.

Sunday, June 10, 2007

திமுக வில் மீண்டும் க.சுப்பு

கருணாநிதியின் பொன்விழாவையொட்டி அவரைப் பாராட்டி பேட்டி அளித்ததால், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ க.சுப்பு மீண்டும் திமுகவில் இணைந்து விட்டார்.

பல கட்சிகளில் இருந்த நீண்ட, நெடிய அனுபவம் கொண்டவர் பிரபல தொழிற்சங்கவாதியான க.சுப்பு. ஆரம்பத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர். அக்கட்சியின் சார்பில் 1971ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். 80களில் சட்டசபையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு எதிராக சட்டசபையில் க.சுப்பு தீவிரமாக செயல்பட்டார். துரைமுருகன், ரகுமான்கான், க.சுப்பு அப்போதைய சட்டசபையின் நாயகர்களாக விளங்கினர்.

பின்னர் திமுகவிலிருந்து விலகினார் சுப்பு. அதிரடியாக அதிமுகவுக்குத் தாவினார். ஆனால் அங்கும் நீண்ட காலம் அவர் நீடிக்கவில்லை. அதிமுகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். அதன் பிறகு மீண்டும் திமுகவுக்குத் திரும்பினார். அது சில காலம் மட்டுமே நீடித்தது. திமுகவிலிருந்து விலகி அதிமுகவுக்குத் தாவினார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி தரும் வகையிலான பொறுப்பை ஜெயலலிதா கொடுத்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழாவையொட்டி அவரைப் பாராட்டிப் பேட்டி கொடுத்திருந்தார் சுப்பு.

இதனால் கடுப்பான ஜெயலலிதா சுப்புவைக் கட்சியிலிருந்து தூக்கி விட்டார். இந்தச் சூழ்நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து மீண்டும் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் சுப்பு.

கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி திமுகவில் இணைந்தார் சுப்பு. இந்த நிகழ்ச்சியின்போது மத்திய அமைச்சர் ராசா, திமுக ஒருங்கிணைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...