.

Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Tuesday, September 4, 2007

சென்னை: ஒரேநாளில் 4000 விளம்பரப் பலகைகள் அகற்றம்

சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 4,000 விளம்பரப் பலகைகள் திங்கள்கிழமை ஒரே நாளில் அகற்றப்பட்டன என்று மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது:

சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலையோரங்களிலும், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் விளம்பரப் பலகைகள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டுள்ளன.

அனுமதியின்றி மிகப் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பலகைகளால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சாலையை மறைத்து வைக்கப்படும் இந்த மின்னணு விளம்பரப் பலகைகளால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

இதுதவிர மழைக்காலத்தில் காற்று வீசுவதால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதையடுத்து அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அனுமதியின்றி நிறுவப்பட்டிருந்த விளம்பர அட்டைப்பலகைகள் , துணிப்பலகைகள் (பேனர்) மற்றும் மின்னணு விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை மட்டும் நகரில் இருந்த 4,000 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. காவல்துறையினரின் இந்நடவடிக்கைகள் தொடரும்.

அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பாக நிறுவப்படும் விளம்பரப் பலகைகளை 2 முதல் 5 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்த காலவரம்பிற்குள் விளம்பரப் பலகைகளை நீக்காவிட்டால், உடனடியாக அப்புறப்படுத்தப்படும்.

உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவு பெற்ற நிறுவனங்களைத் தவிர இதர நிறுவனங்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளுடன் காவல்துறையினர் இணைந்து புறநகர்ப் பகுதிகளிலும் இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

விதிகளை மீறி விளம்பரப் பலகைகளை வைத்திருந்தாலும், புதிதாக நிறுவினாலும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவல் ஏதும் இல்லை. எனினும் நகரில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார் நாஞ்சில் குமரன்.

தினமணி

"மிக மோசமான அமெரிக்க அதிபர் புஷ்" - ஆஸ்திரேலியர்கள் கருத்து

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் ஜார்ஜ் புஷ் தான் என்று ஆஸ்திரேலியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தங்கள் நாட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்த புஷ்ஷுக்கு அவர் கடும் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

21 நாடுகள் பங்கேற்கும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு வரும் சனிக்கிழமை ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் தொடங்கவுள்ளது. இதையொட்டி அமெரிக்க அதிபர் புஷ், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்காவின் வரலாற்றில் மோசமான அதிபராக உள்ளவர் தங்கள் நாட்டுக்கு வர அனுமதிக்கமாட்டோம் என்று அந்நாட்டு மக்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

போருக்கு எதிரான அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் புஷ்ஷுக்கு எதிராக 52 சதவீத வாக்குகளும், 32 சதவீதம் பேர் நடுநிலையாகவும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராக் மீது வலுக்காட்டாயமாக போர் தொடுத்ததே புஷ் மீதான வெறுப்புக்கு முக்கிய காரணம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாங்கள் அமெரிக்கர்களின் நண்பர்கள். அமெரிக்கர்கள் நல்லவர்கள். ஆனால், புஷ் நல்லவரல்ல. நாங்கள் புஷ்ஷை எதிர்ப்பவர்கள். அவரது கொள்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை. மனித உரிமை மீறல்களுடன் மற்ற நாடுகள் மீது படையெடுப்பது கண்டனத்துக்குரியது.

புஷ்ஷின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிட்னி நகரின் முக்கிய ரயில் நிலையங்கள் முன் பேரணி, மாநாடு நடக்கும் சிட்னி ஓபரா மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் போர் எதிர்ப்பு அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். ஆனால், பேரணி நடத்துபவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுமென போலீஸôர் எச்சரித்துள்ளனர்.

மாநாடு நடக்கவுள்ள ஓபரா மாளிகையைச் சுற்றி 5 கி.மீ. அளவுக்கு பாதுகாப்பு வேலி அமைத்துள்ளனர். பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்கும் ஹோட்டல்களைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

புஷ் அதிபராக இருக்கும் வரை அமெரிக்காவுடன் எந்த கூட்டணியும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், புஷ்ஷின் நண்பராக செயல்பட்டு வருகிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட். புஷ் எடுத்துவரும் அனைத்து கொள்கை முடிவுகளுக்கும் இவர் தலையசைத்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முன்னதாக, திங்கள்கிழமை ஆஸ்திரேலியா வந்த சீன அதிபர் ஹூ ஜின்டாவோவுக்கும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி

Monday, September 3, 2007

தமிழகம் முழுவதும் பலத்த காவல்துறை கண்காணிப்பு

ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தால் இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய தலைநகரங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐதராபாத்திற்கு அடுத்தப்படியாக தீவிரவாதிகள் தமிழகத்தை குறி வைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்தார்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் மார்க்கெட், கோயில்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி

ஐ.நா பாராட்டும் ம.பி.முதல்வர்

ஐ.நா.சபையின் 21-ம் நூற்றாண்டு மேம்பாட்டு குறிக்கோள்களை எட்ட திறம்பட செயல்பட்டதாக மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்கு ஐ.நா. சபை சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்தூரில் புதன்கிழமை நடைபெறும் விழாவில், ஐ.நா. நூற்றாண்டு மேம்பாட்டு பிரசாரப் பிரிவின் ஆசியத் தலைவர் மினார் பிம்பாலே சான்றிதழை வழங்குகிறார்.

பசி-வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் ஆரம்பக்கல்வி, பாலின வேறுபாட்டை ஒழித்தல், பெண் சுதந்திரம், பெண்சிசுக்கொலை தடுப்பு, கர்ப்பிணிகள் உடல்நலம், மலேரியா, எய்ட்ஸ் மற்றும் இதரநோய்கள் தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சர்வதேச தரத்தில் மேம்பாட்டு வளர்ச்சிக்கான ஒருமித்த முயற்சி மேற்கொள்தல் ஆகிய குறிக்கோள்களை எட்ட வேண்டும் என்று இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் ஐ.நா. சபை இலக்கு நிர்ணயித்தது.

அக்டோபர் 17-ம் தேதி உலக வறுமை ஒழிப்புத் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இத்தகைய ஊக்குவிப்பு நடவடிக்கைகளை ஐ.நா. சபை மேற்கொண்டு வருகிறது.

தினமணி

Sunday, September 2, 2007

கடையடைப்புகளால் கேரளாவின் இழப்பு 4,500 கோடி

கடையடைப்புகள் மூலமாக கேரளாவுக்கு ஆண்டுக்கு நான்காயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக, பந்த் எதிர்ப்பு முன்னணி நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதனால், அரசுக்கு மட்டும் 750 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

கேரளாவில் மாநிலம் தழுவிய கடையடைப்பு ஆண்டுக்கு சராசரியாக ஏழு முறை நடத்தப்படுகிறது. "லோக்கல்' பந்த்கள் ஆண்டுக்கு 185 முதல் 200 வரை நடத்தப்படுகின்றன. இவற்றில் சிக்கி மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும், அடிதடியில் காயம் ஏற்பட்டும் பலர் இறந்து போகின்றனர். ஒவ்வொரு கடையடைப்பின் போதும் பலர் வேலையிழக்கின்றனர். பெரிய அளவில் வருமானமும் பாதிக்கிறது.நிலைமை இப்படியே நீடித்தால் முதலீடு செய்யவே முடியாத மாநிலம் என்ற நிலைக்கு கேரள மாநிலம் தள்ளப்பட்டு விடும் என்று இந்த முன்னணியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

தினமலர்

Wednesday, August 29, 2007

தமிழகம் வருகிறார் குடியரசுத்தலைவர்.

பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின் முதன் முறையாக ஆகஸ்டு 31 அன்று சென்னை வருகிறார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள நவீன கலை அரங்கத்தை அவர் திறந்து வைக்கிறார்.

இந்தக் கலையரங்கத்தை செப்டம்பர் ஒன்றாம் தேதி குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் திறந்து வைக்கிறார். இதற்காக ஆகஸ்டு 31ஆம் தேதி விமானப் படை விமானம் மூலம் அவர் சென்னை வருகிறார். அங்கிருந்து ராஜ்பவன் செல்லும் அவர் இரவில் அங்கு தங்குகிறார். மறுநாள், ஒன்றாம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீபெரும்புதூர் செல்கிறார். அங்கு கலையரங்கத்தை திறந்து வைத்த பின்னர், ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

Monday, August 27, 2007

கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர்

கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர்
பாறை இடையே பாலம் கட்ட பரிந்துரை

ஆகஸ்ட் 27, 2007

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறை இடையே பாலம் கட்டுவது குறித்து தமிழக அரசிடம் பரிந்துரைக்கப்படும் என்று சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் முல்லைவேந்தன் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்,

கன்னியாகுமரி பழத் தோட்டம் மற்ற இடங்களில் இல்லாத வகையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு ஒரு முன் மாதிரி பழத்தோட்டமாக இருந்து வருகிறது. திருவள்ளுவர் சிலை பராமரிப்பு ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இது குறித்து பரீசிலிக்கப்படும்.

திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் விதமாக பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் விருப்பத்தை அரசுக்கு தெரிவிப்போம் என்றார்.


www.thatstamil.com

Sunday, August 26, 2007

செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணம்

செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணம்

ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2007( 13:40 IST )
Webdunia


ஆகஸ்ட் 28ஆம் தேதி ஏற்பட உள்ள முழுச் சந்திர கிரகணம் பிற்பகல் 2.21 முதல் 5.54 வரை நிகழ்கிறது. ஆனால் அதனை 16 நிமிடங்களுக்கு மட்டுமே இந்தியாவில் காண முடியும்.

அந்த 16 நிமிடங்களும் அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் மட்டுமேத் தெரியும்.

பாலஸ்தீனத்திற்கு இந்தியா சார்பில் பள்ளிக்கூடம், மருத்துவமனை.

பாலஸ்தீனத்தில் காஸா நகரில் இந்திய அரசு சார்பில் பள்ளிக்கூடம் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது. ஜெருசேலம் அருகே கட்டப்படும் இந்த உயர்நிலைப்பள்ளி பகுதி தற்போது ஹமாஸ் பிரிவு நிர்வாகத்திடம் உள்ளது.

இந்திய அரசு கட்டி கொடுக்கும் மற்றொரு இருதய நோய் அறுவை சிகிச்சை மையமும் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது. பள்ளிக்கூட கட்டத்திற்கு ஜவஹர்லால் நேரு பெயர் சூட்டப்படுகிறது. இந்திய தூதர் சிக்கூர்ரஹ்மான் இத்தகவலை தெரிவித்துள்ளார்

Saturday, August 25, 2007

2010-க்குள் 1000 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர்: கோக-கோலா திட்டம்

2010-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1000 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க கோக-கோலா குளிர்பான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 20 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 20-வது பள்ளியாக, சென்னை தரமணியில் கானகம் பகுதியில் உள்ள அட்வென்ட் நடுநிலைப் பள்ளியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தின் தொடங்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கோக-கோலா நிறுவனத்தின் துணைத் தலைவர் தீபக் ஜாலி பேசியது:

தமிழகத்தில் சுத்தமான குடிநீர் இன்றி தவிக்கும் 100 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக, ரூ. 35 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கானகத்தில் உள்ள அட்வென்ட் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனமே 3 ஆண்டுகளுக்கு பராமரிக்கும்.

தமிழகத்தில் உள்ளது போன்று, மேற்குவங்க மாநிலம் கோல்கத்தாவில் 150 பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 1000 பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்.

தினமணி

Thursday, August 23, 2007

ஆந்திராவில் யுரேனிய சுரங்கம்.

ஆந்திராவில் 1,106 கோடி ரூபாய் செலவில் யுரேனிய சுரங்கம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், அணு உலைகளின் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். கட்டுமானங்கள் 30 மாதங்களில் முடிக்கப்பட்டு, சுரங்கம் 36 மாதங்களில் தனது உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, August 22, 2007

தாய்நாடு திரும்ப இயலாமல் தவித்த இந்தியர்களுக்கு இலவச விமான பயணச்சீட்டு

தாய்நாடு திரும்ப இயலாமல் தவித்த இந்தியர்களுக்கு இலவச விமான பயணச்சீட்டு

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா காலம் முடிந்தபின்னரும் சட்டவிரோதமாக தங்கியுள்ள பலரும் நாட்டை விட்டு வெளியேற பொதுமன்னிப்பு அளித்து எவ்வித அபராதமும் இன்றி தாய்நாடு செல்ல அமீரக அரசு சலுகை வழங்கியுள்ளது.

இதன் மூலம் சட்டவிரோதமாக தங்கியுள்ள பல்வேறு நாட்டவரும் அமீரக அரசிடம் விண்ணப்பித்து தாய்நாடு திரும்பி வருகின்றனர். எனினும் இந்தியாவைச் சேர்ந்த சிலர் தாய்நாடு திரும்ப விமான பயணச்சீட்டு வாங்க இயலாத நிலையில் உள்ளனர். இதனை அறிந்த வேலி ஆப் லவ் ( valley of love ) எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஷார்ஜா இந்திய சங்கத்தில் திங்கள்கிழமை மாலை முதல் கட்டமாக 36 இலவச விமான பயணச்சீட்டுகளை வழங்கியது.

இன்னும் பங்களாதேஷ், இலங்கை, எத்தியோப்பியா உள்ளிட்ட நாட்டவர்களும் இலவச விமான பயணச்சீட்டு கேட்டு தங்களை அணுகி இருப்பதாக வேலி ஆப் லவ் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Amnesty seekers relieved as they get free passage
http://www.gulfnews.com/nation/Immigration_and_Visas/10148320.html

ஆந்திர ஆளுநராக திவாரி பதவியேற்பு

மூத்த காங்கிரஸ் தலைவர் என் டி திவாரி இன்று ஆந்திர மாநில ஆளுநராக இராஜ்பவனில் நடந்த எளிய நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் ஜி எஸ் சிங்வி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். மாநில முதல்வர் இராஜசேகர ரெட்டி, அவரது அமைச்சர்கள் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் இவ்வைபவத்தில் பங்கேற்றனர்.உத்தரபிரதேச முதல்வராக மூன்றுமுறையும் புதியதாக உருவாக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநில முதல்வராகவும் திவாரி பணியாற்றியுள்ளார். இதுவரை ஒரிசாவின் ஆளுநர் ராமேஷ்வர் தாக்குர் ஆந்திராவிற்கும் ஆளுநராக அதிகபொறுப்பு வகித்துவந்தார்.

The Hindu News Update Service

39 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த விமானப்படை வீரரின் சடலம்.

இமயமலைப் பகுதியில் கடந்த 39 ஆண்டுகளுக்கு முன் நடந்த விமான விபத்தில் பலியான இந்திய வீரரின் சடலம் நேற்று முன் தினம் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் தகனம் செய்யப்பட்டது.

காஷ்மீரில் லே பகுதியில், கடந்த 1968ம் ஆண்டு, பிப்., 7ம் தேதி, விமானப் படைக்கு சொந்தமான ஏ.என். 12 என்ற விமானம் விபத்துக்குள்ளானது. இமயமலையை அடுத்துள்ள சந்திரபாகா மலைப் பகுதியில் ஆறாயிரத்து 264 மீட்டர் உயரத்தில் விபத்து நடந்ததால், அந்த விமானத்தில் இருந்த ராணுவ மற்றும் விமானப் படையைச் சேர்ந்த 102 பேரும் இறந்து விட்டதாக கருதப்பட்டது.இந்நிலையில், கடந்த 2003ம் ஆண்டு ஜூலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் எஞ்சிய பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

அதன் பிறகு, ஒவ்வொரு ஆண்டும், கோடைக் காலத்தில், விமானத்தின் வேறு பாகங்களோ அல்லது வீரர்களின் உடல்களோ கிடைக்குமா என்று ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தி வந்தது.அதன்படி, இந்த ஆண்டும் கடந்த 2ம் தேதி முதல் தேடுதல் வேட்டை தொடங்கியது. அப்போது, பனி மலையால் மூடப்பட்ட நிலையில், மூன்று சடலங்களை இந்திய ராணுவம் கண்டு பிடித்தது. அவற்றில், ஒரு சடலம் ராணுவ சீருடை மற்றும் அடையாள அட்டையுடன், அப்படியே இருந்தது. அந்த அடையாள அட்டையில் இருந்த குறிப்புகளைக் கொண்டு, அப்போது 20 வயதாக இருந்த மகேந்திர நாத் புகோன்வாஸ் என்னும் வீரருடைய சடலம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.அவரது குடும்பம் குறித்து விசாரித்ததில், அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து, 360 கி.மீ., தொலைவில், தியோதாய் என்ற கிராமத்தில் அவர்கள் வசித்து வருவது தெரியவந்தது. அதனால், மகேந்திர நாத் உடல், தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டியில் வைத்து, கடந்த திங்கட்கிழமை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று, முழு ராணுவ மரியாதையுடன், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில், மகேந்திர நாத் உடல் தகனம் செய்யப்பட்டது.

ராணுவ வீரர் மகேந்திராவின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் மூன்று சகோதரர்கள். அவர்களில் இரண்டாவது சகோதரர் துபேன் திருமணம் கடந்த 1967ல் நடந்தது. அப்போது தான், மகேந்திரா, தனது சொந்த ஊருக்கு வந்து, குடும்பத்தினருடன் சேர்ந்து இருந்தார்.இதுகுறித்து துபேன் கூறுகையில், "எங்கள் குழந்தைகளிடம் காட்டுவதற்கு, துரதிர்ஷ்டவசமாக மகேந்திராவின் போட்டோ கூட எங்களிடம் இல்லை. கடைசியாக அவனை சடலமாக பார்ப்பதற்கு, எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது' என்றார்.

துர்காநாத் என்ற இளைய சகோதரர் கூறும் போது, "எனது சகோதரர் பயணம் செய்த விமானம், கடந்த 39 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கியது. அந்த இடத்தில் இருந்து, தற்போது சடலம் கிடைத்து இருப்பதை, எங்களால் நம்பவே முடியவில்லை. இதை தெய்வாதீன செயல் என்று தான் கூற வேண்டும். இது கனவு போல இருக்கிறது. எனினும், எனது அன்பு தம்பியின் சடலம் கிடைத்து, அதற்கு இறுதி மரியாதை செய்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்' என்றார்.மூத்த சகோதரர் ஜித்தன் கூறுகையில், "விமான விபத்து நடந்தது குறித்து கேள்விப்பட்டு, நாங்கள் சில நாட்கள் காத்திருந்தோம். ஆனால், அதன் பிறகு, நாங்கள் இறுதிச் சடங்கு செய்து விட்டோம். தற்போது, இரண்டாவது முறையாக, இறுதிச் சடங்கு செய்கிறோம்' என்றார்.

தினமலர்

Tuesday, August 21, 2007

திருமணப்பதிவு கட்டாயமாகிறது?

திருமணப்பதிவைக் கட்டாயமாக்கும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் வேங்கடபதி திங்கள்கிழமை தெரிவித்தார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதில் ஒன்றில் அவர் இதைத் தெரிவித்தார். நிலைமையின் முக்கியத்துவம் மற்றும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கூடிய விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என்றார் அவர்.

தினமணி

Monday, August 20, 2007

சாலைகள் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு

நடப்பாண்டில் 4 மாநகராட்சி, 56 நகராட்சிகளில் மண் சாலைகளை தார்ச் சாலைகளாகத் தரம் உயர்த்த அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் சிமென்ட், தார், உலோக, மண் சாலைகள் உள்ளன. நான்கு ரக சாலைகளையும் தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.செங்கல்பட்டு, வேலூர், சேலம்,திருப்பூர், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி மண்டலங்களில் 56 நகராட்சிகளில் 60.133 கி.மீ.,மண் சாலைகள் ரூ.8.20 கோடியில் தார்ச்சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி மாநகராட்சிகளில் 13.150 கி.மீ.,மண்சாலைகள் ரூ.1.80 கோடியில் தார்ச்சாலைகளாக தரம் உயர்த்தப்படும் என அரசு செயலர் (உள்ளாட்சிதுறை) தீனபந்து தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டுகளில் குடும்பத்தலைவர் கைரேகை.

ரேஷன் கார்டு(குடும்ப அட்டை)களில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்கவும், போலி ரேஷன்கார்டுகளை அடையாளம் காணவும், குடும்பத் தலைவரின் கைரேகையை ரேஷன் கார்டில் பதிவுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக உணவு அமைச்சர் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

பொது விநியோகத் திட்ட முறை குறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அமைச்சர் ஏ.வ. வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசியபோது வேலு இதைத் தெரிவித்தார்.

தினமணி

ஆறுகளின் கரைகளைப் பலப்படுத்த ரூ. 31.5 கோடி

கோரையாறு, குடமுருட்டி ஆறுகளின் கரைகளைப் பலப்படுத்த மாநில அரசு ரூ. 31.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சியில் நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் ஸ்டாலின் அளித்த பேட்டி:

வெள்ளத் தடுப்புக்காக ரூ. 210 கோடியில் காவிரிக் கரையைப் பலப்படுத்தும் திட்டம் "நபார்டு' உதவியுடன் நிறைவேற்றப்படும். இதற்காக பிரதமரைச் சந்திப்பேன். மேலும், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் 31-ம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும், கோரையாறு, குடமுருட்டி ஆறுகளில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூ. 31.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ரூ. 47.5 கோடியில் மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார் ஸ்டாலின்.

தினமணி

Wednesday, August 8, 2007

சென்னை நகரை அழகுபடுத்த சித்திர வேலைப்பாடுகளுடன் 300 சாலையோர பூங்கா

சாலையோரங்களில் காலியாக கிடக்கும் இடங் களை குப்பை கொட்டி அசிங்கப்படுத்துதல் மற்றும் தனியார் ஆக்கிரமித்தலில் இருந்தும் தடுக்க அந்த மாதிரியான இடங்களை பூங்காக்களாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சாலையோர பூங்கா அமைக்க 300 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேயர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது:-

பூங்காக்களை வடிவமைப் பது பற்றி 54 பேரிடம் இருந்து டிசைன்கள் வந்துள்ளன. அழகிய சித்திர வேலைப்பாடுகள், சிற்பங்கள் நிறைந்ததாக இந்த பூங்காக்கள் அமையும். மாதிரி வரை படங்கள் உறுதி செய்யப்பட்ட பிறகு அரசு அனுமதி பெற்று பூங்காக்கள் உருவாக்கப்படும்.

பல்வேறு தலைவர்களின் பெயர்களில் பெரிய பூங்காக்கள் உள்ளன. அந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் 38 பூங்காக்களில் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு வைக்கப்படும்.

மகாத்மா காந்தி, நேரு, சர்தார் பட்டேல், சத்திய மூர்த்தி, திரு.வி.க., திருவள்ளு வர், பாரதியார், காமராஜர், அண்ணா, ராஜீவ், கருணாநிதி, சி.பா.ஆதித்தனார் உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற உள்ளது.

மாலைமலர்

ஊர்மக்கள் அனைவரையும் கூண்டோடு கொல்ல சதி: குடிநீர் கிணற்றில் விஷம்

குடிநீர் கிணற்றில் விஷத்தை கலந்ததுடன் பல்லிகளையும் கொன்று போட்ட மலைராஜை்(வயது 37) கைது செய்யப்பட்டார்.

போலீசில் அவர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள அரியகோட்டை பஞ்சாயத்தை சேர்ந்த அனிச்சகுடி காளியம்மன் கோவில் அருகே அந்த கோவிலுக்கு பூஜை நடத்தும் வேளார் வகுப்பை சேர்ந்த 15 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். என் தந்தை செல்வத்திற்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு நான் உள்பட 5 குழந்தைகளும், 2-வது மனைவிக்கு செந்தில், உடையான் உள்பட 4 குழந்தைகளும் உள்ளனர்.

நான் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி சவுதி அரேபியா சென்றேன். நான் வெளிநாட்டில் இருந்த போது உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டு செந்திலும், உடையானும் என் மனைவியிடம் பணத்தையும், நகையையும் கடனாக வாங்கியுள்ளனர். ஆனால் இதுவரை அதை திருப்பி கொடுக்கவில்லை. 5 லட்சம் பணத்தையும் என் மனைவி ஏற்கனவே போட்டிருந்த 5 பவுன் நகை உள்பட 30 பவுன் நகையையும் அவர்கள் மோசடி செய்து விட்டார்கள்.

இதனால் அவர்களையும், அவர்களுக்கு ஆதரவாக பேசிய 15 குடும்பத்தினரையும் கூண்டோடு கொலை செய்ய வேண்டும் என்று எனக்கு வெறி ஏற்பட்டது.

தேவிபட்டினத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்த நான், அங்கு திரிந்த பல்லிகளை எல்லாம் கொன்று பாலிதீன் பையில் சேகரித்தேன். பின்பு ராமநாதபுரம் வந்து அரண்மனை அருகே உள்ள ஒரு பூச்சி மருந்து கடையில் அரை கிலோ போரோடாக்ஸ் என்ற குருணை மருந்தை வாங்கினேன். அதை கிணற்றில் ஊற்றி விட்டு என் மனைவி ஊரான சிறுவயலுக்கு வந்து விட்டேன். ஆத்திரத்தில் அறிவிழந்து விட்டேனே என்று இப்போது வருத்தமாக உள்ளது.

தினத்தந்தி

-o❢o-

b r e a k i n g   n e w s...