.

Tuesday, July 17, 2007

அமிலம் ஏற்றிச்சென்ற வாகனத்தில் ஓட்டை: பொதுமக்கள் பீதி

ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஏற்றிச் சென்ற சரக்குவாகனத்தின்(லாரி) கொள்கலனில் ஓட்டை விழுந்து அதில் இருந்த அமிலம் சாலையில் கொட்டியதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டடு பீதியடைந்தனர்.

சென்னை அண்ணாநகர் மேற்கு, பாடி குப்பம் சாலையில் ஜி.கே.எம். என்ற பெயரில் தனியார் இராசயன நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு மணலியில் இருந்து "ஹைட்ரோ குளோரிக் அமிலம்' ஏற்றிய கொள்கலனுடனுள்ள சரக்குந்து ஒன்று நேற்று மாலை சென்றது. திருமங்கலம் அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலை வழியாக சென்று பாடி குப்பம் சாலையை அடைந்தது. அப்போது கொள்கலனில் திடீரென்று ஓட்டை விழுந்தது. இதையடுத்து சரக்குவாகனத்தில் இருந்து "அமிலம்' சாலையில் கொட்டத் தொடங்கியது.

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்களும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் கூச்சல் போட்டனர்.அமிலம் கொட்டியபடியே சென்றதால் அப்பகுதியே புகை மண்டலமாக மாறி நெடி வீசத்துவங்கியது. இருப்பினும் ஓட்டுனர் எங்கும் நிறுத்தாமல் தொடர்ந்து இயக்கினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சென்ற இச்சரக்கு வாகனம் இராசயனநிறுவனத்தின் வாசலில் சென்று நின்றது. சிறிது நேரத்தில் அப்பகுதியே அமிலக் குளமாக மாறியது.

இது குறித்து திருமங்கலம் போலீசாருக்கும், ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் குளமாக தேங்கிய அமிலத்தின்(ஆசிட்) மீது தண்ணீரை பீய்ச்சி அதன் தன்மையை குறைக்க முயன்றனர். ஆனால் தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் அனைத்தும் தீர்ந்தும் நெடி குறையவில்லை. கடைசியாக அந்நிறுவனத்திற்கு அருகில் உள்ள மணல் விற்பனை கடையில் இருந்து மணல் எடுத்துவரப்பட்டது. அந்த மணல் குளமாக தேங்கியிருந்த அமிலம் மீது கொட்டப்பட்டது. இருப்பினும் பல மணி நேரம் அப்பகுதியில் அமில நெடியும், கண்எரிச்சலும் நீடித்தது.

அப்போது தீடிரென்று பெய்த மழையால் ஓரளவு நெடி தணிந்தது. இது குறித்து இராசயன நிறுவனத்தின் உரிமையாளர்களான கொரட்டூரை சேர்ந்த ராஜேஷ் மற்றும் மதன் ஆகிய இருவரிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...