.

Monday, September 3, 2007

தில்லி தெருக்களில் பிச்சையெடுக்கும் முன்னாள் விளம்பர நடிகை.

32 வயதாகும் கீதாஞ்சலி நக்பால் ஒரு காலத்தில் முன்னணி விளம்பர நடிகை (Model) என்று பெயர் பெற்றவர். பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னின் தோற்றத்தையொத்த கீதாஞ்சலி, குடும்பத்தினரால் கை விடப்பட்டவர்.

வாரப்படாத தலை, அழுக்கான ஆடைகளுடன் தெற்கு தில்லியின் சந்தை;அங்காடிப்பகுதிகளில் ஒரு பிச்சைக்காரியாகத் திரிந்த அவரை கண்ட ஒரு ஒளிப்படச்செய்தியாளர் தில்லி பெண்டிர் ஆணையத்திடம் ஒப்படைத்துச்சென்றார்.

மனநிலை குழம்பியிருந்த அவரை VIMHANS (வித்யாசாகர் மனநல ஆராய்ச்சி நிறுவனம்) வசம் சேர்ப்பித்து சிகிச்சையளித்து வருகின்றனராம். முன்னதாக, இது தொடர்பாக, மாநகர குற்றவியல் நடுவர் மன்றத்திடம் ஒரு வழக்கும் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாம்.

பி/டி/ஐ செய்திகளிலிருந்து...
Former model found begging on the streets of Delhi

தமிழகம் முழுவதும் பலத்த காவல்துறை கண்காணிப்பு

ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தால் இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய தலைநகரங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐதராபாத்திற்கு அடுத்தப்படியாக தீவிரவாதிகள் தமிழகத்தை குறி வைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்தார்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் மார்க்கெட், கோயில்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி

ஐ.நா பாராட்டும் ம.பி.முதல்வர்

ஐ.நா.சபையின் 21-ம் நூற்றாண்டு மேம்பாட்டு குறிக்கோள்களை எட்ட திறம்பட செயல்பட்டதாக மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்கு ஐ.நா. சபை சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்தூரில் புதன்கிழமை நடைபெறும் விழாவில், ஐ.நா. நூற்றாண்டு மேம்பாட்டு பிரசாரப் பிரிவின் ஆசியத் தலைவர் மினார் பிம்பாலே சான்றிதழை வழங்குகிறார்.

பசி-வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் ஆரம்பக்கல்வி, பாலின வேறுபாட்டை ஒழித்தல், பெண் சுதந்திரம், பெண்சிசுக்கொலை தடுப்பு, கர்ப்பிணிகள் உடல்நலம், மலேரியா, எய்ட்ஸ் மற்றும் இதரநோய்கள் தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சர்வதேச தரத்தில் மேம்பாட்டு வளர்ச்சிக்கான ஒருமித்த முயற்சி மேற்கொள்தல் ஆகிய குறிக்கோள்களை எட்ட வேண்டும் என்று இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் ஐ.நா. சபை இலக்கு நிர்ணயித்தது.

அக்டோபர் 17-ம் தேதி உலக வறுமை ஒழிப்புத் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இத்தகைய ஊக்குவிப்பு நடவடிக்கைகளை ஐ.நா. சபை மேற்கொண்டு வருகிறது.

தினமணி

கல்பாக்கம் வான்வெளியில் விமானங்களுக்குத் தடை!

இலங்கையில் விடுதலைப் புலிகளிடம் போர் விமானங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவின் அணுசக்தி மையங்களில் ஒன்றான கல்பாக்கம் வான் பகுதியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த முடிவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இந்திய விமானப் படை ஏற்கெனவே விமானப் போக்குவரத்து துறையுடன் இணைந்து பணிகளைத் துவக்கிவிட்டது. இதையடுத்து எல்லாவித வான் போக்குவரத்தும் கல்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது.

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்திற்கு மேலும் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் அதிநவீன ராடார்கள் மூலம் அப்பகுதியை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி

மாநில வளர்ச்சி பகைமையை மறக்கடித்தது...பீஹாரில்

நிதீஷும் லாலுவும் அரசியலில் ஒருவருக்கொருவர் பகை பாராட்டினாலும் மாநில வளர்ச்சி என்று வரும்போது ஒருவரையோருவர் பாராட்ட தயங்கவில்லை. இன்று நீதியமைச்சர் பி.சிதம்பரம் ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தை திறந்து வைத்த விழாவொன்றில் முதல்வர் நிதீஷ் குமார் பிஹாரில் உள்ள இரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவாரேயானால் அவரே நிரந்தர இரயில்வே அமைச்சராக இருக்க வேண்டும் எனக் கூறினார். லாலுபிரசாத் அவர்களும் நிதீஷ் குமார் இரயில்வே அமைச்சராக இருந்தபோது திட்டமிட்ட இரயில்பெட்டி தொழிற்சாலையை நான் முடித்து வைத்திருக்கிறேன்,அதற்கு அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார். உடனிருந்த வேதியல் மற்றும் உரத்துறை அமைச்சர் பாஸ்வானும் நாங்கள் மூவருமே வெவ்வேறு அரசியல் அணிகளையும் கொள்கைகளையும் பின்பற்றுபவர்கள்; அரசியல் வேற்றுமைகளும் கொண்டவர்கள்;இருப்பினும் பிஹாரின் வளம் என்று வரும்போது மூவரும் சேர்ந்து உழைப்போம் என்றார்.
The Telegraph - Calcutta : Northeast

அ தி மு க - பா ஜ க மீண்டும் கை கோர்க்கும்?

அ.தி.மு.க.- பா.ஜனதா மீண்டும் கூட்டணி அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் ஒரு இடத்தில் கூட அவை வெற்றி பெறவில்லை. சமீபத்தில் 3-வது அணி அமைத்து தீவிரமாக மத்திய அரசியலில் ஈடுபட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முடிவு செய்தார்.

ஆனால் இந்த அணி எதிர்பார்த்த அளவு வெற்றிகரமாக அமையவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. எனவே அ.தி.மு.க. 3-வது அணியை விட்டு விலகும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

2 முறை பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து இருந்தது. மீண்டும் தமிழ்நாட்டில் கணிசமான பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் அ.தி.மு.க.வுடன் கூட் டணி அமைக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா மேலிடம் கருதுகிறது.

எனவே கூட்டணி அமைப்பது தொடர்பாக பா.ஜனதா மேலிட தலைவர்கள் அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். இதற்கு பா.ஜனதா அணி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட செகாவத் பாலமாக இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க. 3-வது அணியில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலில் செகாவத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டார்கள். இது பா.ஜனதாவுடன் ஏற்பட இருக்கும் கூட்டணியின் தொடக்கம் தான் என பா.ஜனதா வட்டாரங்கள் கூறுகின்றன.

3-வது அணியில் அ.தி.மு.க. தவிர முலாயம்சிங் யாதவ் கட்சி, சந்திரபாபு நாயுடு தலை மையிலான தெலுங்கு தேசம் உள்பட 7 மாநில கட்சிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் இந்த கட்சிகள் எல்லாம் சேர்ந்து 70 இடங்களில் தான் வெற்றி பெற முடியும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க.வுக்கு தற்போது தமிழ்நாட்டில் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. எனவே அ.தி.மு.க. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க தயார் ஆகி வருவதாக கூறப்படுகிறது. 3-வது அணியில் இருந்தால் மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்க முடியாது. எனவே, இந்த அணியில் இருந்து அ.தி.மு.க. விலகி பாரதீய ஜனதா அணியில் சேரும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற வேண்டும் என்றால் முக்கிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்து கூட்டணி பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று பா.ஜனதா மேலிடம் கருதுகிறது.

எனவே தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் மீண்டும் பா.ஜனதா கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான தீவிர முயற்சிகளிலும் பா.ஜனதா இறங்கியுள்ளது. இதற்கு அ.தி.மு.க.வும் பச்சைக்கொடி காட்டி விட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக மாலைமலர் தெரிவிக்கிறது.

பங்களாதேஷ்: கலிதா ஜியா கைது.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, அவரது இளைய மகன் அராபத் ரகுமான் ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டனர். முன்னதாக, கலிதா ஜியா கடந்த 2001-2006ம் ஆண்டுவரை பதவியில் இருந்த போது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மகன் அராபத் ரஹ்மான் பண்ணைக்கு ஆள் எடுக்க உதவியதாக பங்களாதேஷ் இலஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் கலிதா ஜியா மீது நேற்றிரவு வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து இக்கைதுகள் நிகழ்ந்தன.

பங்களாதேஷ் தேசிய வருவாய் வாரியத்தின் நடுவண் புலனாய்வுக் குழு அண்மையில் இவர்களது வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கலிதா ஜியா உட்பட 11 பேரின் வங்கிக் கணக்குகள் கடந்த சில நாட்களுக்கு முன் முடக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 7.45 மணியளவில், டாக்கா கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள கலிதாவின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர், அவரையும், அவரது மகனையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

தம் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை; சிறைச் செல்ல தாம் பயப்படவில்லை
என்று கலிதா ஜியா கூறினார்.

இன்சாட் விண்ணேவல் வெற்றிகரம்: தலைவர்கள் வாழ்த்து.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி - எஃப் 04 ராக்கெட் மூலம் ஞாயிறன்று மாலை 4.21 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த செயற்கைக் கோள் இன்சாட் 4சி ஆர் தொழில்நுட்ப காரணங்களால் சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக விண்ணில் மாலை 6.20 மணியளவில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.

3 கட்டங்களாக திட்டமிடப்பட்ட வேகத்துடன் டிரான்ஸ்பாண்டர்களை விண்வட்டப்பாதையில் செலுத்தியதும், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். இன்சாட் 4 சி ஆர் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பின்னர் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும் மாதவன் நாயர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்த செயற்கைக்கோள் மூலம் வீடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு வசதிகளை அளிப்பதற்காக உயர் சக்தி வாய்ந்த 12 கே.யு. பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் விண்ணுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
இன்சாட் - 4 சி ஆர் செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டிருப்பதற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் உள்பட தலைவர்கள் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை கற்பழித்த சாமியார் கைது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள செங்கம்மாள் கோயிலில் கோவிந்தசாமி (65) என்ற துறவி உள்ளார். இவர் கோயில் முன்பு விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த 12 வயதுயை கற்பழித்ததாக தெரிகிறது.

மேலும் நடந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டுக்கு சென்ற சிறுமி நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அதன் பின்னர் கோவிந்தசாமி கைது செய்யப்பட்டார்.

அவர் மீது கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் எஸ்.பி., அசோக்குமார் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சாமியார் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் அடைக்கப்பட்டார்.

நக்சல்களினால் பாதிக்கப்பட்ட இடத்தில் கால்-சென்டர் துவக்கம்

கிருஷ்ணகிரியின் சனசந்திரம் கிராமத்தில் ஊராட்சித்துறை அமைச்சர் முக ஸ்டாலினால் 'அழைப்பு மையம்' வெள்ளிக்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது. ஃபாஸ்டரா (FOSTERA -fostering technologies in rural areas) அமைப்பின் உதவியுடன் இந்த கால்-சென்டர் துவங்கியது. இதனால், தமிழகத்தின் கிராமங்களையும் விப்ரோ, காமெட் போன்ற நிறுவனங்களின் வேலை சென்றடையும்.

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 120 பேர் இதனால் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். நான்கு லட்சம் ரூபாய் அரசு மானியத்தின் உதவியுடன் கேளமங்கலம், தளி, மாத்தூர், பர்கூர், காவேரிப்பட்டணம் போன்ற கிராமப்புற பகுதி மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஐம்பது லட்சம் ஒதுக்கிடப்பட்டிருக்கிறது.

First rural call centre in naxalite-affected Tamil Nadu district
IndianExpress.com :: Geneva outsources, TN Naxal belt village gets a call centre
DNA - India - From naxal village to BPO hub - Daily News & Analysis

கலாநிதி மாறனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்குபவர்களின் தலை பத்து பட்டியல்:

1. முகேஷ் அம்பானி - ரிலையன்ஸ்: ரூ. 24.51 கோடி
2. கலாநிதி மாறன் - சன் தொலைக்காட்சி: ரூ. 23.26 கோடி
3. காவேரி கலாநிதி - சன் தொலைக்காட்சி: ரூ. 23.26 கோடி

4. சுனில் மித்தல்- பார்தி ஏர்டெல்: 15 கோடி
5. கே அன்ஜி ரெட்டி - டாக்டர் ரெட்டிஸ்: 14.4
6. பி எம் முஞ்சால் - ஹீரோ ஹோண்டா: 13.99

7. பவன் முஞ்சால் - ஹீரோ ஹோண்டா: 13.88
8. நவீன் ஜிண்டால் - ஜிண்டால் ஸ்டீல்: 13.5
9. நகாகாவா (Toshiaki Nakagawa) - ஹீரோ ஹோண்டா: 13.44
10. சஜ்ஜன் ஜிண்டால் - JSW ஸ்டீல்: 13.24

Mukesh Ambani's take-home ten times that of brother Anil

இடிந்து விழுந்த மேம்பாலம்



பாகிஸ்தானின் கராச்சி புறநகரில் சனிக்கிழமை இடிந்து விழுந்த மேம்பாலம். இதில் பத்து பேர் இறந்தனர், பலர் காயமடைந்தனர். 2 மாதங்களுக்கு முன்புதான் இப் பாலத்தை அதிபர் முஷாரப் திறந்து வைத்தார்.


தினமணி

Daily Times - Leading News Resource of Pakistan - The authorities just can’t be trusted any more: Karachi residents
Ten dead in Karachi bridge collapse, inquiry ordered- Hindustan Times

இடைத்தேர்தலில் பி.சி.கந்தூரி வெற்றி: உத்தரகண்டில் பா.ஜ.க.வுக்கு 'மெஜாரிட்டி'

உத்தரகண்ட் மாநிலம் துமாகோட் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அந்த மாநில முதல்வர் பி.சி.கந்தூரி வெற்றி பெற்றார். இவரது வெற்றியையடுத்து ஆளும் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை (70-க்கு 36) கிடைத்துள்ளது.

மொத்தம் 70 உறுப்பினர்கள் உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைக்கு அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 32 இடங்கள் கிடைத்தன. சுயேச்சை உறுப்பினர்கள் 3 பேரின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி.சி.கந்தூரி, உத்தரகண்ட் மாநில முதல்வராக தேர்வானார். இதையடுத்து அவர் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

துமாகோட் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் பிரமுகர் ரவாத் பதவி மற்றும் கட்சியில் இருந்து விலகி கந்தூரி போட்டியிட வாய்ப்பளித்தார். இதற்கு கைங்கர்யமாக தான், எம்.பி. பதவி விலகிய தொகுதியில் ரவாத்தை நிறுத்த முடிவு செய்தார் கந்தூரி.

தினமணி

Zee News - Khanduri wins Dhumakot by-poll, BJP secures majority
IndianExpress.com :: Khanduri silences critics with big win in Dhumakot

ஒலிம்பிக் மாரத்தானில் பங்கேற்க விரும்பும் அமீரக தமிழ் இளைஞர்


ஒலிம்பிக் மாரத்தானில் பங்கேற்க விரும்பும் அமீரக தமிழ் இளைஞர்
தமிழக அரசு உதவ முன்வருமா ?

ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயில் உள்ள ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் ஒரு அங்கமாக விளங்கி வரும் ஜீனத் லேண்ட் டிரான்ஸ்போர்ட்டில் பணி புரிந்துவருபவர் யு. அஹமது சுலைமான் ( வயது 31 ). தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தைச் சேர்ந்த இவர் தற்பொழுது திருச்சியில் வசித்து வருகிறார்.


பள்ளி, கல்லூரிகளில் பயிலும் போதே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றதன் காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த ஜனவரி மாதம் ஸ்டாண்டர்ட் வங்கி ஆதரவில் துபாயில் நடைபெற்ற சர்வதேச மாரத்தான் போட்டியில் ( 42.195 கிமீ ) முதல் முறையாக பங்குபெற்ற இவர் 372 வது இடத்தைப் பிடித்தார். இப்போட்டியில் சுமார் 4 ஆயிரத்து 800 பேர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதல் ராசல் கைமாவில் நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்று 210 வது இடத்தைப் பிடித்தார். இதில் 6 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மேலும் அமீரக பாதுகாப்பு அமைச்சகம் நடத்திய அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்று 15 வது இடத்தைப் பெற்றார்.

இதன் காரணமாக எதிர்வரும் 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்குபெற்ற பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனும் ஆவலில் தற்பொழுது திருச்சி வருகை புரிந்துள்ள இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

இவரது முயற்சிக்கு இவர் பணிபுரிந்து வரும் நிறுவனமும், துபாய் இந்திய துணைத்தூதரக கன்சல் பி.எஸ். முபாரக், இந்திய முஸ்லிம் சங்கம், துபாய் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆர்வமும், ஊக்கமும் அளித்து வருகின்றன.

இவர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவரது தாயக தொடர்பு முகவரி :

138 பெரிய கடை வீதி
திருச்சி 620 008
தொலைபேசி : 0431-270196/98 424 77828
E mail : ad_sulaiman4000@yahoo.com

-o❢o-

b r e a k i n g   n e w s...