.

Wednesday, April 4, 2007

ச: "தசாவதாரம்" யாருடைய கதை? படத்தை நீதிபதி பார்க்க வேண்டும்

சென்னை, ஏப். 4-
கமலஹாசன் நடிக்கும் தசாவதாரம் படத்தின் கதை யாருடையது என்பது குறித்து முடிவு செய்ய அந்தப் படத்தை நீதிபதி பார்க்க வேண்டும் என்று கோர்ட்டில் மனுதாரர் வக்கீல் வாதிட்டார்.

தசாவதாரம் படத்தின் கதை மனுதாரர் செந்தில்குமாருக்கு சொந்தமானது. இந்தக் கதை தொடர்பாக கமலஹாசன் வீட்டில் உள்ளவர்களுடன் போனில் பேசியதற்கு டேப் ஆதாரம் உள்ளது. எங்களுடைய கதையை மூடிய கவரில் வைத்து கோர்ட்டில் தாக்கல் செய்துவிட்டோம். தன்னுடைய கதை என்று கூறும் கமலஹாசன், அந்தக் கதையை கோர்ட்டில் இதுவரை தாக்கல் செய்யவில்லை.

தற்போது படத்தை எடுத்து முடித்துவிட்டார்கள். இந்தப் படத்தை நீதிபதி பார்க்க வேண்டும். அதற்காக, கோர்ட்டில் படத்தை திரையிட கமலுக்கு உத்தரவிட வேண்டும். மனுதாரர் கதையையும், கமலஹாசன் கதையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும். எனவே, படத்தை திரையிட கமலஹாசனுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு வக்கீல் கே.சுப்பிரமணியம் வாதிட்டார்.

கமலஹாசன் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, படத்தின் கதை கமலஹாசன் கற்பனையில் உருவானது. மனுதாரர் கூறுவது முற்றியலும் பொய்யானது. இதை கோர்ட் ஏற்கக்கூடாது. படத்தின் கதையை விரைவில் தாக்கல் செய்துவிடுகிறேன் என்றார்.
அப்போது வக்கீல் கே.சுப்பிரமணியம் குறுக்கிட்டு, படத்தை பார்த்துதான் நீதிபதி முடிவு செய்ய வேண்டும். எனவே, கோர்ட்டில் தசாவதாரம் படத்தை திரையிட வேண்டும் என்றார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, மறு தேதி குறிப்பிடாமல் விசாரணையை தள்ளிவைத்தார்.

மாலை முரசு

ச: அரசு விரைவு பஸ்ஸக்கும் இன்டர்நெட்டில் முன்பதிவு

சென்னை, ஏப். 4-
ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்வது போல், தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ் களில் பயணம் செய்வதற்கு இணையம் (இன்டர்நெட்) மூலம் முன்பதிவு செய்யும் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும், தொலைதூர விரைவு பஸ்களை அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. 868 வழித்தட பஸ்கள், 66 மாற்று பஸ்கள் என மொத்தம் 934 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விரைவு போக்குவரத்துக்கழகத்தின் 16 பணிமனைகள் உட்பட 20 இடங்களில், இப்போது கணினி மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. பயணிகளின் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இன்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யும் முறை கொண்டுவரப்படுகிறது.

விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களில் பயணம் செய்வதற்கு, சென்னையில் 30 நாட்களுக்கு முன்பிருந்தும், மற்ற இடங்களில் 10 நாட்களுக்கு முன்பிருந்தும், முன்பதிவு செய்யப்படுகிறது. இணையவழி முன்பதிவு முறை வந்தால், ஒரே மாதிரியாக எல்லா இடங்களிலுமே 30 நாட்களுக்கு முன்பிருந்தே முன்பதிவுசெய்ய வழி ஏற்படும். இதற்காக, பெங்களூர், திருவனந்தபுரம், திருப்பதி உட்பட 33 இடங்களில் இன்டர்நெட் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

எல்லா மையங்களும் சென்னை தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.

மாலை முரசு

ச: கக்கன் மகன் நிலைமை பரிதாபம்


மாதவரம், ஏப். 4-

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில், முன்னாள் அமைச்சர் கக்கனின் கடைசி மகன் நடராச மூர்த்தி, கடந்த 18 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.
காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் கக்கன். கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர் என்று அனைவராலும் போற்றப் பட்டவர். கக்கனுக்கு 5 மகன்கள். கடைசி மகன் நடராச மூர்த்தி (51). கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த நடராச மூர்த்திக்கு, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால், படிப்பை தொடர முடியவில்லை.
இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட நடராச மூர்த்தி, 1987ல் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, 18 ஆண்டுகளாக எந்த ஆதரவும் இன்றி, சிகிச்சை பெற்று வருகிறார்.

மணலி புதுநகரில் வசிக்கும், கக்கனின் உதவியாளரான கனகவிஜயன் (56) அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பார்த்து வருகிறார். கனகவிஜயன் கூறியதாவது:
நான், தற்போது ஓட்டலில் சர்வராக இருக்கிறேன். கக்கனின் மகன், கடந்த 18 ஆண்டுகளாக மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது பலருக்கும் தெரியாது. காங்கிரசாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. அவருக்கு தமிழக அரசு உதவ வேண்டும்.

அதேபோல், கக்கனின் மற்றொரு மகன் பி.கே.பாக்கியநாதனும், குடியிருக்க வீடு கூட இல்லாமல் கஷ்டப்படுகிறார். அவரது மகன் கண்ணன் வேலையின்றி கஷ்டப்படுகிறார். அவர்களுக்கும் அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு கனக விஜயன் கூறினார்.

- மாலை முரசு

ச: இந்திய சரக்கு கப்பல் சோமாலியா அருகே கடத்தல்

லண்டன், ஏப். 4-
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவின் கடல்பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று நேற்று முன் தினம் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அதில் பணியாற்றிய 14 இந்திய மாலுமிகளின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிமதுல்லா என்ற சரக்கு கப்பல் மத்திய தரைக்கடல் நாடுகளில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஆப்ரிக்க கடல்பகுதி வழியாக இந்தியா வந்து கொண்டிருந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 14 மாலுமிகள் பணியாற்றி வந்தனர். சோமாலியா நாட்டை ஒட்டிய கடல்பகுதியில் நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்த போது கடல்கொள்ளையர்கள் நிமதுல்லா கப்பலை சிறிய மோட்டார் படகுகளில் வந்து சுற்றி வளைத்தனர். பயங்கர ஆயுதங்களுடன் நிமதுல்லாவில் புகுந்த கொள்ளையர்கள் கேப்டன் மற்றும் கப்பல் சிப்பந்திகளை தாக்கி தனி அறையில் அடைத்தனர். பின்னர் கப்பலை ரகசிய இடத்துக்கு கடத்தி சென்றனர்.

கடந்த 5 வாரத்தில் சோமாலியா கடல்பகுதியில் கடத்தப்படும் இரண்டாவது கப்பல் இது. இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் சபை பதிவு பெற்ற ரோசன் என்ற கப்பல் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அதில் பணியாற்றிய 6 கென்யன் மற்றும் 6 இலங்கை மாலுமிகளை கடல் கொள்ளையர்கள் இன்னும் விடுவிக்க வில்லை.

சோமாலியாவில் உள்நாட்டு கலவரம் மூண்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் மொகதிஷ¨விலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகிறார்கள்.

மாலை முரசு

ச: ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு!

தமிழ் புத்தாண்டு தினமான வரும் 14ம் தேதி முதல் சென்னை மாநகரத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா ஆகிய உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் இன்று அறிவித்தார். மே முதல் தமிழகம் முழுவதும் விநியோகம் விலைவாசியை கட்டுப்படுத்த அரசு அதிரடி.

- மாலை முரசு

ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்த சலுகை ரத்து: முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணக் குறைப்பு ஏதும் இல்லை: ரயில்வே புது உத்தரவு

சென்னை, ஏப். 4: நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் விழாக்காலங்கள் மற்றும் சாதாரணக் காலங்களில் பயணக் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

சாதாரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்புகளில் விழாக் காலங்களில் 3 சதவீதமும், சாதாரண காலங்களில் 6 சதவீதமும் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. 102 இருக்கைகள் வசதி கொண்ட ஏசி சேர் காரில் விழாக் காலத்தில் 4 சதவீதமும், சாதாரண காலத்தில் 8 சதவீதமும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு பெட்டிகளுக்கும் பயணக் கட்டணத்தில் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது நாடு முழுவதும் இயக்கப்படும் 90 சதவீதம் முக்கிய ரயில்களில் இக் கட்டணக் குறைப்பு அல்லது சலுகை ஏதும் வழங்கப்படாது என்று ரயில்வே துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

எனினும் சில குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டும் இச் சலுகை வழங்கப்படும் என்று ரயில்வே உத்தரவிட்டுள்ளது. வைகை, பல்லவன், பிருந்தாவன், லால்பாக், சென்னை-பெங்களூர் இடையே மாலையில் இயக்கப்படும் சதாப்தி, சப்தகிரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்தச் சலுகை வழங்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.

எனினும், பாண்டியன், மலைக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, தமிழ்நாடு, திருக்குறள், இன்டர்சிட்டி, நீலகிரி, கோவை உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணக் குறைப்புச் சலுகை ஏதும் வழங்கப்படாது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

Dinamani

"பந்த்' நாளில் முன்பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு திருப்பி வழங்கிய கட்டணம் ரூ.7.80 லட்சம்

சென்னை, ஏப். 4: தமிழகத்தில் "பந்த்' நடைபெற்ற மார்ச் 31-ம் தேதி மட்டும் ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு கட்டணத் தொகையாக 3,905 பயணிகளுக்கு ரூ. 7 லட்சத்து 80 ஆயிரத்து 260 திருப்பி வழங்கப்பட்டது.

பந்த் நாளுக்கு முந்தைய நாளான மார்ச் 30-ம் தேதி மட்டும் முன்பதிவு ரத்து செய்த 3,148 பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத் தொகையாக ரூ. 5 லட்சத்து 82 ஆயிரத்து 628 திருப்பி வழங்கப்பட்டது. இந்த இருநாள்களில் மட்டும் தெற்கு ரயில்வேக்கு பயணிகள் கட்டண வசூலில் ரூ. 13 லட்சத்து 62 ஆயிரத்து 888 இழப்பு ஏற்பட்டது.

சார்க் தலைவர்களின் மனைவிகள் 90 நிமிடத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு ஷாப்பிங்

புதுதில்லி, ஏப். 4: சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள பாகிஸ்தான், இலங்கை, பூடான் அரசுத் தலைவர்களின் மனைவிகள் தில்லியில் ஒரே கடையில் 90 நிமிடத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு பொருள்கள் வாங்கினர்.

பாகிஸ்தான் பிரதமர் சௌகத் அஜீஸின் மனைவி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சய-வின் மனைவி மற்றும் பூடான் பிரதமர் கண்டு வாங்சக்-கின் மனைவி ஆகியோர் தில்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யும் காட்டேஜ் எம்போரியத்திற்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒன்றாக வந்தனர்.

விற்பனையாளர்கள் அவர்களுக்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். பாகிஸ்தான் பிரதமரின் மனைவி ருக்ஷானா அஜீஸ் ரூ.43 ஆயிரத்துக்குப் பொருள்கள் வாங்கினார். மொத்தத்தில் மூவர் குழுவும் 10 சதவீத தள்ளுபடி போக ரூ.50 ஆயிரத்துக்கு பொருள்கள் வாங்கி கடைக்காரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

Dinamani

சத்துணவுடன் வாழைப்பழம் !

பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவுடன் வாழைப்பழமும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. சட்டசபையில், காங்கிரஸ் உறுப்பினர் ராஜசேகரன் பேசுகையில், சத்துணவுடன் தற்போது வாரம் 3 முறை முட்டை போடப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல குழந்தைகளுக்கு வாழைப்பழமும் வழங்க வேண்டும். வாழைப்பழம் உடலுக்கு நல்லது, அதில் சத்து உள்ளது. இதுதவிர விவசாயிகளுக்கும் இதனால் உற்பத்தி பெருகி, நல்ல வருவாய் கிடைக்கும். நதிகளை இணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திருச்சி மாவட்டத்தையும் காவிரி டெல்டா மாவட்டங்களுடன் இணைக்க வேண்டும் என்றார் அவர்.

நன்றி.

தட்ஸ் தமிழ்

ஆந்திராவில் இன்று பந்த் .

பிற்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை கண்டித்து ஆந்திராவில் இன்று முழு அடைப்பு நடந்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது .

சேப்பலின் விமர்சனம் குறித்து சச்சின் பேட்டி

"கடந்த பதினேழு வருடங்களாக கிரிக்கெட்டுக்கு எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். சேப்பலைப் போல் , இதுவரை எந்த ஒரு கோச்சும் என் நடத்தை சரியில்லை என்று சொன்னதில்லை" -- சச்சின் ஆதங்கம்

முழு விவரங்களுக்கு

ச: தினமலர் - சுற்றுலா மலர்

தமிழக சுற்றுலாத் தளங்கள் பற்றி மாவட்டம் வாரியாக நல்லதொரு தொகுப்பை தினமலர் வலைதளத்தில் தொகுத்துள்ளார்கள்.


"தினமலர் - சுற்றுலா மலரைக் காண இங்கே செல்லுங்க.."

கோவை அருகே அட்டைப்பெட்டி கம்பெனியில் 4 பேர் பலி

கருத்தம்பட்டி, ஏப். 3- கோவையை அடுத்த சோமனூர் கள்ளப்பாளையம் பாளையம் தோட்டம் பகுதி யைச் சேர்ந்தவர் ரவி என்கிற கந்தவேல் (வயது 37). இவர் கள்ளப்பாளையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அட்டைப்பெட்டி கம்பெனி நடத்தி வருகிறார். அங்கு மரக்கழிவு, காகித கழிவு மற்றும் பிற கழிவு பொருட்களை வைத்து அதை கூழாக்கி காய வைத்து அட்டை தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த அட்டைகள் துணிகளுக்கு இடையே மடிப்பு கலையாமல் இருக்க பயன்படுத்துவதற்காக திருப்பூர் போன்ற இடங்களுக்கு அனுப்ப்பட்டு வருகின்றன.

அந்த கம்பெனியில் மைசூரை சேர்ந்த தொழிலா ளர்கள் பலர் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை கம்பெனியில் உள்ள பெரிய தொட்டியில் மின்சாரம் பாய்ந்தது.

இதில், அட்டைப்பெட்டி கம்பெனி யின் உரிமையாளர் ரவி என்கிற கந்தவேல், தொழிலாளர்கள் சித்தராசு, குருசாமி, முருகேசன் ஆகிய 4 பேர் இறந்தனர்.

Headline News - Maalai Malar

டோனி சொதப்பல் தொடர்கிறது

கொல்கத்தா, ஏப். 3: உலகக்கோப்பையில் மோசமாக விளையாடிய அதிரடி வீரர் விக்கெட் கீப்பர் டோனியின் சொதப்பல் தொடர்கிறது. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் எதிரணி பந்து வீச்சுகளை துவம்சம் செய்வார் என்று விக்கெட் கீப்பர் டோனியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால்,லீக் சுற்றில் வங்கதேசம், இலங்கைக்கு எதிராக டட் அவுட்டாகி டோனி ஏமாற்றினார். இதனால், டோனி மீது ரசிகர்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கிழக்கு மண்டல அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. இதில் ஜார்கண்ட் அணி சார்பில் டோனி பங்கேற்றார். இதற்காக நேற்று முன்தினம் தீவிர பயிற்சி மேற்கொண்டார்.

முதல் போட்டியில் ஒரிசா அணியை எதிர்த்து ஜார்கண்ட் விளையாடியது. முதலில் பேட் செய்த ஒரிசா 20 ஓவரில் 121 ரன் எடுத்தது. இதன்பின் பேட் செய்த ஜார்கண்ட் 111 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிரடியாக விளையாடி ஜார்கண்ட் வெற்றிக்கு வழிவகுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டோனி 1 ரன் மட்டுமே எடுத்தார்.

Dinakaran Tamil Daily News Paper

ச: தமிழக போலீஸ் அதிகாரிக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக காவல்துறை உயரதிகாரி பிரேம் குமாருக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஒருமாத காலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1981 ஆம் ஆண்டு, மதுரையை அடுத்த வாடிப்பட்டியில் பிரேம் குமார் காவல்துறை துணை ஆய்வாளராக இருந்தபோது, அந்த ஊரில் இருவருக்கிடையிலான தனிப்பட்ட தகறாறு தொடர்பான புகார் ஒன்று அவரிடம் வந்தது. அந்த புகாரில் சம்பந்தப்பட்ட முன்னாள் ராணுவவீரரை பிரேம் குமார் பகிரங்கமாக அடித்து, கைகளை கட்டி வீதியில் அவமானப்படுத்தி அழைத்துச் சென்ற விதம் மனித உரிமை மீறல் என்று சம்பந்தப்பட்ட ராணுவ வீரர் பிரேம் குமார் மீது வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், பிரேம் குமாருக்கு ஒருமாதம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அதிகபட்ச செல்வாக்குடன் இருந்த பிரேம்குமார், தற்போதைய திமுக ஆட்சியில் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் ஏற்கெனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சி சங்கராச்சாரியாரை சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்தவர் பிரேம் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.


BBC

-o❢o-

b r e a k i n g   n e w s...