.

Tuesday, March 27, 2007

தமிழகத்தில் 69 சத இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோரை கண்டறியாதது குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் முடிவு

புது தில்லி, மார்ச் 27: தமிழகத்தில் 69 சத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் நிலையில், பிற்பபடுத்தப்பட்டோரில் வசதி படைத்தோரைக் கண்டறியாதது குறித்த பிரச்சினை குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கேரளத்தில், பிற்பபடுத்தப்பட்டோரில் வசதி படைத்தோர் (கிரீமி லேயர்) குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் இன்னொரு பெஞ்ச் அளித்த தீர்ப்பை அடுத்து, இப் பிரச்சினை குறித்து ஆய்வு நடத்த வேண்டியது அவசியம் என்று நீதிபதிகள் ஏ.கே. மாத்தூர் மற்றும் தல்வீர் பண்டாரி ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் திங்கள்கிழமை அறிவித்தது. மாநிலத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.ஆர். அந்தியார்ஜுனா, 69 சத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ள நிலையில், அதையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோரைக் கண்டறிய வேண்டும் என, "வாய்ஸ்' என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் மனுத் தாக்கல் செய்த தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன், மண்டல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, பிற்பட்டோரில் வசதி படைத்தோரைக் கண்டறியாத ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழகம் இவ்வளவு ஆண்டுகளாக உதாசீனப்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், 69 சத இட ஒதுக்கீடு சட்டத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும், அதை தனியாக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

""கேரள பிரச்சினை தொடர்பான சமீபத்திய தீர்ப்பை அடுத்து, இப் பிரச்சினையை கோடை விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் விசாரிக்கும். 69 சத இட ஒதுக்கீடு தொடர்பான மனுவையும் விசாரிப்போம். தேவைப்பட்டால், தற்போதைய மனுவை 69 சத இட இட ஒதுக்கீட்டு மனுவுடன் சேர்த்து விசாரிப்போம்'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

"வாய்ஸ்' அமைப்பு தனது மனுவில், தமிழகம் பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோரை இனம் காணாமல் இருப்பதன் மூலம், உண்மையாக இட ஒதுக்கீடு தேவைப்படும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் மறுக்கப்படுவதாகக் கூறியுள்ளது. கல்வி மற்றும் மாநில அரசுப் பணி ஆகிய இரண்டிலுமே அந்தப் பயன்கள் மறுக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மண்டல் வழக்கில் வசதி படைத்தோர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

இட ஒதுக்கீட்டிலிருந்து வசதி படைத்தோரை விலக்கி வைப்பதற்காக அவர்களைக் கண்டறிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனைக்கு தகுதியற்றது என்று அரசு கருத்துத் தெரிவித்துள்ளது.

வசதி படைத்தோரைக் கண்டறியாமல் இருப்பதன் மூலம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோரில் உண்மையான இட ஒதுக்கீடு தேவைப்படுவோர் பாதிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் கூறியிருப்பது வெறும் கற்பனை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Dinamani

2 comments:

Anonymous said...

http://ravisrinivas.blogspot.com

தமிழக அரசும், கிரீமி லேயரும்

உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பிற்பட்டோரில் முற்பட்டோரைகண்டறிந்து விலக்குவது குறித்த வ்ழக்கொன்றினை விசாரித்து வருகிறது.உச்ச நீதிமன்றம்அண்மையில் கேராளவில் இட ஒதுக்கீடு குறித்த வ்ழக்கொன்றில் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் இந்தப் கேள்வியை, அதாவது தமிழக அரசு கிரீமி லேயர் கோட்பாட்டினை அமுல் செய்ய மறுப்பதை அணுகும் என்று தெரிகிறது. தமிழக அரசு பிடிவாதமாக இந்தக் கோட்ப்பாட்டினை ஏற்க மறுக்கிறது. பிற மாநிலங்களில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தரப்படும் முன்னரே தமிழ்நாட்டில் (அன்றைய சென்னை ராஜதானியில்) இது அமுலுக்கு வந்தது. மேலும் இட ஒதுக்கீட்டில் ஒரு சில சாதிகள் அதிக பயன் பெறுவதையும், பல சாதிகள் மிக் குறைவாக பயன்பெறுவதையும் சட்டநாதன் கமிஷன் 1970ல் சுட்டிக் காட்டியது. அப்போதே இட ஒதுக்கீட்டினை பெற ஒரு வரம்பு விதிக்கப்பட வேண்டும் என்றும், பிற்பட்டோரில் முன்னேறியோரை விலக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.அதை திமுக அரசு ஏற்கவில்லை. பின்னர் 1980களில் அம்பாசங்கர் கமிஷனும் அது போன்றே கருத்து தெரிவித்தது, அதாவது பிற்பட்டோரில் முற்பட்டோரினை விலக்க வேண்டும். இந்த இரண்டு கமிஷன்களின் இந்தப் பரிந்துரைகளை அரசுகள் ஏற்கவில்லை, ஆனால் இட ஒதுக்கீட்டின் அளவு மட்டும் கூட்டப்பட்டது.

1979ல் எம்.ஜி,ஆர் வருமான வரம்பினைகொண்டு வந்தார்.பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியைத் தழுவியது. 1980 ஜனவ்ரியில் எம்,ஜி,ஆர் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை 50% ஆக உயர்த்தினார்,வருமான விலக்குக் குறித்த ஆணையும் விலக்கிக் கொள்ளப்பட்டது.இந்தியாவின் பிற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ள க்ரீமி லேயர் கோட்பாட்டினை தமிழக அரசு ஏற்க மறுப்பது சரியல்ல. இன்று இட ஒதுக்கீட்டினை 50% ஆக குறைப்பதும், க்ரீமி லேயர் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்துவதுமே நியாயமான முடிவுகளாக இருக்கும்.

தமிழ்நாட்டினைப் பொருத்தவரை இட ஒதுக்கீடு என்பது புனிதப் பசு. தங்களை சாதி மறுப்பாளர்களாக, முற்போக்காளர்களாககாட்டிக் கொள்பவர்கள் இட ஒதுக்கீடு என்று வரும் போது அதை கண்மூடித்தனமாக ஆதரிப்பார்கள். அரசியல் கட்சிகளைப் பற்றி கேட்க வேண்டாம்.

இட ஒதுக்கீட்டினால்பாதிக்கப்படும் சாதியினர் அமைப்பு ரீதியாகத் திரளவில்லை. தங்களால் எதுவும் செய்யமுடியாது என்று நினைக்கிறார்கள் போலும்.. எனவே இந்த அநீதியான இட ஒதுக்கீடு தொடர்ந்து அமுலில் உள்ளது.உச்ச நீதிமன்றம் நியாயம் வழங்க வேண்டும். மண்டல் கமிஷன் வழக்கில் தரப்பட்டதீர்ப்பு தமிழ் நாட்டிலும் அமுல் செய்யப்பட வேண்டும். அது இட ஒதுக்கீட்டினால் அநியாயமாகபாதிக்கப்பட்டோர் நீதி பெற ஒரளவேனும் உதவும். ஆனால் நிரந்தரத் தீர்வு இப்போதுள்ள இட ஒதுக்கீட்டினை மறுபரீசலனை செய்து சாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்குப் பதிலாக பிற அளவு கோல்களை உள்ளடக்கிய,பெண்களும், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோரும் பயன் பெறும் வகையில் ஒர்இட ஒதுக்கீட்டினை கொண்டு வர வேண்டும். இங்கு சாதி என்பது ஒரு அம்சமாக இருக்கும்,தீர்மானிக்கும் ஒரே அம்சமாக இருக்காது

Anonymous said...

http://balaji_ammu.blogspot.com/2006/11/blog-post.html

"""""சமீபத்தில் இட ஒதுக்கீடு சம்மந்தமாக உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இட ஒதுக்கீட்டின் போது அந்தந்த சாதியில் பொருளாதார அடிப்படையில் ஏற்கனவே " வளர்ந்த பிரிவினரை" கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வென்று வரும் போது அந்த சமுதாயங்களில் ஏற்கனவே எந்த சலுகையும் பெறாமல் பின் தங்கிய நிலையில் இருக்கும் மக்களாகப் பார்த்து அவர்களுக்கு மட்டுமே சலுகை அளிக்க வேண்டும் என சொல்லி இருக்கிறது.

உடனே இதை சாதீய தலைவர்களும் மற்றும் சமூக நீதிக் காவலர்களாக தம்மை பாவித்துக் கொண்டவர்களும் எதிர்க்க ஆரம்பித்து விட்டனர். இதை ஏதோ அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது போலவும், நீதி மன்றங்களை ஆக்கிரமித்திருக்கும் முன்னேறிய வகுப்பினரின் சதி போலவும் திரித்தும் சித்தரித்தும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.இவர்களது இந்தக் கொந்தளிப்புக்கு என்ன காரணம் ? மேல் ஜாதியினர் ஆண்டாண்டு காலமாக செய்ததை " ஜாதி பிரிவினைகளை உண்டாக்கி சலுகைகளை தாங்களே அனுபவித்ததை " இவர்கள் இன்று தங்களது சாதிகளுக்குள்ளேயே செய்ய முற்பட்டுள்ளனர்.

ஆண்டாண்டு காலமாக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமுதாயத்தில் நிலை உயர ஒவ்வொரு கட்டத்திலும் இட ஒதுக்கீடு அவசியம் தேவை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை . பொருளாதார ரீதியாக வளர்ந்த பின்னும் சமூக ரீதியாக வளராத வரை இன்னும் சொல்லப் போனால் அனைவருடனும் சம அந்தஸ்து கிடைக்கும் வரை இடஒதுக்கீடு தேவை என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் அதே சமயம் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப் பட்டோர் என்ற போர்வையில் அதே பிரிவில் உள்ள சில "வளர்ந்த " பிரிவினர் மென் மேலும் சுக போகங்களை தாங்களே பகிர்ந்து கொண்டு அதே சாதியில் இருக்கும் உண்மையிலேயா கீழ்நிலையில் இருப்போருக்கு சலுகை மறைப்பு அல்லது மறுப்பு செய்ய முனைவதும் ஏற்க இயலாதது """

-o❢o-

b r e a k i n g   n e w s...