்க முதல் தவணையாக ரூ. 300 கோடி செலவிடப்படும். உலகத் தரம் வாய்ந்த புற்றுநோய் மையமாக விளங்கும். நோயாளிகள் மட்டுமல்லாது, புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெறும்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற புற்றுநோய் நிறுவனங்களுடன் கூட்டு வைத்து, ஆராய்ச்சிப் பணிகள் நடைபெறும்.

நாட்டில் 10 லட்சம் பேருக்கு புற்றுநோய் புதிதாக வந்திருக்கிறது. புகையிலைப் பொருள்கள் காரணமாக, 60 சதவீதம் பேருக்கு புற்றுநோய் வருகிறது.

10-வது ஐந்தாண்டு திட்டத்தில், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணி உள்ளிட்டவைகளுக்காக ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டது. 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் ஏறத்தாழ ரூ.3,000 கோடி ஒதுக்கக் கேட்டு இருக்கிறோம். ரூ. 2,800 கோடி வரை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

அடையாறு புற்றுநோய் மையம், காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு ஆகியன மண்டல புற்றுநோய் மையங்கள் என்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அங்கீகாரம் அளிக்க பரிசீலனை செய்து வருகிறோம்
என்றார் அன்புமணி.

பிராண்ஸில் இரண்டு பெரிய எரிசக்தி நிறுவனங்கள் இணைந்தன

பிரான்ஸ் நாட்டு எரிசக்தி நிறுவனங்களான சூயஸ் மற்றும் அரசுக்குச் சொந்தமான காஸ் த பிரான்ஸ் ஆகியவற்றின் இணைப்பை வரவேற்றுள்ள பிரான்ஸின் பிரதமர் பிரன்ஸ்வா ஃபில்லான் அவர்கள், இதன் மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு சர்வதேச எரிசக்தி வணிகத்தில், வலுவான பிரசன்னம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தற்போது உலகின் இரண்டு முன்னணி எரிசக்தி நிறுவனங்களைக் தன்வசம் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இரண்டாவது நிறுவனம் என்று அவர் குறிப்பிட்டது அரசுக்குச் சொந்தமான மின்சக்தி விநியோக நிறுவனத்தையாகும்.

பிரஞ்சு அதிபர் நிக்கொலஸ் சர்கோசி அவர்களின் ஆதரவு பெற்ற ஒப்பந்தம் ஒன்றின்படி, இந்தப் புதிய நிறுவனத்தின் 35 சதவீத பங்குகளை அரசாங்கம் தன்வசம் வைத்திருக்கும்.

பிபிசி தமிழ்

French GDF, Suez agree new energy merger | Reuters.co.uk
Suez and Gaz de France Announce Merger - WSJ.com

அமெரிக்க அதிபர் புஷ் இராக்கிற்கு திடீர் விஜயம்

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இராக் சென்றுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதியில் அவர் அங்கு செல்வது இதுவே முதல் முறை.

பாக்தாதிற்கு மேற்கேயுள்ள அன்பார் மாகாணத்திலுள்ள ஒரு விமானப்படைத் தளத்தில் அவர் இறங்கினார். அங்கு அவர் மூத்த அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இராக்கில் தொடந்து நடைபெற்று வரும் வன்முறையை குறைக்கும் நோக்கில் அங்கு மேலும் பல ஆயிரம் துருப்புகளை அனுப்புவது குறித்து அமெரிக்கத் தளபதிகள் தங்களது மதிப்பீட்டை அமெரிக்க காங்கிரஸுக்கு அளிப்பதற்கு சிலநாட்கள் உள்ள நிலையில், புஷ் இராக் சென்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் அன்பார் மாகாணத்திற்கு சென்றிருப்பது, அந்தப் பகுதியில் உள்ள பழங்குடியினத் தலைவர்களை அல் கையீதாவிற்கு எதிராக, அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக திருப்பியதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது என்று பாக்தாதிலுள்ள பிபிசியின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

பிபிசி தமிழ்

AFP: Bush visits Asia as Iraq row rumbles at home
Bush: 'Fewer American forces' possible in Iraq - CNN.com

Monday, September 3, 2007

தில்லி தெருக்களில் பிச்சையெடுக்கும் முன்னாள் விளம்பர நடிகை.

32 வயதாகும் கீதாஞ்சலி நக்பால் ஒரு காலத்தில் முன்னணி விளம்பர நடிகை (Model) என்று பெயர் பெற்றவர். பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னின் தோற்றத்தையொத்த கீதாஞ்சலி, குடும்பத்தினரால் கை விடப்பட்டவர்.

வாரப்படாத தலை, அழுக்கான ஆடைகளுடன் தெற்கு தில்லியின் சந்தை;அங்காடிப்பகுதிகளில் ஒரு பிச்சைக்காரியாகத் திரிந்த அவரை கண்ட ஒரு ஒளிப்படச்செய்தியாளர் தில்லி பெண்டிர் ஆணையத்திடம் ஒப்படைத்துச்சென்றார்.

மனநிலை குழம்பியிருந்த அவரை VIMHANS (வித்யாசாகர் மனநல ஆராய்ச்சி நிறுவனம்) வசம் சேர்ப்பித்து சிகிச்சையளித்து வருகின்றனராம். முன்னதாக, இது தொடர்பாக, மாநகர குற்றவியல் நடுவர் மன்றத்திடம் ஒரு வழக்கும் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாம்.

பி/டி/ஐ செய்திகளிலிருந்து...
Former model found begging on the streets of Delhi

தமிழகம் முழுவதும் பலத்த காவல்துறை கண்காணிப்பு

ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தால் இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய தலைநகரங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐதராபாத்திற்கு அடுத்தப்படியாக தீவிரவாதிகள் தமிழகத்தை குறி வைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்தார்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் மார்க்கெட், கோயில்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி

ஐ.நா பாராட்டும் ம.பி.முதல்வர்

ஐ.நா.சபையின் 21-ம் நூற்றாண்டு மேம்பாட்டு குறிக்கோள்களை எட்ட திறம்பட செயல்பட்டதாக மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்கு ஐ.நா. சபை சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்தூரில் புதன்கிழமை நடைபெறும் விழாவில், ஐ.நா. நூற்றாண்டு மேம்பாட்டு பிரசாரப் பிரிவின் ஆசியத் தலைவர் மினார் பிம்பாலே சான்றிதழை வழங்குகிறார்.

பசி-வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் ஆரம்பக்கல்வி, பாலின வேறுபாட்டை ஒழித்தல், பெண் சுதந்திரம், பெண்சிசுக்கொலை தடுப்பு, கர்ப்பிணிகள் உடல்நலம், மலேரியா, எய்ட்ஸ் மற்றும் இதரநோய்கள் தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சர்வதேச தரத்தில் மேம்பாட்டு வளர்ச்சிக்கான ஒருமித்த முயற்சி மேற்கொள்தல் ஆகிய குறிக்கோள்களை எட்ட வேண்டும் என்று இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் ஐ.நா. சபை இலக்கு நிர்ணயித்தது.

அக்டோபர் 17-ம் தேதி உலக வறுமை ஒழிப்புத் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இத்தகைய ஊக்குவிப்பு நடவடிக்கைகளை ஐ.நா. சபை மேற்கொண்டு வருகிறது.

தினமணி

கல்பாக்கம் வான்வெளியில் விமானங்களுக்குத் தடை!

இலங்கையில் விடுதலைப் புலிகளிடம் போர் விமானங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவின் அணுசக்தி மையங்களில் ஒன்றான கல்பாக்கம் வான் பகுதியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த முடிவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இந்திய விமானப் படை ஏற்கெனவே விமானப் போக்குவரத்து துறையுடன் இணைந்து பணிகளைத் துவக்கிவிட்டது. இதையடுத்து எல்லாவித வான் போக்குவரத்தும் கல்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது.

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்திற்கு மேலும் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் அதிநவீன ராடார்கள் மூலம் அப்பகுதியை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி

மாநில வளர்ச்சி பகைமையை மறக்கடித்தது...பீஹாரில்

நிதீஷும் லாலுவும் அரசியலில் ஒருவருக்கொருவர் பகை பாராட்டினாலும் மாநில வளர்ச்சி என்று வரும்போது ஒருவரையோருவர் பாராட்ட தயங்கவில்லை. இன்று நீதியமைச்சர் பி.சிதம்பரம் ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தை திறந்து வைத்த விழாவொன்றில் முதல்வர் நிதீஷ் குமார் பிஹாரில் உள்ள இரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவாரேயானால் அவரே நிரந்தர இரயில்வே அமைச்சராக இருக்க வேண்டும் எனக் கூறினார். லாலுபிரசாத் அவர்களும் நிதீஷ் குமார் இரயில்வே அமைச்சராக இருந்தபோது திட்டமிட்ட இரயில்பெட்டி தொழிற்சாலையை நான் முடித்து வைத்திருக்கிறேன்,அதற்கு அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார். உடனிருந்த வேதியல் மற்றும் உரத்துறை அமைச்சர் பாஸ்வானும் நாங்கள் மூவருமே வெவ்வேறு அரசியல் அணிகளையும் கொள்கைகளையும் பின்பற்றுபவர்கள்; அரசியல் வேற்றுமைகளும் கொண்டவர்கள்;இருப்பினும் பிஹாரின் வளம் என்று வரும்போது மூவரும் சேர்ந்து உழைப்போம் என்றார்.
The Telegraph - Calcutta : Northeast

அ தி மு க - பா ஜ க மீண்டும் கை கோர்க்கும்?

அ.தி.மு.க.- பா.ஜனதா மீண்டும் கூட்டணி அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் ஒரு இடத்தில் கூட அவை வெற்றி பெறவில்லை. சமீபத்தில் 3-வது அணி அமைத்து தீவிரமாக மத்திய அரசியலில் ஈடுபட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முடிவு செய்தார்.

ஆனால் இந்த அணி எதிர்பார்த்த அளவு வெற்றிகரமாக அமையவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. எனவே அ.தி.மு.க. 3-வது அணியை விட்டு விலகும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

2 முறை பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து இருந்தது. மீண்டும் தமிழ்நாட்டில் கணிசமான பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் அ.தி.மு.க.வுடன் கூட் டணி அமைக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா மேலிடம் கருதுகிறது.

எனவே கூட்டணி அமைப்பது தொடர்பாக பா.ஜனதா மேலிட தலைவர்கள் அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். இதற்கு பா.ஜனதா அணி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட செகாவத் பாலமாக இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க. 3-வது அணியில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலில் செகாவத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டார்கள். இது பா.ஜனதாவுடன் ஏற்பட இருக்கும் கூட்டணியின் தொடக்கம் தான் என பா.ஜனதா வட்டாரங்கள் கூறுகின்றன.

3-வது அணியில் அ.தி.மு.க. தவிர முலாயம்சிங் யாதவ் கட்சி, சந்திரபாபு நாயுடு தலை மையிலான தெலுங்கு தேசம் உள்பட 7 மாநில கட்சிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் இந்த கட்சிகள் எல்லாம் சேர்ந்து 70 இடங்களில் தான் வெற்றி பெற முடியும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க.வுக்கு தற்போது தமிழ்நாட்டில் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. எனவே அ.தி.மு.க. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க தயார் ஆகி வருவதாக கூறப்படுகிறது. 3-வது அணியில் இருந்தால் மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்க முடியாது. எனவே, இந்த அணியில் இருந்து அ.தி.மு.க. விலகி பாரதீய ஜனதா அணியில் சேரும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற வேண்டும் என்றால் முக்கிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்து கூட்டணி பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று பா.ஜனதா மேலிடம் கருதுகிறது.

எனவே தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் மீண்டும் பா.ஜனதா கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான தீவிர முயற்சிகளிலும் பா.ஜனதா இறங்கியுள்ளது. இதற்கு அ.தி.மு.க.வும் பச்சைக்கொடி காட்டி விட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக மாலைமலர் தெரிவிக்கிறது.

பங்களாதேஷ்: கலிதா ஜியா கைது.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, அவரது இளைய மகன் அராபத் ரகுமான் ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டனர். முன்னதாக, கலிதா ஜியா கடந்த 2001-2006ம் ஆண்டுவரை பதவியில் இருந்த போது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மகன் அராபத் ரஹ்மான் பண்ணைக்கு ஆள் எடுக்க உதவியதாக பங்களாதேஷ் இலஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் கலிதா ஜியா மீது நேற்றிரவு வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து இக்கைதுகள் நிகழ்ந்தன.

பங்களாதேஷ் தேசிய வருவாய் வாரியத்தின் நடுவண் புலனாய்வுக் குழு அண்மையில் இவர்களது வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கலிதா ஜியா உட்பட 11 பேரின் வங்கிக் கணக்குகள் கடந்த சில நாட்களுக்கு முன் முடக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 7.45 மணியளவில், டாக்கா கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள கலிதாவின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர், அவரையும், அவரது மகனையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

தம் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை; சிறைச் செல்ல தாம் பயப்படவில்லை
என்று கலிதா ஜியா கூறினார்.

இன்சாட் விண்ணேவல் வெற்றிகரம்: தலைவர்கள் வாழ்த்து.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி - எஃப் 04 ராக்கெட் மூலம் ஞாயிறன்று மாலை 4.21 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த செயற்கைக் கோள் இன்சாட் 4சி ஆர் தொழில்நுட்ப காரணங்களால் சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக விண்ணில் மாலை 6.20 மணியளவில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.

3 கட்டங்களாக திட்டமிடப்பட்ட வேகத்துடன் டிரான்ஸ்பாண்டர்களை விண்வட்டப்பாதையில் செலுத்தியதும், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். இன்சாட் 4 சி ஆர் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பின்னர் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும் மாதவன் நாயர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்த செயற்கைக்கோள் மூலம் வீடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு வசதிகளை அளிப்பதற்காக உயர் சக்தி வாய்ந்த 12 கே.யு. பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் விண்ணுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
இன்சாட் - 4 சி ஆர் செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டிருப்பதற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் உள்பட தலைவர்கள் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை கற்பழித்த சாமியார் கைது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள செங்கம்மாள் கோயிலில் கோவிந்தசாமி (65) என்ற துறவி உள்ளார். இவர் கோயில் முன்பு விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த 12 வயதுயை கற்பழித்ததாக தெரிகிறது.

மேலும் நடந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டுக்கு சென்ற சிறுமி நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அதன் பின்னர் கோவிந்தசாமி கைது செய்யப்பட்டார்.

அவர் மீது கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் எஸ்.பி., அசோக்குமார் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சாமியார் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் அடைக்கப்பட்டார்.

நக்சல்களினால் பாதிக்கப்பட்ட இடத்தில் கால்-சென்டர் துவக்கம்

கிருஷ்ணகிரியின் சனசந்திரம் கிராமத்தில் ஊராட்சித்துறை அமைச்சர் முக ஸ்டாலினால் 'அழைப்பு மையம்' வெள்ளிக்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது. ஃபாஸ்டரா (FOSTERA -fostering technologies in rural areas) அமைப்பின் உதவியுடன் இந்த கால்-சென்டர் துவங்கியது. இதனால், தமிழகத்தின் கிராமங்களையும் விப்ரோ, காமெட் போன்ற நிறுவனங்களின் வேலை சென்றடையும்.

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 120 பேர் இதனால் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். நான்கு லட்சம் ரூபாய் அரசு மானியத்தின் உதவியுடன் கேளமங்கலம், தளி, மாத்தூர், பர்கூர், காவேரிப்பட்டணம் போன்ற கிராமப்புற பகுதி மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஐம்பது லட்சம் ஒதுக்கிடப்பட்டிருக்கிறது.

First rural call centre in naxalite-affected Tamil Nadu district
IndianExpress.com :: Geneva outsources, TN Naxal belt village gets a call centre
DNA - India - From naxal village to BPO hub - Daily News & Analysis

கலாநிதி மாறனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்குபவர்களின் தலை பத்து பட்டியல்:

1. முகேஷ் அம்பானி - ரிலையன்ஸ்: ரூ. 24.51 கோடி
2. கலாநிதி மாறன் - சன் தொலைக்காட்சி: ரூ. 23.26 கோடி
3. காவேரி கலாநிதி - சன் தொலைக்காட்சி: ரூ. 23.26 கோடி

4. சுனில் மித்தல்- பார்தி ஏர்டெல்: 15 கோடி
5. கே அன்ஜி ரெட்டி - டாக்டர் ரெட்டிஸ்: 14.4
6. பி எம் முஞ்சால் - ஹீரோ ஹோண்டா: 13.99

7. பவன் முஞ்சால் - ஹீரோ ஹோண்டா: 13.88
8. நவீன் ஜிண்டால் - ஜிண்டால் ஸ்டீல்: 13.5
9. நகாகாவா (Toshiaki Nakagawa) - ஹீரோ ஹோண்டா: 13.44
10. சஜ்ஜன் ஜிண்டால் - JSW ஸ்டீல்: 13.24

Mukesh Ambani's take-home ten times that of brother Anil

இடிந்து விழுந்த மேம்பாலம்



பாகிஸ்தானின் கராச்சி புறநகரில் சனிக்கிழமை இடிந்து விழுந்த மேம்பாலம். இதில் பத்து பேர் இறந்தனர், பலர் காயமடைந்தனர். 2 மாதங்களுக்கு முன்புதான் இப் பாலத்தை அதிபர் முஷாரப் திறந்து வைத்தார்.


தினமணி

Daily Times - Leading News Resource of Pakistan - The authorities just can’t be trusted any more: Karachi residents
Ten dead in Karachi bridge collapse, inquiry ordered- Hindustan Times

இடைத்தேர்தலில் பி.சி.கந்தூரி வெற்றி: உத்தரகண்டில் பா.ஜ.க.வுக்கு 'மெஜாரிட்டி'

உத்தரகண்ட் மாநிலம் துமாகோட் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அந்த மாநில முதல்வர் பி.சி.கந்தூரி வெற்றி பெற்றார். இவரது வெற்றியையடுத்து ஆளும் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை (70-க்கு 36) கிடைத்துள்ளது.

மொத்தம் 70 உறுப்பினர்கள் உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைக்கு அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 32 இடங்கள் கிடைத்தன. சுயேச்சை உறுப்பினர்கள் 3 பேரின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி.சி.கந்தூரி, உத்தரகண்ட் மாநில முதல்வராக தேர்வானார். இதையடுத்து அவர் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

துமாகோட் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் பிரமுகர் ரவாத் பதவி மற்றும் கட்சியில் இருந்து விலகி கந்தூரி போட்டியிட வாய்ப்பளித்தார். இதற்கு கைங்கர்யமாக தான், எம்.பி. பதவி விலகிய தொகுதியில் ரவாத்தை நிறுத்த முடிவு செய்தார் கந்தூரி.

தினமணி

Zee News - Khanduri wins Dhumakot by-poll, BJP secures majority
IndianExpress.com :: Khanduri silences critics with big win in Dhumakot

ஒலிம்பிக் மாரத்தானில் பங்கேற்க விரும்பும் அமீரக தமிழ் இளைஞர்


ஒலிம்பிக் மாரத்தானில் பங்கேற்க விரும்பும் அமீரக தமிழ் இளைஞர்
தமிழக அரசு உதவ முன்வருமா ?

ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயில் உள்ள ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் ஒரு அங்கமாக விளங்கி வரும் ஜீனத் லேண்ட் டிரான்ஸ்போர்ட்டில் பணி புரிந்துவருபவர் யு. அஹமது சுலைமான் ( வயது 31 ). தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தைச் சேர்ந்த இவர் தற்பொழுது திருச்சியில் வசித்து வருகிறார்.


பள்ளி, கல்லூரிகளில் பயிலும் போதே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றதன் காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த ஜனவரி மாதம் ஸ்டாண்டர்ட் வங்கி ஆதரவில் துபாயில் நடைபெற்ற சர்வதேச மாரத்தான் போட்டியில் ( 42.195 கிமீ ) முதல் முறையாக பங்குபெற்ற இவர் 372 வது இடத்தைப் பிடித்தார். இப்போட்டியில் சுமார் 4 ஆயிரத்து 800 பேர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதல் ராசல் கைமாவில் நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்று 210 வது இடத்தைப் பிடித்தார். இதில் 6 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மேலும் அமீரக பாதுகாப்பு அமைச்சகம் நடத்திய அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்று 15 வது இடத்தைப் பெற்றார்.

இதன் காரணமாக எதிர்வரும் 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்குபெற்ற பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனும் ஆவலில் தற்பொழுது திருச்சி வருகை புரிந்துள்ள இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

இவரது முயற்சிக்கு இவர் பணிபுரிந்து வரும் நிறுவனமும், துபாய் இந்திய துணைத்தூதரக கன்சல் பி.எஸ். முபாரக், இந்திய முஸ்லிம் சங்கம், துபாய் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆர்வமும், ஊக்கமும் அளித்து வருகின்றன.

இவர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவரது தாயக தொடர்பு முகவரி :

138 பெரிய கடை வீதி
திருச்சி 620 008
தொலைபேசி : 0431-270196/98 424 77828
E mail : ad_sulaiman4000@yahoo.com

Sunday, September 2, 2007

"அணு ஆயுதத் திட்ட்டத்தை கைவிட்டது வடகொரியா''

வட கொரியா 2007 முடியும் முன்் தன் அணு ஆயுதத் திட்டம் குறித்து முழு விபரங்களையும் வெளியிட்டு ்வெளியிட்டு அத்திட்டத்தை கைவிட ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் தூதுவர் கிரிஸ்டோபர் ஹில் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.

North Korea 'to end nuclear work' - BBC

ஊனமுற்றோர் இட ஒதுக்கீட்டில் சாதி உள் ஒதுக்கீட்டுக்கு நீதிமன்றம் மறுப்பு

மத்திய பிரதேசத்தில் பள்ளிக்கூட ஆசிரியர் பணியில் மூவர் சேர்த்துக் கொள்ளப்பட்டதை அந்த மாநில அரசு விலக்கம் செய்திருந்தது. உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென உள் ஒதுக்கீடு செய்து இவர்கள் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் அரசு அறிவித்தது. இதை எதிர்த்து 3 ஆசிரியர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை உச்சநீதிமன்ற அமர்வொன்றின் நீதிபதிகள் எஸ்.பி. சின்கா, எச்.எஸ்.பெடி ஆகியோர் விசாரித்து தீர்ப்பு கூறினார்கள்.

அவர்கள் தங்கள் தீர்ப்பில்

"உடல் ஊனமுற்றோருக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் சாதி அடிப்படையில் தனியாக உள் ஒதுக்கீடு அளிக்க முடியாது. பெண்களுக்கான கோட்டாவிலும் தனியாக சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க முடியாது. 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. உடல் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் இப்போது ஏற்படவில்லை
என்று கூறியுள்ளனர்.

மாலைமலர்

மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக இலங்கை அரசு அறிவிப்பு





இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தில் இருக்கும் சிலாவத்துறை எனும் பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கைப் படையினர் கைப்பற்றி விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.




அண்மையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதிகளை இலங்கைப் படையினர் கைப்பற்றியிருந்தனர்.


அதன் பின்னர் கடந்த சில நாட்களாக இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது இலங்கைப் படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.


"புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தை மீட்டது போல் சிலாவத்துறையையும் மீட்டுள்ளோம்" என்றார் ஜனாதிபதி ராஜபக்ச.


இப் பகுதிகளில் இருந்த விடுதலைப் புலிகளின் சில கடற்படைத் தளங்களையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கைப் படையினர் தெரிவித்துள்ளனர். இத் தாக்குதல்களின் போது விடுதலைப் புலிகள் பாரிய எதிர்ப்பு எதனையும் காட்டாது பின்வாங்கி விட்டனர் எனவும் படையினர் தெரிவித்திருந்தனர்.


இது இவ்வாறிருக்க, மன்னாரில் உள்ள முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் 50 க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினரை மனிதக் கேடயங்களாகப்[human shields ] பயன்படுத்தி இலங்கை இராணுவம் இப் பகுதிகளில் நுழைந்திருக்கிறது என தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது.


இலங்கை இராணுவத்தினரின் சிலாபத்துறை இராணுவ நடவடிக்கையால் பல தமிழ்மக்கள் தமது வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேற்றப்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.


இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தப்பிச் சென்ற மக்கள் மீது இலங்கைப் படையினரின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினர் கிளைமோர் தாக்குதல் நடாத்தியதில் 9 தமிழ் பொதுமக்கள், குழந்தைகள் உட்பட , கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இத தாக்குதல்கள் பற்றி விடுதலைப் புலிகள் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.



ஆதாரம் : BBC, Tamilnet, Reuters

ஆசிய கோப்பை ஹாக்கி: நாளை இந்தியா-கொரியா மோதல்

7-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணி நேற்று பலவீனமான இலங்கையை எதிர்கொண்டது.

இதில் இந்தியா கோல் மழை பொழிந்தது. 20-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆசிய கோப்பையில் அதிக கோல்கள் சாதனையை இந்தியா சமன் செய்தது. 1994 ஆண்டு ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி 20-0 என்ற கணக்கில் தாய்லாந்தையும், மலேசியா 20-0 என்ற கணக்கில் தாய் லாந்தையும் வென்று இருந்ததே சாதனையாகும்.

இந்திய அணியில் பிரப் ஜோத்சிங் அதிகபட்சமாக 5 கோல்கள் (ஹாட்ரிக்) அடித் தார். எஸ்.வி.சுனில் (ஹாட்ரிக்), துஷார் சன்டேகர், ரகுநாத் ஆகியோர் தலா 3 கோல்களும், இக்னேஸ் திர்கே, சிவேந்திரா சிங் தலா 2 கோல்களும், பிரபோத் திர்கே, ராஜ் பால சிங் தலா ஒரு கோலும் அடித் தனர். பிரப்ஜோத்சிங் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இன்னொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் 1-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோற்றது. மற்ற ஆட்டங்களில் கொரியா 16-0 என்ற கணக்கில் தாய்லாந்தையும், மலேசியா 13-1 என்ற கணக்கில் ஆங்காங் கையும், சீனா 6-0 என்ற கணக் கில் வங்காள தேசத்தை தோற்கடித்தன.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் கொரியாவை நாளை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு நடக்கிறது.

கொரியா அணி பலம் வாய்ந்தது. இதனால் அந்த அணியை சமாளிக்க இந்தியா மிகவும் கடுமையாக போராட வேண்டும். கொரியா 2 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இந்தியா ஒரு முறைதான் 2003-ல் ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது.

ஆசிய கோப்பையில் இரு அணிகளும் 6 போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 3 ஆட்டத்திலும், கொரியா 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 1 ஆட்டம் `சமன்' ஆனது. 1985ம் ஆண்டு இந்தியா 8-1 என்ற கணக்கிலும், 1989ம் ஆண்டு 5-0 என்ற கணக்கிலும், 2003-ம் ஆண்டு அரை இறுதியில் 4-2 என்ற கணக்கிலும் வெற்றி பெற்று இருந்தது. கொரியா 1994-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் 1999ம் ஆண்டு அரை இறுதியில் 5-4 என்ற கணக்கிலும் வென்று இருந்தது. 1994-ம் ஆண்டு இரு அணிகளும் மோதிய ஆட்டம் 1-1 என்ற கணக்கில் `சமன்' ஆனது.

நாளை நடைபெறும் மற்ற ஆட்டங்களில் வங்காள தேசம்-இலங்கை (காலை 7.30) சீனா-தாய்லாந்து (9.30), ஜப்பான்- ஆங்காங் (மாலை 3 மணி), பாகிஸ்தான்- சிங்கப்பூர் (மாலை 5 மணி) அணிகள் மோதுகின்றன. நாளைய ஆட்டங்கள் அனைத் தும் எழும்பூர் மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

மாலைமலர்

தாகூரின் நோபல் பதக்கம் மீட்க இயலாது - சி.பி.ஐ

ரபிந்த்ரநாத் தாகூரின் நோபல் பரிச்சு பதக்கம் திருடப்பட்டதை அடுத்து சி.பி.ஐ விசாரணை நடத்தியது. மூன்றரை வருட விசாரணைக்குப்பின் பதக்கம் மீட்க்க இயலாதபடி 'நிரந்தரமாக' தொலைந்து போயிருக்கலாம் என்றும். 'இந்த விசாரணையில் இனி பலன் தரும் நடவடிக்கை எதுவும் எடுக்க இயலாது' என சி.பி.ஐ யின் அறிவிப்பு தெரிவித்தது.

Rabindranath Tagore's Nobel medal lost foreveCNN-IBN
CBI closes Tagore's medal theft case NDTV.com
CBI shuts Nobel chapter after 3 years Times of India

அர்னால்டு இந்தியா வருகிறார்


அணுஆயுத ஒப்பந்தம் சம்பந்தமான பேச்சு வார்த்தை நடத்துவதற்கு பிரபல ஆலிவுட் நடிகர் அர்னால்டு நவம்பர் மாதம் டெல்லி வருகிறார்.

இவர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு அமெரிக்க அரசியலில் அதிரடியாக குதித்தார். அரசியலில் அமோக வெற்றி அவருக்குக்கிடைத்தது. தற்போது இரண்டாவது முறையாக கலிபோர்னியா மாநில கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வரும் அர்னால்டு வருகிற நவம்பர் மாதம் தனது குடும்பத்தாருடன் இந்தியா வரத் திட்டமிட்டுள்ளார். நவம்பர் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 5 நாட்கள் அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

அப்போது அவர் டெல்லி, ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்கிறார். அரசியல் நல்லெண்ண தூதராகவும், அணுஆயுத விவகாரம் சம்பந்தமாக இந்தியா- அமெரிக்காவிடையே சுமூக உறவை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் அவர் இந்தியா வருகிறார்.

எனவே அவர் டெல்லியில் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கும் அமெரிக் காவிற்கும் தகவல் தொழில் நுட்பத்துறையில் நெருங்கிய தொடர்பு இருப்பதால் தகவல் தொழில் நுட்பத் துறையில் உள்ள முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேசுகிறார். பல்வேறு சமூக சேவை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

இந்தி திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும் அவர் சந்தித்து பேசுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மாலைமலர்

இன்சாட் விண்ணேவல் ஒத்திவைக்கப்பட்டது

இன்சாட்4சிஆர் எனும் செயற்கைக்கோளை விண்ணேற்றும் பணி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வரும் செவ்வாய் கிழமைக்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன்னின் முந்தைய செய்தி:

இன்சாட்4சி ஆர் இன்று விண்ணேவப்படுகிறது.


The launch of GSLV delayed Daily News & Analysis
Launch of GSLV rocket postponed due to technical snag Times of India
GSLV launch delayed at Sriharikota NDTV.com

அமெரிக்க ஓப்பன்: சில வெற்றி தோல்விகள்.

அமெரிக்க ஓப்பன் கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நடப்பு சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையுமான மரியாஷரபோவா(ரஷியா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். போலந்தை சேர்ந்த அக்னீஸ்கா 6-4, 1-6, 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் ஷரபோவாவை வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தார்.

இதே போல 7-ம் நிலை வீராங்கனையான நாடியா பெட்ரோவாவும் (ரஷியா) தோல்வி அடைந்தார்.

மேலும் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும் 16-வது இட வரிசையில் இருப்பவருமான மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) 6-3, 1-6, 0-6 என்ற கணக்கில் பெலாரசை சேர்ந்த விக்டோரியாவிடம் தோற்றார்.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சானியா மிர்சாவும் 3-வது சுற்றோடு வெளியேறினார். அவர் 2-6, 3-6 என்ற கணக்கில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீராங்கனை அனாவிடம் வீழ்ந்தார்.

உலகின் முதல் நிலை வீரரான ரோஜர்பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-7(4-7), 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவை சேர்ந்த ஜானை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் ரோட்டிக் (அமெரிக்கா), நிக்கோலி (ரஷியா), டோமி ஹால் (ஜெர்மனி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஒற்றையர் பிரிவில் தோற்ற சானியா இரட்டையர் பிரிவில் ஏற்கனவே 3-வது சுற்றுக்கு முன்னேறி விட்டார். தற்போது கலப்பு இரட்டையர் பிரிவிலும் முன்னேறி உள்ளார். சானியாமிர்ஸா- மகேஷ்பூபதி இணை குளோவின் (பிரான்ஸ்)- பாப்பிரையன் (அமெரிக்கா) இணையை வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதே போல லியாண்டர் பெயஸ் (இந்தியா) -சுகுனசி (அமெரிக்கா) இணை 7-6, 6-3 என்ற கணக்கில் பெஸ்சாக்- மார்ட்டின் டாம் (செக்குடியரசு) இணையை வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஆண்கள் இரட்டையர் ஆட்டத்தில் மகேஷ்பூபதி- ஜிமோன்ஜிக் (செர்பியா) இணை 2-வது சுற்றில்
தோற்றுவிட்டது.

மக்கள் தொலைக்காட்சி இரண்டாம் ஆண்டு துவக்க விழா

தன் முதலாண்டு வெற்றிப்பயணத்தை முடித்த மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழா சென்னையில் நடைபெற உள்ளது.

இடம் : காமராசர் அரங்கம்,தேனாம்பேட்டை,சென்னை-18

நாள் : 06.09.2007

நேரம் : மாலை 4.00 மணி

கலை நிகழ்ச்சிகள் மாலை 4.00 மணிக்கு

பாராட்டு விழா மாலை 6.00 மணிக்கு

இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா இரவு 8.00 மணிக்கு...

நிகழ்ச்சியில் தொலைக்காட்சி வெற்றிக்கு உழைத்தவர்களுக்குப் பாராட்டும்,பொறுப்பாளர்களுக்குப்
பாராட்டும் நடைபெறுகிறது.தொடக்கவிழாவில் நடுவண் தகவல் மற்றும் செய்திஒளிபரப்புத்
துறை அமைச்சர் மாண்புமிகு பிரியரஞ்சன்தாசு முன்சி,மக்கள்நலவாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணிஇராமதாசு கலந்துகொள்கின்றனர்.

தமிழக அமைச்சர்கள் மாண்புமிகுமு.க.ஸ்டாலின்,ஆர்க்காடுவீராசாமி முதலானவர்களும்
பழ.நெடுமாறன்.எம்.கிருட்டிணசாமி,வரதராசன்,இரா.நல்லகண்ணு,தொல்.திருமாவளவன்,
காதர்மொய்தீன் முதலான அரசியல் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

அழகின்சிரிப்பு என்னும் குறுந்தகடு வெளியிடப்படுகிறது.

மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் நிறைவுரையாற்றுவார்கள்.

தொடர்புக்கு

மின்னஞ்சல்: info@makkal.tv
இணையம் : www.makkal.tv

மு. இளங்கோவன் என்பவர் மின்னஞ்சலில் அனுப்பிய செய்தி

மீண்டும் உயருமா பெட்ரோல் டீசல் விலைகள்?

எண்ணெய் நிறுவனங்கள் கடன் பத்திரங்களை வெளியிட அனுமதிப்பதற்கு முன்பாக பெட்ரோல், டீசல், உள்ளிட்ட எரிபொருள்களின் விலைகளை உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்த அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும் கடன் பத்திரங்கள் வெளியிடுதல் தொடர்பாக எந்த முன்நிபந்தனையும் இல்லை. நாள்தோறும் சந்தித்து வரும் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கையின் அடிப்படையில் இதன் விலைகளை உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் உத்தேசித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசு நிறுவனங்கள் கோரிக்கை: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலைகளை உயர்த்தாமல் இருப்பதால் நாள்தோறும் ரூ.185 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

ஆனால், விலைகளை உயர்த்தி பொதுமக்களின் தலைகளில் சுமைகளை ஏற்ற வேண்டாம் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளதாகவும் அத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷேன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷேன் ஆகிய இரு நிறுவனங்கள் தங்கள் பங்குகளில் சில சதவீதத்தை விற்க முடிவு செய்துள்ள நிலையில் இவற்றில் இருந்து 5 சதவீத பங்குகளை அரசு சார்பில் பெற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆனாலும் மத்திய நிதி அமைச்சகத்துக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் இடையே இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்து வேற்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.

நஷ்டக் கணக்குகள்: கடந்த பிப்ரவரியில் எண்ணெய் விலைகள் ஏற்றப்பட்டு மீண்டும் குறைக்கப்பட்டன. இதில், பெட்ரோலுக்கு ரூ.2-ம், டீசலுக்கு ரூ.1-ம் குறைக்கப்பட்டது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் காட்டும் நஷ்டக் கணக்குகள் வருமாறு:

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.5.88-ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.4.80-ம், எல்.பி.ஜி. சமையல் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.189.14-ம், மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.14.63-ம் நஷ்டமாவதாக தெரிவித்துள்ளன.

விலைகளை ஏற்ற தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் கோரி வருவதால் இதன் விலைகள் ஏற்றப்படுவது மத்திய அரசின் முடிவில் உள்ளது. விலையேற்றத்துக்கு இடதுசாரிகள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு குரல் எழுப்பும். இதையும் மீறி அல்லது அனுசரித்தே தான் விலையேற்றங்கள் இருக்கலாம்.

தினமணி

கடையடைப்புகளால் கேரளாவின் இழப்பு 4,500 கோடி

கடையடைப்புகள் மூலமாக கேரளாவுக்கு ஆண்டுக்கு நான்காயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக, பந்த் எதிர்ப்பு முன்னணி நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதனால், அரசுக்கு மட்டும் 750 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

கேரளாவில் மாநிலம் தழுவிய கடையடைப்பு ஆண்டுக்கு சராசரியாக ஏழு முறை நடத்தப்படுகிறது. "லோக்கல்' பந்த்கள் ஆண்டுக்கு 185 முதல் 200 வரை நடத்தப்படுகின்றன. இவற்றில் சிக்கி மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும், அடிதடியில் காயம் ஏற்பட்டும் பலர் இறந்து போகின்றனர். ஒவ்வொரு கடையடைப்பின் போதும் பலர் வேலையிழக்கின்றனர். பெரிய அளவில் வருமானமும் பாதிக்கிறது.நிலைமை இப்படியே நீடித்தால் முதலீடு செய்யவே முடியாத மாநிலம் என்ற நிலைக்கு கேரள மாநிலம் தள்ளப்பட்டு விடும் என்று இந்த முன்னணியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

தினமலர்

கர்நாடக மாநில விருதை அப்துல்கலாம் புறக்கணிக்கக் கோரிக்கை

கர்நாடக மாநிலத்தின் விருதை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பெறக் கூடாது என்று புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் கூறியுள்ளது.

இந்த மன்றத்தின் நிறுவனர் பெ. பராங்குசம் வெளியிட்ட அறிக்கை:

கர்நாடக மாநில அரசின் உயரிய விருதான பசவாசிறீ விருதை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு வழங்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்த விருதில் ரூ. 10 லட்சம் பணமும், நினைவுப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதை ஏற்க வேண்டும் என்று கர்நாடக அரசு அப்துல் கலாமுக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். அப்துல்கலாம் ஒரு தமிழர். குடியரசுத் தலைவராக இருந்தபோது இந்தியனாகவும், தேசியவாதியாகவும் இருந்தார். இவருக்குப் பிடித்த நூல் திருக்குறள்.

திருக்குறள் எழுதிய திருவள்ளுவரின் சிலை பெங்களூரில் பல ஆண்டுகளாக சாக்குப் பையால் கட்டப்பட்டு மூடப்பட்டுள்ளது. சிலை திறக்க முடியாமல் இருக்கிறது. கன்னடர்கள் சிலையைத் திறக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

அதனால் இந்த விருதை பெறுவதற்கு முன் திருவள்ளுவர் சிலையைத் திறக்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் பராங்குசம்.

தினமணி

கலைமாமணி விழாவில் கருணாநிதி பேச்சு.

2006-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. திரைப்படம், நாடகம், இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்று விளங்கும் 69 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.

கலைமாமணி விருதுகளை ஆளுநர் பர்னாலா வழங்க, பதக்கங்களை முதல்வர் கருணாநிதி அளித்தார். விழாவில், கருணாநிதி பேசியது:

இந்த ஆண்டு சின்னத்திரை கலைஞர்களும் சிறப்பிக்கப்பட்டு இருக்கிறார்கள். முன்னதாக, அவர்களிடத்தில் ஒரு ஆதங்கம் இருந்தது. அவர்களுக்கும், விருது வழங்க வேண்டும் என்று. அதுகுறித்து என்னிடம் முறையிட்டார்கள்.

அதை நிறைவேற்றும் இடத்தில் நான் அப்போது இல்லை. தற்போது, நிறைவேறி இருக்கிறது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்பது முன்பு, சங்கீத நாடக சபா என்று இருந்தது. அதற்கு, திமுக ஆட்சியில் தான் இயல் இசை நாடக மன்றம் என பெயர் மாற்றப்பட்டது.

தமிழுக்கு தற்போது செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு இருக்கிறது. செம்மொழி அஸ்தஸ்து குறித்து பெருமை பேச வேண்டுமானால் என்னைத் தான் (கருணாநிதி) பேச வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் அனுப்பினார். அதை, புதையலாகப் பாதுகாத்து வருகிறேன்.

இன்று தமிழைக் காப்பாற்ற, பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தமிழர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. தமிழைக் காப்பாற்றுகிறவர்கள் எனக் கூறுபவர்களைக் கண்டு ஏமாந்து விடக் கூடாது. நாமும் ஏமாற்றி விடக் கூடாது.

கலைஞர் "டிவி'யை தமிழில் நடத்த வேண்டும் என அறிவுரை சொல்கிறார்கள். நன்றியோடு ஏற்றுக் கொள்கிறேன். கலைஞர் "டிவி'யில் தமிழ் வாழுமா எனக் கேட்கிறார்கள். கலைஞர் வாழ்கிறாரோ இல்லையோ? தமிழ் வாழும். அது, மற்றவர்களையும் வாழ வைக்கும்.

பகையைக் கக்கிக் கொண்டு தமிழைக் காப்பாற்ற முடியாது. உள்உணர்வுடன் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழைக் காப்போம் என்றார் கருணாநிதி.

தினமணி

எழும்பூரில் 9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்றுநோய் மையம்

இந்தியாவில் முதல் முறையாக, சென்னை எழும்பூரில் 9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்றுநோய் நிறுவனம் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் இந்த புற்றுநோய் நிறுவனத்துக்கு, முதல் கட்டமாக ரூ. 300 கோடி வரை முதலீடு செய்யப்படும்.

இதற்கான பணிகள் 6 மாதத்துக்குள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

சென்னை எழும்பூரில் உள்ள மத்திய அரசு மருந்து இருப்புக் கிடங்கில் தேசிய புற்றுநோய் நிறுவனம் அமைய இருக்கிறது. மருந்து இருப்புக் கிடங்கை மேம்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த கிடங்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மருந்து இருப்புக்கிடங்கு ஏறத்தாழ 18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதில், பாதி அளவுக்கு இடத்தை எடுத்து, தேசிய புற்றுநோய் நிறுவனம் தொடங்கப்படும்.

மருந்து இருப்புக் கட்டடங்கள் 200 ஆண்டுகள் பழமையானவை. இதனால், அனைத்துக் கட்டடங்களும் இடித்து மாற்றி அமைக்கப்படும்.

முதல் தவணையாக ரூ. 300 கோடி: தேசிய புற்றுநோய் நிறுவனம் தொடங்க முதல் தவணையாக ரூ. 300 கோடி செலவிடப்படும். உலகத் தரம் வாய்ந்த புற்றுநோய் மையமாக விளங்கும். நோயாளிகள் மட்டுமல்லாது, புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெறும்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற புற்றுநோய் நிறுவனங்களுடன் கூட்டு வைத்து, ஆராய்ச்சிப் பணிகள் நடைபெறும்.

நாட்டில் 10 லட்சம் பேருக்கு புற்றுநோய் புதிதாக வந்திருக்கிறது. புகையிலைப் பொருள்கள் காரணமாக, 60 சதவீதம் பேருக்கு புற்றுநோய் வருகிறது.

10-வது ஐந்தாண்டு திட்டத்தில், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணி உள்ளிட்டவைகளுக்காக ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டது. 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் ஏறத்தாழ ரூ.3,000 கோடி ஒதுக்கக் கேட்டு இருக்கிறோம். ரூ. 2,800 கோடி வரை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

அடையாறு புற்றுநோய் மையம், காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு ஆகியன மண்டல புற்றுநோய் மையங்கள் என்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அங்கீகாரம் அளிக்க பரிசீலனை செய்து வருகிறோம்
என்றார் அன்புமணி.

தினமணி

இன்சாட்4சி ஆர் இன்று விண்ணேவப்படுகிறது.

ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து "இன்சாட்4சிஆர்' செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி., எப் 04 ராக்கெட் இன்று மாலை 4.21 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வில் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஒரு மைல் கல்லாகவே விளங்குகிறது. 49 மீட்டர் நீளமுள்ள இந்த ராக்கெட் 414 டன் எடை கொண்டது. மூன்று அடுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் சுமந்து செல்லும் "இன்சாட்4சி ஆர்' செயற்கைக்கோள், இன்சாட்4 ரக செயற்கைக்கோளில் மூன்றாவது. இதற்கு முன் இன்சாட்4ஏ மற்றும் இன்சாட் 4பி ஆகிய செயற்கைக்கோள்கள் முறையே 2005ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2006ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன."இன்சாட்4சி ஆர்' செயற்கைக்கோளின் எடை இரண்டாயிரத்து 130 கிலோ. தகவல் தொடர்புக்கு முக்கியமானது. அதற்கு ஏற்றவகையில் 12 கேயூ பாண்ட் டிரான்ஸ்பான்டர்கள் இதில் உள்ளன. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.

தினமலர்

சென்னையில் குப்பைகளை அகற்றும் பணி - செய்தித் தொகுப்பு

3,000 குப்பைத் தொட்டிகளை உடைத்தது அதிமுக அரசு: கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு

சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர். தியாகராஜன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த சில நாள்களாக சென்னையில் நிலவி வரும் குப்பை பிரச்சினை தாற்காலிகமானது தான். மாநகராட்சியின் போர்க்கால நடவடிக்கைகளால் அடுத்த ஓரிரு நாள்களில் நிலைமை சீராகி விடும்.

கடந்த காலத்தில்...: உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னையில் மூன்று மண்டலங்களில் குப்பை அள்ளும் பணிக்காக ஓனிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போதும் இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டு, அவை சரி செய்யப்பட்டன.

அதன்பிறகு தொடர்ந்து திறம்படச் செயல்பட்ட ஓனிக்ஸ் நிறுவனத்தை விரட்ட பல வழிகளில் அதிமுக அரசு முயற்சித்தது. 26.1.2003-ல் குப்பைகளுடன் கட்டட இடிபாடுகளையும் சேர்த்து அள்ளி, ஓனிக்ஸ் கணக்குக் காட்டுவதாகக் கூறி, அந்த நிறுவனத்தின் 10-க்கும் மேற்பட்ட குப்பை லாரிகளை மாநகராட்சி நிர்வாகம் சிறை பிடித்தது.

பல தரப்பட்ட குப்பைகளை அள்ளுவது என ஓனிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை அப்போது நான் சுட்டிக் காட்டினேன். அதையடுத்து, அந்தப் பிரச்னை தீர்ந்தது.

ஓனிக்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்த காலம் முடிந்தவுடன் புதிய ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, குறைந்த விலைப்புள்ளி அடிப்படையில் தான் நீல் மெட்டல் நிறுவனத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. புதிய நிறுவனம் செயல்படும் போது சில நாள்களுக்குப் பிரச்னைகள் ஏற்படுவது சகஜம்.

~0~


குப்பையை காவல்துறையினர் அகற்றியது அறிந்து கருணாநிதி அளவற்ற மகிழ்ச்சி

கேள்வி: சென்னையில் குப்பை மலைகள் உருவாகிடும் முன்பே அவை மேடுகளாகக் கூட வளர விடாமல், சென்னை மாநகரக் காவல்துறையினர் 'மக்கள் நண்பன்' என்பதை நிரூபிக்கும் வண்ணம், ஒரே நாளில் ஓடியாடி உழைத்து சென்னையை சீர்படுத்திவிட்டார்களே; அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கருணாநிதி பதில்: அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். காவலர்கள் கடமை உணர்வுடன் நடந்து கொண்டதையும், அவர்களின் மனித நேயத்தையும் வியந்து, 'சட்டம், ஒழுங்கு பராமரிப்பதைப் போலவே சென்னை நகரை தூய்மையாக்குவதும் தங்கள் கடமைகளில் ஒன்று என்பதை சென்னை மாநகரக் காவலர்கள் சாதித்துக் காட்டினர்' என்று ஒரு நாளேடு சபாஷ் போட்டிருப்பதைப் படித்தபோது, என் கண்களில் ஆனந்தகண்ணீர் துளிர்த்தது.

கேள்வி: சென்னை மாநகரில் குப்பைகளை அள்ளுவது குறித்து நிறுவனம் மாற்றப்பட்ட காரணத்தால் ஒரு சில நாட்கள் குப்பைகள் சேர்ந்ததும், அவற்றை அகற்ற உடனே அரசின் சார்பில் முதலமைச்சரே தலையிட்டு, குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்துவிட்ட நிலையிலும், ஒருசில கட்சியினர் தாங்களே நேரில் வந்து குப்பைகளை அள்ளப் போவதாக அறிக்கை விடுக்கிறார்களே?

பதில்: அவர்கள் எல்லாம் கட்சி நடத்துவதை பிறகு எப்படித்தான் நாட்டுக்குக் காட்டிக் கொள்வது? அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை, கிடைத்த குப்பையைக் கூட அள்ளவிட மாட்டேன் என்கிறீர்களே?

~0~


எக்ஸ்னோராவிடம் ஒப்படைக்க வேண்டுகோள்- எக்ஸ்னோரா தலைவர் எம்.பி. நிர்மல்

சென்னையில் குப்பைகளை அகற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையில்லை. இப் பணியில் ஆர்வமும், பொதுநல நோக்கமும் கொண்ட எக்ஸ்னோராவிடம் ஒப்படைக்க அரசு முன்வர வேண்டும் என்று எக்ஸ்னோரா தலைவர் எம்.பி. நிர்மல் சனிக்கிழமை தெரிவித்தார்.

விழுப்புரத்தில் ஊராட்சித் தலைவர்களுக்கு ஆளுமை மேம்பாட்டு பயிற்சி அளிக்க வந்த அவர் கூறியது:

சென்னையில் குப்பைகள் அகற்றுவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஓனிக்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்த பிறகு, இப்பணி ஒப்படைக்கப்பட்ட நீல் மெட்டல் நிறுவனம் குப்பைகளை அகற்றுவதற்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை. இன்னும் தயாராகவுமில்லை. குப்பைகளை அகற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையில்லை. இதை சேவையாக தன்னார்வத்துடன் மேற்கொள்ளும் அமைப்பு தேவை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். குப்பை அகற்றுவதை வர்த்தகமாக்குவது, இயற்கை சமநிலையைப் பாதிக்கும்.

சென்னையில் ஏற்கெனவே எக்ஸ்னோரா அமைப்பினர், வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்ததால், குப்பைகளை மக்கள் வீதியில் கொட்டுவதில்லை. குப்பைகளை குறைக்கவும், அவற்றை உரமாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், மக்கள் ஈடுபாட்டுடன் இதில் ஆர்வம் காட்டினர் என்றார் நிர்மல்.

~0~


கருணாநிதி உத்தரவு எதிரொலி: சென்னையில் அசுர வேகத்தில் குப்பைகள் அகற்றும் பணி - ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டனர்

சென்னையில் திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், மைலாப்பூர் ஆகிய 3 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி நீல்மெட்டல் பனால்கா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களால் குப்பைகளை முழுமையாக அள்ள முடியாததால் குப்பைகள் தேங்கின.

கடலூருக்கு சென்று சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் கருணாநிதி குப்பைகள் பற்றிய செய்திகளை பத்திரிகைகளில் படித்தவுடன், உடனடியாக முதல்-அமைச்சர் கருணாநிதி, சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், கமிஷனர் ராஜேஷ் லக்கானி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் ஆகியோரை வரவழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, 'சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியில் அசுர வேகத்தில் ஈடுபடுங்கள். இதில் எந்த தொய்வும் இருக்கக்கூடாது. மேயர், உயர் அதிகாரிகளில் இருந்து ஊழியர்கள் வரை அனைவரும் ஒரே நேரத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

சென்னையில் குப்பைகள் அகற்றும் பணி குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓனிக்ஸ் நிறுவனத்தினர் தொட்டிகளை வைத்து குப்பை அள்ளும் பணிகளையும், நீல்மெட்டல் நிறுவனத்தினர் குப்பை அகற்றும் பணிகளையும், மாநகராட்சி 150 தனியார் லாரிகள் மூலம் இந்த பகுதிகளில் முழுமையாக குப்பைகளை அகற்றி வருகிறது. தெருக்களில் விழும் குப்பைகளும் முழுவீச்சில் அள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் ஆகியோர் தொடர்ந்து இந்த பகுதிகளில் பார்வையிட்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

~0~


நீல் மெட்டல் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்க :: மாநகராட்சி கவுன்சிலர்கள் வற்புறுத்தல்

குப்பையை சரி வர அள்ளாத நீல் மெட்டல் நிறுவனத்தின் ஒப் பந்தத்தை ரத்து செய்யக் கோரி மன்ற கூட்டத்தில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் வலியுறுத்தினர். நேற்று முன்தினம் நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம் மற்றும் மயிலாப்பூர் ஆகிய மூன்று மண்டலங்களில் துப்புரவு பணியை ஒப்பந்தம் பெற்றுள்ள நீல்மெட்டல் பனால்கா நிறுவனம் சரிவர பணி செய்யாததை சுட்டிக் காட்டி கவுன்சிலர்கள் பேசினர்.
- தினமலர்

~0~


முந்தைய சற்றுமுன்:
1. குப்பையை வாரிய அதிமுக கட்சியினர் கைது
2. விஜயகாந்த் 2 நாள் கெடு
3. துப்புரவு பணியில் புதிய நிறுவனம் தோல்வி - ஒப்பந்தம் ரத்தாகிறது



The Hindu : Tamil Nadu / Chennai News : Garbage cleared with police assistance
The Hindu : Tamil Nadu / Chennai News : Garbage issue generates heat at council meet

யுஎஸ் ஓபன்: ஷரபோவா அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகளில், தரப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளவரும் சென்ற வருடம் கோப்பையை வென்றவருமான மரியா ஷரபோவா தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.

நேற்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் போலந்து நாட்டின் ராட்வான்ஸ்கா (Agnieszka Radwanska)வை சந்தித்தார்.

ஒரு கட்டத்தில் எட்டு ஆட்டங்களைத் தொடர்ச்சியாக வென்று, மூன்றாவது செட்டில் சர்வை முறியடித்து முன்னணியில் இருந்த ஷரபோவா, கடைசி ஆறு ஆட்டங்களையும் தவறவிட்டு 4-6, 6-1, 2-6 என்று பதினெட்டு வயதான போலந்து வீராங்கனையிடம் தோல்வி கண்டார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டிகளில் முன்னணி வீரர்கள் லெய்டன் ஹூவிட், மாரட் சஃபீன் ஆகியோரும் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர்.

SI.com - 2007 US Open - Radwanska stuns Sharapova at U.S. Open
Sharapova Is Dethroned at U.S. Open - washingtonpost.com

Saturday, September 1, 2007

"கேரளாவுக்காக தனி மண்டலம் சாத்தியமில்லை" - ஆர். வேலு

பாலக்காடு ரெயில்வே கோட்டத்தை பிரித்து சேலத்தில் புதிய ரெயில்வே கோட்டம் அமைக்கப்படுகிறது. இதற்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக கேரள முதல்-மந்திரி அச்சு தானந்தன் ரெயில்வே மந்திரி லல்லுபிரசாத்யாதவை சந்தித்து தனி கோட்டம் அமைக்க கூடாது என வற்புறுத்தினார். அப்படி தனிக்கோட்டம் அமைப்பதாக இருந்தால் திருவனந்தபுரத்தை மையமாக கொண்ட கேரளாவுக்கு என தனி ரெயில்வே மண்டலம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து பரிசீலிப்பதாக அவரிடம் லல்லுபிரசாத் யாதவ் உறுதி அளித்தார்.

இந்த நிலையில் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரெயில்வே இணை மந்திரி ஆர்.வேலு பதில் அளிக்கையில் கேரளாவில் ரெயில்வே மண்டலம் அமையும் சாத்தியம் இல்லை என்றார்.

இதுகுறித்து பாராளுமன்றத்தில் இணை அமைச்சர் ஆர்.வேலு கூறும் போது,

புதிதாக ரெயில்வே மண்ட லம் அமைக்க வேண்டுமானால் பல்வேறு சாத்தியக் கூறுகள் ஆராயப்படுகின்றன. பரப் பளவு, வேலை பளு, போக்கு வரத்துமுறை, இயக்கம், நிர்வாக தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இத்தகைய புதிய மண்டலங்கள் உருவாக்கப்படும்.

இத்தகைய சாத்தியக் கூறுகள் இந்த கோரிக்கையில் இல்லாததால் புதிய மண்டலம் அமைப்பது நடைமுறையில் சாத்தியமானதல்ல.


என்று கூறினார்.

மாலைமலர்

அப்பல்லோ: மேலும் 100 மார்புவலி சிகிட்சை மையங்கள்

இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் 18 - ம் தேதிக்குள் 100 மார்பு வலி சிகிட்சை மையங்களைத் திறக்க அப்பல்லோ மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.

இந்தத் தகவலை மருத்துவமனையின் மேலாண் இயக்குநர் ப்ரீதா ரெட்டி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சென்னை மேற்கு சிஐடி காலனியில் உள்ள விஜய் மருத்துவமனையில் மார்பு வலி சிகிட்சை மையம் (Clinic) திறந்து வைத்து அவர் பேசியது:

அப்பல்லோ மருத்துவமனையின் ஆண்டு விழா செப்டம்பர் 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, இந்தியா முழுவதும் 100 மார்பு வலி சிகிட்சை மையங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். இதுவரை, 40 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மார்பு வலி ஏற்படும்போது, அருகாமையில் உள்ள மருத்துவ மையங்களில் நோயாளிகள் உடனடியாக செல்வதற்கு வசதியாக இது போன்ற மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன என்றார் ப்ரீதா ரெட்டி. நிகழ்ச்சியில், விஜய் மருத்துமனையின் மேலாண்மை இயக்குநர் பி.குமாரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி

பத்திரிக்கையாளர் சாய்நாத்துக்கு மகசேசே விருது.

தமிழக ஊடகவியலாளர் சாய்நாத்துக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் உயர்ந்த விருதான மகசாசே விருது இன்று வழங்கப்பட்டது.
ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் மகசாசே விருதை பிலிப்பைன்ஸ் நாடு வழங்கி வருகிறது. இவ்விருதிற்குச் சிறப்பான கிராமிய பொருளாதாரக் கட்டுரைகளை எழுதிய தமிழக பத்திரிகையாளர் சாய்நாத் தேர்வு செய்யப்பட்டார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.


ஊடகவியலாளர் சாய்நாத்துக்கு "சற்றுமுன்" குழுமம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

காலரா நோய்ப் பரவல்: ஒரிசாவில் 10ம் தேதி முழு அடைப்பு

காலரா நோயை கட்டுப்படுத்த தவறிய ஆளும் பிஜூ ஜனதா தள அரசை கண்டித்து ஒரிசாவில் வரும் 10ம் தேதி பந்த் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் நாராயண சாமி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பழங்குடியின மக்களுக்கு மருத்துவ உதவிகள் மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். முதல்வர் நவீன் பட்நாயக் அரசு தோல்வியடைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


தினமலர்

நிருபர்களிடம் அசடு வழிந்தார் புஷ்.

மலேசிய பிரதமர் அப்துல்லா பாத்வி அண்மையில் மறுமணம் செய்து கொண்டதையும், அவருக்கு தான் வாழ்த்து கூறியதையும் அடியோடு மறந்துவிட்ட அமெரிக்க அதிபர் புஷ், இறந்துபோன பாத்வியின் மனைவியைப் பற்றி பேசியதால் நிருபர்கள் முன் அசடு வழிந்தார்.

வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை ஆசிய பசிபிக் நாட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் புஷ், "மலேசிய பிரதமர் பாத்வியின் மனைவி 2005-ல் மரணமடைந்த போது, நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தேன்' என்று சோகம் ததும்ப கூறினார்.

பாத்வி கடந்த ஜூனில் மறுமணம் செய்து கொண்டார் என்று புஷ்ஷிடம் நிருபர்கள் நினைவுப்படுத்திய போது, "அப்படியா, நான் உடனே அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டுமே' என்றார்.

அப்போது குறுக்கிட்ட புஷ்ஷின் நேர்முக செயலாளர், "நீங்கள் ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்து விட்டீர்கள் அதிபர் புஷ்" என்று நினைவுப்படுத்தினார்.

அதைக்கேட்டதும் நிருபர்கள் மத்தியில் அசடு வழிந்து சிரித்த புஷ், "பரவாயில்லை, மீண்டும் ஒருமுறை அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப் போகிறேன்" என்றார்.

சமீபத்திய ஒரு பேட்டியில், பிபிசி நிருபரின் வழுக்கைத் தலையை கிண்டலடித்த புஷ்ஷுக்கு, சரியான பதிலடி கொடுத்திருக்கின்றனர் ஆசிய நிருபர்கள்.

தினமணி

பார்வையற்றோரும் பயன்படுத்த மின்-அஞ்சல் - சாதித்த மாணவியர்

தஞ்சாவூரை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவிகள் பார்வையற்றோர் பயன்படுத்தும் வகையில் தொலைபேசி வழி மின் அஞ்சல் வசதிக்கான தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகப் புலத் தலைவர் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) பி. ரவிச்சந்திரன் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைத் தலைவர் ஜி. ஜெகஜோதி ஆகியோரின் மேற்பார்வையில் பேராசிரியர் கே. மீனா வழிகாட்டுதலின் கீழ் மாணவிகள் டி. சித்ரா, பி. ரேவதி, ஐ. தென்றல், கே. வித்யா ஆகியோர் இம்முயற்சியில் ஈடுபட்டனர்.

இம்மாணவிகளின் கண்டுபிடிப்புக்கு தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு சார்பில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். தொழில்நுட்பப் கல்லூரியில் ஆக. 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியில் முதல் பரிசு கிடைத்துள்ளது.

நாம் வழக்கமாக பயன்படுத்தும் கணினியில் எழுத்துக்களை ஒலிகளாக மாற்றும் ஒரு கருவியை பொருத்துவதன் மூலம் இணையதளத்தில் தங்களுக்கு வரும் இ-மெயில்களை பார்வையற்றவர்கள் தொலைபேசி கருவி மூலம் காதால் கேட்டுக் கொள்ளாம். மேலும் இதே முறையில் இ-மெயிலும் அனுப்பலாம். இதற்கென தனியே பயன்படுத்துவோர் எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றைக் கொண்டு இந்த வசதியை பெறலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

"வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் இணையதளத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பார்வையற்றவர்கள் இணைய தள வசதியை பெற இயலாத நிலையில் உள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இக்கருவியை மாணவிகள் செய்துள்ளனர்' என்று கூறி மாணவிகளைப் பாராட்டினார் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன்.

நன்றி: தினமணி

GSLV-F04 விண்ணேற்றத்திற்கு தயார்நிலை ஆரம்பம்

பூமிக்கு நிலையான வட்டப்பாதையில் துணைக்கோள்களை செலுத்தவல்ல ஜிஎஸ் எல்வி ஏவுகணையை நாளை விண்ணில் இந்திய நேரம் 4:21 மணிக்கு அனுப்ப இன்று மதியம் 2 மணியிலிருந்து எண்ணிக்கை குறைப்பு ஆரம்பமானது. இந்த ஏவுகணை இந்திய தொலைதொடர்பிற்கான துணைக்கோள் இன்சாட்-4CR ஐ ஏற்றிச் செல்லும். இந்த துணைக்கோளில் வீட்டிற்கு நேரடி தொலைக்காட்சி (DTH), வழங்க ஏதுவாக 12 அதிக சக்தி Ku பட்டையில் இயங்கும் ஒளிபரப்பு சாதனங்கள் அமைந்துள்ளன. சென்றமுறை இன்சாட் -4C உடன் செலுத்திய இவ்வித ஏவுகணை பாதியிலேயே தனது சக்தியை இழந்து வீழ்ந்ததின் பின்ன்ணியில் நாளைய விண்ணேற்றம் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப் படுகிறது.
The Hindu News Update Service
Zee News - INSAT-4CR launch put off by a day to Sept 2

குப்பையை வாரிய அதிமுக கட்சியினர் கைது

மாநகராட்சியின் குப்பை களையும் பணி முடங்கியிருப்பதால் குமியும் குப்பைகளை எடுக்க முயன்ற அதிமுக எம் எல் ஏ உட்பட அக்கட்சியினரை காவலர்கள் கைது செய்தனர். தி.நகர் எம் எல் ஏ கலைராஜன் திருவல்லிக்கேணியில் குப்பை வாரும்போது ஆவருடன் 29 கட்சியினரையும் காவலர்கள் கைது செய்தனர். இதேபோல நகரின் பலவேறு பகுதிகளில் , பெண்கள் உட்பட, 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் நலனுக்காக குப்பை வாரும் பணியை கையிலெடுத்தக் கட்சியினரை கைது செய்ததை அதிமுக தலைவர் ஜெ ஜெயலலிதா கண்டித்துள்ளார். குப்பையை களையும் பணியைக் கூட கையாள முடியாத அரசு எவ்வாறு மக்களின் குறைகளை களையப் போகிறது என்று கேள்வி எழுப்பினார்.

இது பற்றிய The Hindu News Update Service

சற்றுமுன்:கௌஹாத்தி மார்க்கெட்டில் குண்டுவெடிப்பு

கௌஹாத்தியின் மைய சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு இன்று மதியம் நடந்துள்ளது. இதனால் பலர் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. மேல் விவரங்கள் இல்லை.

Blast rocks Guwahati market - Yahoo! India News

கடைசியில் கிடைத்த விவரங்கள்:DNA - India - One killed, 12 injured in Guwahati blast - Daily News & Analysis

தலைக்கவசம் கட்டாயம்: உயர் நீதிமன்றம் அங்கீகாரம்.

வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்தி இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி உத்தரவை பிறப்பித்தது. கடந்த ஜுன் மாதம் 1-ந் தேதி முதல் சென்னை உள்பட 6 மாநகராட்சிகளிலும், ஜுலை 1-ந் தேதி முதல் பிற இடங்களிலும் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை விலக்கம் செய்யவேண்டும் என்று பொறியாளர் நிம்முவசந்த் என்ற பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இரு சக்கர வாகனங்களினால் மிக குறைந்த அளவில் தான் விபத்துக்கள் ஏற்படுவதால் தலைக்கவசம் அணிய வேண்டிய கட்டாயமில்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் முகோபாத்தியா, என்.பால்வசந்தகுமார் ஆகியோர் நேற்று தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்கள்.

வாகனச்சட்டம் 129ம் பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இச்சட்டம், சுதந்திரமாகச் செல்ல வழி வகுக்கும் அரசியல் சட்டப்பிரிவு 21 க்கு எதிராக அமையவில்லை
என்பது தீர்ப்பின் சாரமாக இருந்தது.

செய்தி மூலம்: மாலைமலர்

சென்னை: தவற விட்ட பெட்டியால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நாராயண உன்னி. இவர் இராணுவத்தில் அதிகாரியாக உள்ளார். ஓணம் பண்டிகையைக் கொண்டாட இவர் மனைவி, குழந்தைகளுடன் கேரளா வந்து இருந்தார்.

மீண்டும் பணியில் சேருவதற்காக நாராயண உன்னி திருவனந்தபுரத்தில் இருந்து வரும் கோரமண்டல் விரைவு தொடர்வண்டியில் புறப்பட்டார். இன்று அதிகாலை அந்த வண்டி பேசின் பிரிட்ஜ் நிலையத்துக்கு வந்தது. சமிக்ஞை கிடைக்காததால் நீண்ட நேரமாக அவ்வண்டி நின்றுக் கொண்டிருந்தது.

இதையடுத்து சென்னை மத்திய நிலையத்துக்கு தானியில் சென்று விடலாம் என்று நாராயண உன்னி முடிவு செய்தார். எனவே தன் பெட்டிகளுடன் அவசரம், அவசரமாக இறங்கினார். பிறகு குடும்பத்தினருடன் ஒரு தானியில் ஏறி மத்திய தொடர்வண்டி நிலையத்துக்குச் சென்றார்.

போகும்போது அவர் மறதியாக ஒரு பெட்டியைத் தவற விட்டு விட்டார். அந்த பெட்டி கேட்பாரற்று பேசின் பிரிட்ஜ் நிலைய நடைபாதையில் கிடந்தது. நீண்ட நேரமாக அந்தப் பெட்டி கிடந்ததால் பயணிகள் சந்தேகம் அடைந்தனர்.

அதில் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்று கருதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவலர்களும் வெடிகுண்டு நிபுணர்களுடனும் மோப்ப நாயுடனும் விரைந்து அருகில் சென்று சோதனை நடத்தினார்கள்.

இந்த பரபரப்பால் பேசின் பிரிட்ஜ் பகுதியில் பீதி தொற்றிக் கொண்டது. மக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொது மக்கள் திணறியபடி கடும் அவதிக்குள்ளானார்கள்.

இதற்கிடையே உலோக நுண்ணாய்வுக் கருவி (மெட்டல் டிடெக்டர்) மூலம் சோதித்த பின், அப்பெட்டியில் வெடிபொருள் எதுவும் இல்லை என்று உறுதி செய்தனர். பிறகு பெட்டியை உடைத்துத் திறந்து பார்த்தனர். அதற்குள் துணிகள்தான் இருந்தன.

பரபரப்பு ஏற்படுத்திய பெட்டியைத் தவற விட்டப் பயணி யாராக இருக்கும் என்று காவல் துணை ஆய்வாளர் தங்கவேலு விசாரணை நடத்தினார். அப்போது நாராயண உன்னி பதறியபடி அங்கு வந்தார்.

மத்திய நிலையம் சென்ற பிறகே அவருக்கு ஒரு பெட்டியைத் தவற விட்டு விட்டோம் என்பது தெரிந்து அதே தானியில் அவர் உடனே திரும்பி வந்தார்.

வெடிகுண்டு பரபரப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டதால் அவரால் உடனே பேசின் பிரிட்ஜ் நிலைய பகுதிக்குள் வர இயலவில்லை. இதை அவர் காவல் அதிகாரிகளிடம் விளக்கி கூறி மன்னிப்புக் கேட்டு கொண் டார். இராணுவ அதிகாரி என்பது தெரிய வந்ததும் காவல் அதிகாரிகள் அவரிடம் பெட்டியை ஒப்படைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

செய்தி மூலம்: மாலைமலர்

-o❢o-

b r e a k i n g   n e w s...