.

Monday, July 2, 2007

மாநிலத்திடம் ஏது அதிகாரம்?: ராமதாஸுக்கு பொன்முடி பதில்

கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மீறி வசூலித்தால், அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி குறிப்பிட்டார்.

முந்தைய சற்றுமுன்...: வீண் வாதம் செய்கிறார் பொன்முடி: ராமதாஸ்

அவரது அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒரு கல்லூரி கட்டாய நன்கொடையை வசூலித்தால், 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க 1992-ம் ஆண்டு சட்டத்தில் வழியுண்டு என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தகுந்த ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லாமல் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? பெற்றோர்கள், மாணவர்களின் எழுத்துபூர்வமான வாக்குமூலத்தை நீதிமன்றம் கேட்காதா? ராமதாஸ் சொல்வது போல், யாரோ சொல்லியிருக்கிறார்கள், தெருமுனையில் நான்கு பேர் பேசிக் கொண்டிருந்தனர் என்றெல்லாம் நீதிமன்றத்தில் கூற முடியாது. இது போல் ஒரு புகார் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியே கூட, 'ஆதாரத்தோடு கூறினால், நடவடிக்கை எடுப்போம்' என்று கூறியுள்ளார்.

மேலும், எந்தக் கல்லூரி கட்டாயக் கட்டணம் வசூலிக்கிறது ராமதாஸே ஆதாரத்துடன் புகார் கொடுத்தால், நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளேன். மாநிலங்களின் அதிகார வரம்பு குறித்தும் கூறியுள்ளோம். உதாரணமாக தொழில் கல்லூரியைத் தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.) கூடத் தேவையில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

"தொழில்நுட்பக் கல்வியை வணிகமயமாக்குவதைத் தடுக்கும் பொறுப்பு ஏ.ஐ.சி.டி.இ.க்கு உள்ளது. கட்டாயக் கட்டணம் குறித்து புகார் வந்தால், ஏ.ஐ.சி.டி.இ. உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்'' என்று மத்திய அரசே அறிவித்துள்ளது.

இந்த அதிகாரம் மாநில அரசிடம் இருந்தால் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியும் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். இந்த அறிக்கை டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைக்குப் பதில் அல்ல; அவர் எழுப்பிய சந்தேகத்துக்கும் மக்களுக்கு ஏற்பட்ட குழப்பத்துக்கும் நான் அளிக்கும் விளக்கம்.

தினமணி

4 comments:

Unknown said...

முழுப்பூசணியை சோற்றில் மறைக்கிறார் பொன்முடி.

தமிழக கல்லூரிகளில் டொனேஷன் வாங்குவது ஊரறிந்த விஷயம்.இதற்கு ஆதாரம் வேறு வேண்டுமாக்கும்?போலிஸ், உளவுத்துறை, லஞ்ச ஒழிப்புதுறை என அனைத்தையும் கையில் வைத்துக்கொண்டு இருக்கும் உண்மை நிலையை சொல்கிறவரிடம் ஆதாரம் கேட்பது சிறுபிள்ளைத்தனம்.ஆதாரம் வேண்டுமென்றால் ஆட்சியை ராமதாஸ் கையில் கொடுங்கள்.அதன்பின் ஆதாரமும் வரும், நடவடிக்கையும் வரும்

Anonymous said...

சென்னையில் ஒரு பிரபல கல்லூரி தனது அப்பிளிகேஷன் வாங்க செல்லும் மாணவ பெற்றோர்களிடம்
இந்த பாட திட்டத்துக்கு 5 லட்சம் அதைத்தவிர டூஷன் பீஸ் 1.5 லட்சம் இருந்தால் வாங்குங்கள் இல்லாவிட்டால் வாங்காதீர்கள் என்று சொல்லியே வியாபாரம் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.
பொன்முடி தமிழகத்தில் தானே இருக்கிறீர்கள்?

Anonymous said...

அப்படியே மாநில அரசிற்கு அதிகாரம் இல்லையென்றால், மற்ற சொந்த விஷயங்களுக்கு நடுவண் அரசிற்கு நெருக்கடி கொடுக்க முடிந்த அரசால் இந்த மக்கள் நலப்பிரச்சினையை தீர்க்க நெருக்கடி கொடுக்க முடியாதா ?

Boston Bala said...

உருப்படியான நடவடிக்கை எடுங்கள் : பொன்முடிக்கு ராமதாஸ் பதில்


என் மீது பாய்வதை விட்டு அதிகக் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று உயர் கல்வி அமைச்சர் பொன்முடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுரை வழங்கி உள்ளார்.

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை ஆட்சியர் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

இப்போது நடந்து கொண்டிருக்கும் இப் போராட்டம் 27-வது போராட்டம். அதிமுக ஆட்சியில் கல்விக் கொள்ளையைக் கண்டித்து 20-க்கும் அதிகமான போராட்டம் நடத்தி இருக்கிறோம். இப்போதும் நடத்தி வருகிறோம். நீதிபதி ராமன் குழுதான் கல்வி கட்டணத்தை இஷ்டம் போல் உயர்த்தினார்கள். கல்வி கட்டணம் 4 மடங்கு உயர்த்தப்பட்டது. இதைக் கண்டித்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

தமிழகத்தில் 240 சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் ஒரு கல்லூரியில் மட்டுமேதான் அதிக கட்டணம் வசூலிப்பது இல்லை. மற்ற கல்லூரிகளில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும்.

ஆனால் இது பற்றி கேள்வி கேட்டால் புகார் வரவில்லை என்று அமைச்சர் கூறுகிறார். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கல்வி கட்டணம் மிக அதிகமாக வசூலிக்கப்படுகிறது. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் மட்டும் ரூ. 4.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இதில் நன்கொடை தனிக் கணக்கு.

அதிக கட்டண வசூல் தொடர்பாக என்னிடம் தகுந்த ஆதாரம் உள்ளது. சென்னைக்கு அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக 52 மாணவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

அதிக கல்வி கட்டணத்தை கண்டித்து நான் அறிக்கை விட்டேன். அதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பதில் அறிக்கை விடுகிறார். என் மீது பாய்வதை விட்டு விட்டு உருப்படியான நடவடிக்கை எடுத்தால் ஏழை மாணவர்கள் பயனடைவார்கள்.

இந்த அரசுக்கு ஆதரவு கொடுக்கும் நாங்கள் போராட வேண்டுமா? இதற்கு முந்தைய ஆட்சியை விட தற்போதைய அரசில் கல்வி துறையில் அலங்கோலமான காட்சிகள் அதிகரித்துள்ளன. ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டவில்லை. இப் போராட்டம் தொடரும். சட்டப்பேரவை வளாகத்துக்குள் சென்று போராட்டம் நடத்துவேன் என்று அறிவித்தற்கு முதல்வர் பதிலளித்துள்ளார். அங்கே சென்று அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதற்குபதில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை இங்கே அழைத்து வந்து தெருவில் போராட்டம் நடத்துகிறோம். இதற்கு நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

-o❢o-

b r e a k i n g   n e w s...