.

Friday, June 8, 2007

மும்பை ரயிலில் திருடர்களை அடித்து விரட்டிய பெண்கள்

நாகர்கோயில் விரைவு வண்டியில் நேற்று தம் சொந்த ஊரான ஏர்வாடியிலிருந்து விடுமுறை முடிந்து, குழந்தைகளுடன் மும்பை திரும்பிக் கொண்டிருந்தனர் திருமதி லக்ஷ்மி வேலுவும்(35), திருமதி பிச்சம்மாள் மணியும்(36).

வண்டி தாதர் ரயில் நிலையத்தை இரவு சுமார் ஒன்பது மணிக்கு அடைந்தபோது அவர்களின் பெட்டியில் பயணம் செய்த எல்லா பயணிகளும் இறங்கிவிட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஐந்து இளைஞர்கள் வண்டியில் ஏறி பிச்சம்மாள் அணிந்திருந்த தங்கச்சங்கிலியைப் பறிக்க முயன்றனர்.

உடனிருந்த லக்ஷ்மி அந்த இளைஞர்களை அடிக்கத் தொடங்கினார். பிச்சம்மாளும் சமாளித்து தொடர்ந்து தாக்கியதில் இளைஞர்கள் பின்வாங்கினர். கூர்மையான ஆயுதத்தால் அவர்கள் தாக்கியபோதும் தளர்ந்து விடாமல் போரிட்டதைக் கண்டு ஐந்து திருடர்களில் மூவர் ஓடிவிட்டனர். பெண்கள் தொடர்ந்து துரத்திச் சென்று விரட்டி ஒரு இளைஞனை ஓடும் ரயிலிலிருந்து விழ செய்துவிட்டார்கள்!

'சுமார் ரூ. 69000 மதிப்புள்ள நகைகளை இழந்து விட்டாலும் திருடர்களைத் துரத்தியடித்தைப் பற்றி மகிழ்கிறோம்' என்று பத்திரிக்கையாளர்களிடம் லக்ஷ்மி தெரிவித்தார்.

தாதர் ரயில்வே போலீஸார், பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதை வைத்து, ரயிலிலிருந்து கீழே தள்ளப்பட்ட இளைஞனை அடையாளம் கண்டு, பிடித்தும் விட்டனர். ஜரார்தன் ஜய மங்கள் ராம்(21) என்ற அந்த இளைஞன் மூலம், அவன் கூட்டாளிகளான ஜெதாலிகுமார் கோகலே(22), துனி முகியா(19), சிக்கந்தர் கான்(22), விஷால் குமார் ரத்தோட்(22) முதலானோரையும் பிடித்து ரூ. 52,000 மதிப்புள்ள நகைகளையும் மீட்டுவிட்டதாக காவல்துறை அதிகாரி நம்தியோ கதம் கூறினார்.

Men smart, women smarter - DNA News.

6 comments:

வல்லிசிம்ஹன் said...

இத்தனை துணிச்சல் எப்படி வந்தது.இரண்டு பெண்கள் சேர்ந்தே இவ்வளவு சாதிக்கலாம் என்றால் பெண்களுக்கு வலிமை இல்லை என்ற சொல் பழையதாகிவிட்டது
என்றுதான் பொருள்.
நன்றி பொன்ஸ்.

நாமக்கல் சிபி said...

சபாஷ் பெண்மணிகள்!

நாடோடி said...

இது எல்லாம் பெரிய விசயமில்லை. தென் தமிழ்நாட்டு பெண்கள் இயல்பாகவே கொஞ்சம் வீரமானவர்கள்தான் .உங்களுக்கு தெரிந்த யாரவது தெந்தமிழ்நாட்டுகாரர்களிடம் கேட்டு பாருங்கள் அவர்கள் தங்களின் மனைவிமார்களிடன் எப்படிஎல்லாம் அடிவாங்கி இருப்பார்கள் என்று. வண்டி வண்டியா கதை சொல்லுவார்கள். வெளியேதான் புலி. வீட்டுக்கு வந்தா எலிதான் பொண்டாட்டி முன்னாடி.

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

நாமக்கல் சிபி said...

//தெந்தமிழ்நாட்டுகாரர்களிடம் கேட்டு பாருங்கள் அவர்கள் தங்களின் மனைவிமார்களிடன் எப்படிஎல்லாம் அடிவாங்கி இருப்பார்கள் என்று//

என்னதான் இருந்தாலும் வெளி ஆட்களை அடிப்பதை விட கணவனை அடிக்கும்போது கொஞ்சம் இரக்கம் காட்டுவதும் உண்டு! அதுதானே நம் பாரம்பரியம்! பண்பாடு!

(7 வது மாடியில் இருந்து தலை குப்புற விழுந்தால் மரணம் நிச்சயம் என்று அனுபவித்துத்தான் எழுத வேண்டியதில்லை. கேள்விப்பட்டே எழுதலாம்)

Boston Bala said...

---ரூ. 52,000 மதிப்புள்ள நகைகளையும் மீட்டுவிட்டதாக---

வாவ்! கலக்கிட்டாங்க :)

அறிஞர். அ said...

தாதர் இரயில் நிலையத்தில் இரயில் தமிழகத்திலிருந்து வருவதால் பெரும்பாலும் ஹிந்தி தெரியாது என்று அங்குள்ள திருடர்களுக்கு தெரியும். ஒரு முறை மும்பை சென்ற போது அங்குள்ள டாக்சி டிரைவர் வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றியதும், பிறகு வழியில் நிறுத்தி என்னிடம் வழிப்பறி செய்தான். ஏதோ மனது குறுகுறுக்க நான்கு நாட்களுக்கு பின் தாதர் இரயில் போலிசிடம் கம்ளைண்ட் கொடுக்க(தனியாகத்தான்) காவல் நிலையம் சென்று கம்ளைண்ட் எழுதிக்கொண்டிருந்தேன்

எழுதிக்கொண்டிருக்கும் பொழுதே நால்வர் அங்கு வந்த விவரத்தை கேட்டனர். ஏதோ ஆங்கிலம் தெரிந்ததால் சற்று விவரித்தேன். அதில் வண்டி எண், வண்டி பெயர் சொன்னவுடன் அவர்கள் யாரென்று புரிந்து கொண்டனர். பிறகு கம்ளைண்ட் கொடுக்க வேண்டாமென்றும், FIR செய்தால் அவருடைய லைசன்ஸ் பறிபோகுமென்று கூறினர். உங்களிடம் பறித்த பணத்தை திருப்பி தந்து விடுகிறோமென்றனர். இந்த நிலைமை வயதானவர்கள், குழந்தைகளென்றால் என்னாவது என்று கேட்டேன்.

பிறகு பறித்த பணத்தை திருப்பி தந்தனர்.

பாடம்:

1. கம்ளைண்ட்லாம் வேணாம். (அடுத்த முறை அங்கு சென்றபொழுது அதே ஆள் நின்று கொண்டிருக்க மறைந்தபடி வெளியேற வேண்டிய சூழ்நிலை)
2. யார் எப்படி என்பது எல்லா ஊர் போலீசாருக்கும் தெரியும் போல. (அதனால் தான் இந்த/எந்த செய்தியில் கூட உடனடியாக பிடிக்க முடிகிறது)
3. ஹிந்தியும் கொஞ்சம் கத்துக்கோங்க

-o❢o-

b r e a k i n g   n e w s...