.

Monday, July 23, 2007

ஒரிசா: கலப்புத்திருமணத்துக்கு ரூ. 50,000 பரிசு.

ஒரிசா மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவர் முன்னேற்றத்துக்காகவும், ஜாதி வேறுபாடுகளை ஒழிக்கவும் கலப்பு திருமண உதவி திட்டம் 1980-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன்படி உயர்ந்த ஜாதியினர் தாழ்த்தப் பட்டோரை திருமணம் செய்து கொண்டால் ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் அந்த தொகை ரூ.3 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இது 10 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது என்றாலும் எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்கவில்லை. எனவே திருமண பரிசு தொகையை உயர்த்த ஒரிசா அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி உயர்ந்த ஜாதியினர் தாழ்த்தப்பட்டோர், மலை ஜாதி இனத்தவரை திருமணம் செய்து கொண்டால் ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசு வழங்குவது என்று ஒரிசா அரசு முடிவு செய்துள்ளது,

இந்த தகவலை அந்த மாநில எஸ்.சி., எஸ்.டி பிரிவு வளர்ச்சித்துறை மந்திரி மஜ்பி தெரிவித்தார்.

கலப்பு திருமணத்தை ஊக்குவிப்பதற்காகவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தீண்டாமையை ஒழிக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

ஒரிசா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 101 தம்பதியர் மட்டுமே இது போன்ற கலப்புதிருமணம் செய்து கொண்டு பரிசுத் தொகை பெற்றுள்ளனர். கூடுதல் தொகை வழங்குவதன் மூலம் அதிக எண்ணிக்கையில் கலப்பு திருமணம் நடைபெறும் என்று அந்த மாநில அரசு நம்புகிறது.

எனவே உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பரிசுத் தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பாடு உள்ளது.

1 comment:

சிவபாலன் said...

நல்ல முயற்சி

-o❢o-

b r e a k i n g   n e w s...