.

Sunday, June 24, 2007

கிரிக்கெட்: கும்ப்ளேவுக்கு மூன்றாவது இடம்.

டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரப்பட்டியலில் இந்திய அணியின் அனில் கும்ப்ளே 730 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். சமீபகாலமாக வாய்ப்பு வழங்கப்படாத பதான் 618 புள்ளிகளுடன் 17ம் இடத்தில் உள்ளார்.

801 புள்ளிகளுடன் அணித்தலைவர் ராகுல் திராவிட் 8ம் இடத்திலும் சச்சின் டெண்டுல்கர் 672 புள்ளிகளுடன் 16 வது இடத்தை தெ.ஆஃப்ரிக்க அணித்தலைவர் கிரீம் ஸ்மித்துடன் பகிர்ந்துக்கொண்டும் உள்ளனர்.

முதல் பத்து இடங்கள் பின் வருமாறு:

மட்டையாளர்கள்:

1. ரிக்கி பாண்டிங்(ஆஸி) 936
2. மொஹமது யூசுஃப்(பாகிஸ்தான்) 915
3. கெவின் பீட்டர்சன்(இங்கிலாந்து) 862
4. குமார் சங்ககாரா(ஸ்ரீ லங்கா) 857
5. மைக் ஹூசே (ஆஸி) 842
6. மாத்யூ ஹைடன் (ஆஸி) 828
7. ஜாக்வஸ் காலிஸ் (தெ.ஆ) 820
8. ராகுல் திராவிட் (இந்தியா) 801
9. யூனிஸ் கான்(பாகிஸ்தான்) 789
10. சந்தர்பால் (மேற்கிந்தியத்தீவுகள்) 762


பந்து வீச்சாளர்கள்:

1. முத்தையா முரளிதரன் (ஸ்ரீ லங்கா) 913
2. மகாயா நிடினி (தெ.ஆ) 856
3. அனில் கும்ப்ளே(இந்தியா) 730 & ஷான் பொல்லாக் (தெ.ஆ) 730
5. ஷேன் பாந்த்(நியூஸி) 722
6. மாத்யூ ஹோகார்ட்(இங்கிலாந்து) 721 & மாண்ட்டி பனேசர் (இங்கிலாந்து) 721
8. ஸ்டூவர்ட் கிளர்க்(ஆஸி.) 720
9. முஹமது ஆசிஃப்(பாகிஸ்தான்) 710
10. ஷோயப் அக்தர் (பாகிஸ்தான்) 698

தமிழ்நாடு: விரைவில் மாலைநேர நீதிமன்றங்கள்.

நாட்டிலேயே முதல் முறையாக குஜராத் மாநிலத்தில், மாலை நேர நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன. இதையடுத்து தற்போது தமிழகத்திலும் மாலை நீதிமன்றங்கள் தொடங்கப்படுகின்றன.

ஜூலை 3ம் தேதி முதல் மாலை நேர நீதிமன்றங்கள் செயற்பாட்டுக்கு வருகின்றன. முதல் கட்டமாக 11 நீதிமன்றங்கள் அன்றைய தினம் தொடங்கி வைக்கப்படும்.

இதில் சென்னையில் 4, கோவை, நெல்லையில் தலா 2, மதுரை, சேலம், திருச்சியில் தலா ஒரு நீதிமன்றம் செயல்படும். இந்த மாலை நீதிமன்றங்கள் அனைத்து வேலை நாட்களிலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

தற்போதைக்கு பெருநகர மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற அந்தஸ்தில் செயல்படும் இந்த நீதிமன்றங்கள், சாதாரண வழக்குகளை மட்டும் விசாரிக்கும். தற்போது வழக்கமான நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளே இந்த நீதிமன்றங்களிலும் பணியாற்றுவர். இருப்பினும் அவர்களுக்கு கூடுதலாக பணிப் படி வழங்கப்படும்.

சோதனை அடிப்படையில் தொடங்கப்படும் இந்த 11 நீதிமன்றங்களின் செயற்பாட்டைப் பொருத்து இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்.

இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள நீதிபதிகளுக்கு மடிக்கணினிகள் ஜூலை 9ம் தேதி வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மடிக்கணினிகளை நீதிபதிகளுக்கு வழங்குவார். மொத்தம் 695 மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன.

தட்ஸ்தமிழ்

'கெமிக்கல் அலி'க்கு தூக்குத்தண்டனை.

தூக்கிலிடப்பட்ட இராக் சர்வாதிகாரி சதாம் ஹூசைனின் உறவினரும், 1980ல் நடந்த குர்து இனப்படுகொலைகளுக்காக குற்றஞ்சாட்டப்பட்டவருமான 'கெமிக்கல் அலீ' என்கிற அலீ ஹசன் அல் மாஜித்-துக்கு இராக் நீதிமன்றம் இன்று தூக்குத்தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. அவருடன் இரண்டு சதாம் கால அதிகாரிகளும் தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்றனர்.

தீர்ப்பு பற்றிய தம் கருத்தாக "இறைவனுக்கு நன்றி" என்றார் அலீ.

யாஹூசெய்தி .

அப்துல்கலாம் பத்திரிக்கைகளுக்கு அறிவுரை.

"பத்திரிக்கைகள் கேலிச்சித்திரத்தை முதற்பக்கத்தில் வழங்கிவந்த முந்தைய வழக்கத்துக்கு மாற வேண்டும்" என்று அப்துல்கலாம் பத்திரிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பிடிஐ நிறுவன செய்தியாளர்களுடன் நிகழ்ந்த சந்திப்பொன்றில் பதவியிறங்க உள்ள குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பத்திரிக்கையாளர்களுக்கு பொதுவாக இவ்வேண்டுகோளை விடுத்தார்.

"ஆணோ, பெண்ணோ ஒரு வாசகன் காலையில் பத்திரிக்கையை திறந்தவுடன் சிரிப்பதாக அமைய வேண்டும்" என்ற கலாம் "கொலை, கொள்ளை செய்திகளை பின் பக்கங்களுக்குத் தள்ள வேண்டும்" என்றும் சொன்னார். அத்துடன் தனது இளமைக்காலத்தை அவர் நினைவுகூரவும் செய்தார். "அப்போதெல்லாம் முதற்பக்கத்தில் வரும் 'கார்ட்டூனை' மிகவும் ரசிப்பேன்".

"தில்லி மட்டுமே செய்திக்கான கிடங்கு இல்லை" என்ற குடியரசுத்தலைவர் "உதாரணத்துக்கு, பஞ்சாபின் காளிபென் ஆறு மக்கள் முயற்சியால் சுத்தமாக்கப்பட்டது பற்றி எந்த ஊடகமும் கண்டு கொள்ளவில்லை" என்றார்.

மேலும் படிக்க...பிடிஐ செய்தி

பருவமழை: குமரி மாவட்டத்தில் 300 மின்கம்பங்கள் சாய்ந்தன.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜுன் மாதம் தொடங்கும். இந்த மழையின் தாக்கம் கேரள மாநில எல்லையோரமாக அமைந்துள்ள குமரி மாவட்டத்திலும் இருக்கும். தென்மேற்கு பருவமழை தற்போது குமரி மாவட்டத்தில் வலுவடைந்து வருகிறது. கடந்த 5 நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் பகல் முழுவதும் பெய்த மழை இரவிலும் தொடர்ந்தது. இந்த மழை நேற்று காலை 10 மணி வரை பெய்தது. அதன்பிறகு அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.

இந்த மழையால் அனைத்து சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் நாகர்கோவில், தக்கலை, களியக்காவிளை, குலசேகரம் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன.

இதேபோல் நாகர்கோவில், ராஜாக்கமங்கலம், வில்லுக்குறி, குளச்சல், குழித்துறை, களியல், அருமனை, முன்சிறை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்தன. 300-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள்தெரிவித்தனர்.இவற்றில், மரங்கள் சாய்ந்து விழுந்ததால் சரிந்து விழுந்த மின்கம்பங்கள் அதிகம். இதனால் மேற்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது. மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

தினத்தந்தி

ஷெகாவத் நாளை வேட்புமனு.

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-இடது சாரிகள் சார்பில் முன்னாள் இராஜஸ்தான் ஆளுநர் பிரதீபா பாட்டீல் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஷெகாவத் சுயேச்சையாக களம் காண்கிறார். அவருக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் ஆதரவையும் பாஜக கோரியுள்ளது.

பிரதீபா பாட்டீல் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் ஷெகாவத் நாளை வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார். நாளை முற்பகல் 11.30 மணிக்கு ஷெகாவத் மனு தாக்கல் செய்வார் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஓட்டுக் கணக்கைப் பார்த்தால் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் நிலைமை மாறும். ஷெகாவத் அபார வெற்றி பெறுவார்.

ஷெகாவத்துக்கு ஆதரவு ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி முன்வர வேண்டும். தேர்தலைப் புறக்கணிப்பதால் எந்த லாபமும் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றார்.

சந்திரபாபுநாயுடு கொலை முயற்சி: நக்சல் தலைவர் பலி.

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கொல்லத் திட்டமிட்டது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த மாவோயிட்ஸ் நக்சல் இயக்கத் தலைவர் ராஜா மெளி என்பவரை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

திருப்பதி அருகே அலிபிரி என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் சந்திரபாபு நாயுடு படுகாயத்துடன் உயிர் தப்பினார். இந்த வழக்கில், மாவோயிட்ஸ் அமைப்பின் முக்கியத் தலைவரான ராஜா மெளலி என்பவர் சம்பந்தப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

மெளலிதான் நாயுடுவைக் கொல்லும் திட்டத்தை வகுத்தவர். இவர் மாவோயிஸ்ட் நக்சல் அமைப்பிந் மத்திய குழு உறுப்பினராகவும், மத்திய படை கமிஷனின் உறுப்பினராகவும் இருந்து வந்தார். இதுதவிர கர்நாடக மாநில மாவோயிட்ஸ் செயலாளராகவும் இருந்து வந்தார்.

இவர் மீது சட்டீஸ்கர், ஒரிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் 120க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தர்மாவரம் ரயில் நிலையப் பகுதியில் ராஜா மெளலி தனது கூட்டாளிகளோடு வந்து கொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் மெளலியும், அவரது ஆட்களும் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டனர். போலீஸார் திருப்பிச் சுட்டதில் மெளலி கொல்லப்பட்டார். இருப்பினும் அவருடன் வந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.

விம்பிள்டன்: கலப்பு இரட்டையரில் சானியா - மகேஷ் இணை.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனின் நாளை தொடங்குகிறது.

ரோஜர்பெடரர் (சுவிட்சர் லாந்து), ரஃபேல்நடால் (ஸ்பெயின்), ரோட்டிக் (அமெரிக்கா), ஜஸ்டின் ஹெனின் (பெல்ஜியம்), மரியா ஷரபோவா(ரஷியா), ஜெலீனா ஜான்கோவிக் (கென்யா) உள்பட முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

விம்பிள்டன் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சானியாமிர்சா மகேஷ்பூபதியுடன் இணைந்து ஆடுகிறார். சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓப்பனில் இருவரும் இணைந்து ஆட வேண்டியது ஆனால் மகேஷ்பூபதி தரப் பட்டியலில் மிகவும் பின் தங்கி இருந்ததால் ஆட முடிய வில்லை.

தற்போது தரவரிசையில் முன்னேற்றம் அடைந்ததால் சானியாவுடன் இணைந்து ஆடுகிறார்.

சானியாமிர்சா ஒற்றையர் ஆட்டத்தில் முதல் சுற்றில் ரஷ்யவீராங்கனை ஷெவ்கோவாவை எதிர்கொள்கிறார். இரட்டையர் ஆட்டத்தில் அவர் இஸ்ரேல் வீராங்கனை சகாருடன் இணைந்து விளையாடுவார்.

துர்காவாக சோனியா : வழக்கு தொடரப்பட்டது.

உத்தரபிரதேசம் மாநிலம் மொராதாபாத்தில் சோனியா காந்தியை இந்துக்களின் துர்காவாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்ததை 'சற்றுமுன்'னில் செய்தி அறிந்திருப்பீர்கள். இது சர்ச்சையை கிளப்பி சுவரொட்டி ஒட்டிய காங்கிரஸ் தொண்டர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்தவும் கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.

இதற்கிடையே பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த வக்கீல் சுதிர்குமார் இது தொடர்பாக உள்ளூர் கீழ்நிலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் மனுவில் கூறி இருப்பதாவது:-

சோனியா காந்தியை துர்கையாக சித்தரித்து படம் வெளியிட்டு இருப்பது லட்சக்கணக்கான இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே சோனியா காந்தி மீதும் இந்த படத்தை வெளியிட்ட மற்ற 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இலங்கை: 10 ஆயிரம் இராணுவத்தார் தப்பி ஓட்டம்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. தமிழர் பகுதிகளில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ராணுவத்துக்கு விடுதலைப்புலிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

விடுதலைப்புலிகளின் விமானப்படை பலமும் அதிக ரித்து வருவது சிங்கள ராணு வத்துக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. இராணுவத்தின் கெடுபிடிகளால் சிங்கள வீரர்கள் அதிருப்தி அடைந்து விடு கிறார்கள். விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கும் அவர்களால் ஈடு கொடுக்க முடிய வில்லை.

இதனால் இராணுவத்தில் இருந்து சிங்கள வீரர்கள் தப்பி ஓடுவது அதிகரித்து வருகிறது.

கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இராணுவத்தில் இருந்து 10 ஆயிரத்து 60 சிங்கள வீரர்கள் தப்பி ஓடி விட்டனர். இது தவிர 93 உயர் ராணுவ அதிகாரிகளும் தப்பி ஓடி இருக்கிறார்கள்.



இதனால் இப்போது கூடுதல் இராணுவத்தினரை சேர்க்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. இராணுவத்துக்கு 25 ஆயிரம் பேரையும், கடற்படைக்கு 15 ஆயிரம் பேரையும், விமானப் படைக்கு 10 ஆயிரம் பேரையும் நியமிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் தகுதியான வீரர்கள் இன்னும் கிடைக்கவில்லை.


மாலைமலர்

-o❢o-

b r e a k i n g   n e w s...