.

Wednesday, June 20, 2007

தமிழில் எஸ்.எம்.எஸ்.: இணையப் பல்கலைக்கழகம் திட்டம்

மொபைல் போன்களில் தமிழில் எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) அனுப்பும் புதிய வசதிக்கான முயற்சியில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக மொபைல்போன் சாதனங்களில் தற்போதுள்ள ஆங்கில எழுத்துக்களுடன் தமிழ் எழுத்துக்களைப் பதிவு செய்வதற்கான சாஃப்ட்வேரை வடிவமைக்க உள்ளது.

இதற்கான தமிழ் விசைப் பலகையை அமைப்பது தொடர்பாகத் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பணியில் ஈடுபட்டுள்ள அக்குழு சுமார் மூன்று மாதங்களில் தனது ஆய்வறிக்கையை அரசுக்கு அளிக்க இருக்கிறது.

இதன்படி 1 என்ற எண்ணுள்ள விசையில் குறைந்தது 3 ஆங்கில எழுத்துகளுக்கு இடமிருக்கும். அதே விசையைப் பயன்படுத்தி மூன்று தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.

உதாரணத்துக்கு "2' என்ற எண்ணுள்ள விசையில் "ஞ, ட, ண' என்ற எழுத்துகளைப் பதிவு செய்யலாம். "4' என்ற எண்ணுள்ள விசையில் "ம, ய, ர' என்ற எழுத்துகளைப் பதிவு செய்யலாம். "5' என்ற எண்ணுள்ள விசையில் "ல, வ, ழ' என்ற எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.

இவ்வாறு முழுமையான தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யும் முறை அமலுக்கு வந்த பின், மொபைல் சேவைகளில் ஈடுபட்டுள்ள பி.எஸ்.என்.எல்., "ஏர்டெல்' போன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

கோட்டூர்புரத்தில் புதிய கட்டடம்: தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துக்கு கோட்டூர்புரத்தில் இரண்டு ஏக்கர் நிலப் பரப்பில் புதிய கட்டடம் கட்டப்பட இருக்கிறது. மொத்தம் ரூ. 2 கோடியில் அமைக்கப்படும் இந்த வளாகத்தில் 10 ஆயிரம் சதுர அடிப் பரப்பில் மூன்று மாடிக் கட்டடம் கட்டப்படும்.

அதில், மாநாட்டு அரங்கம், இணையவழிக் கல்விக்கான ஸ்டுடியோ, "அப்லிங்க்' செய்வதற்கான வசதி அமைக்கப்படும். இங்கிருந்து விடியோ கான்பரன்சிங் முறையில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

வகுப்புகளைப் பொருத்த வரையில் விரிவுரையாளர் நடத்தும் வகுப்பை உலகின் எந்த மூலையிலிருந்தும் உடனுக்குடன் கேட்டு அறிந்து கொள்ளலாம். அல்லது, அதை கம்ப்யூட்டரிலோ "லேப் டாப்பிலோ' பதிவு செய்து, தேவைப்படும்போது போட்டு, பாடத்தை அறிந்து கொள்ளலாம். சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் வசதி உண்டு. அல்லது இணையதளத்தில் "சாட்டிங்' முறையிலும் சந்தேகத்தை உடனுக்குடன் கேட்டு, தெளிவு பெறலாம்.

இதற்காக "ஸ்ட்ரீமிங் வெப் சர்வர்' என்ற "சர்வர்' வடிவமைக்கப்பட்டு வருகிறது.

சி.டி.யில் திருக்குறள்: திருக்குறளின் ஐந்து உரைகளுடன் இரு ஆங்கில மொழி பெயர்ப்புகளுடன் குறுந்தகடுகளை இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. உலக அளவில் திருக்குறளைப் பரப்பும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இணையப் பல்கலைக்கழகம் தற்போது, 137 நாடுகளில் உள்ளவர்களுக்காக தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறது. அவர்களுக்கு முழு அளவில் பயன்படும் வகையில் மேலும் பாடத் திட்டத்தையும், வகுப்புகளை நடத்தும் முறையையும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி

3 comments:

வடுவூர் குமார் said...

தொலைபேசியில் "தமிழில் எஸ் எம் எஸ்" சிங்கையில் நடப்பில் உள்ளது.யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை.

மாலன் said...

கைத்தொலைபேசிகளில் தமிழில் குறுஞ்செய்திகள் அனுப்பும் மென்பொருள் ஏற்கனவே ஜனவ்ரி 15, 2005ல் முரசு நெடுமாறன் முயற்சியில் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டு அது பயன்பாட்டிற்கும் வந்துவிட்டது.இது குறித்து, அதன் தொழில்நுட்பத் தகவல்களோடு திசைகள் இதழிலும் எழுதியிருந்தோம். 2004 டிசம்பரில் சிங்கப்பூரில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் இது குறித்து ஓர் அமர்வு நடைபெற்றது, மூன்று முன்மாதிரிகள் விவாதிக்கப்பட்டன. கனடாவிலிருந்து ஓர் முன் மாதிரியை ஒருவர் முன் மொழிந்தார்.மற்றொன்று அண்ணாப்பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பாஸ்கருடையது.

இப்போது சாவகாசமாகத் தூங்கிஎழுந்து இணையப் பல்கலைக் கழகம் சக்கரத்தை மீண்டும் 'கண்டுபிடிக்க' முன் வந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் இணைய அறிஞர்களிடம் ஓர் வியாதி இருக்கிறது,தமிழுக்கான கணினி சார்ந்த மென் பொருட்கள் எல்லாம் தமிழ்நாட்டிலிருந்துதான் வர வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தமிழ் இன்று ஓர் உலக மொழி என்பதை ஏற்க அவர்களது ஈகோ இடமளிப்பதில்லை.

அன்புடன்
மாலன்

Anonymous said...

//தமிழ்நாட்டின் இணைய அறிஞர்களிடம் ஓர் வியாதி இருக்கிறது,தமிழுக்கான கணினி சார்ந்த மென் பொருட்கள் எல்லாம் தமிழ்நாட்டிலிருந்துதான் வர வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தமிழ் இன்று ஓர் உலக மொழி என்பதை ஏற்க அவர்களது ஈகோ இடமளிப்பதில்லை.
///

மாலன், ச்சும்மா நச்சுன்னு அடிச்சீங்க...

எல்.ஜி மொபைல் நிறுவனம் தன்னுடைய சி.டி.எம்.ஏ மொபைலில் (மாடல் நம்பர் தெரியவில்லை) ஏற்க்கனவே (ஜனவரி 2006) ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி அது மார்க்கெட்டிலும் இருக்கிறது...

-o❢o-

b r e a k i n g   n e w s...