.

Sunday, April 8, 2007

திண்டிவனம் விபத்து:பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1 லட்சம் நிதி.

திண்டிவனம் ஜீப் வெடிவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இன்று தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்பட்டது. திண்டிவனம் அருகேயுள்ள செண்டூரில் வெடிப்பொருட்கள் ஏற்றி வந்த ஜீப் நேற்று வெடித்து சிதறியது. இதில் 16 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.அதன்படி இன்று காலை அமைச்சர் பொன்முடி செண்டூர் கிராமத்துக்க்கு வந்தார். வெடிவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கினார்.

பள்ளிக்கூட கதவுகளில் கோந்து தடவி குறும்பு!

கார்ஸ்லீட்: பள்ளிக்கூட கதவுகளில் கோந்தை ஊற்றி மாணவர்கள் விஷமம் செய்துள்ளனர். இதனால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கார்ல்ஸ்பாட் உயர்நிலைப் பள்ளியில் பாடமே நடக்கவில்லை.

காலையில் பள்ளிக்கூடத்துக்கு முதலில் சென்ற ஆசிரியர், எந்தக் கதவையும் திறக்க முடியாதபடிக்கு, பூட்டுகளில் ""ஏதோ'' தடவப்பட்டிருப்பதைப் பார்த்து வியப்படைந்தார். பிறகு பள்ளிக்கூட முதல்வருக்குத் தெரியப்படுத்தினார். பள்ளிக்கூடத்துக்கு பொறுப்பான அலுவலர்கள் திரண்டுவந்து, கோந்து ஊற்றப்பட்ட பூட்டுகளைத் திறக்க முற்பட்டனர். மொத்தம் உள்ள 100 கதவுகளில் 27 கதவுகளை மட்டுமே மதியம்வரை திறக்க முடிந்தது.

பள்ளிக்கூடத்தின் 3 ஆயிரம் மாணவர்களில் பெரும்பாலானவர்களால் வகுப்புகளுக்குச் செல்ல முடியவில்லை. எனவே உடல்பயிற்சி அறைக்கும் பிற இடங்களுக்கும் சென்று பொழுதைக் கழிக்குமாறு மாணவர்கள் பணிக்கப்பட்டனர்.

School Children Glue School Doors Shut: "Students at a San Diego high school decided to glue the doors to the entire school shut for and end of spring break prank. They plugged all the locks on 100 doors with super strength glue."

விளையாட்டுதிடல் சேதம்: அதிமுக கவுன்சிலர் உள்பட ஐவர் கைது

புதுக்கோட்டை, ஏப். 8: புதுக்கோட்டையில் விளையாட்டுத் திடல் தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டது தொடர்பாக அதிமுக கவுன்சிலர் உள்பட ஐவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை உசிலங்குளம் பகுதியில் விளையாட்டுத் திடல் ஒன்று உள்ளது. இதைச் சுற்றி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தடுப்புச் சுவர் 25 மீ. நீளத்துக்கு இடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் மெகபூபா கணேஷ்நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 31வது வட்ட அதிமுக கவுன்சிலர் குமார், அதிமுக வட்டச் செயலர் செல்வராஜ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மாஸ்கோ, திருப்பதி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜார்க்கண்டில் 300 நக்சல்கள் திடீர் தாக்குதல்: 2 ஜவான்கள் உள்பட 6 பேர் சாவு; பாலம் தகர்ப்பு

ராஞ்சி, ஏப். 8: ஜார்க்கண்ட் மாநிலம், பொக்காரோ மாவட்டத்தில் சுமார் 300 நக்சல் தீவிரவாதிகள் போலீஸ் நிலையம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 ஜவான்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்; 6 பேர் காயமடைந்தனர்.

பொக்காரோ மாவட்டத்தில் உள்ள காஸ்மஹால் நிலக்கரி சுரங்கப் பகுதிக்குள் வெள்ளிக்கிழமை இரவு பெண்கள் உள்ளிட்ட 300 நக்சல் தீவிரவாதிகள் திடீரென நுழைந்து தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 2 ஜவான்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

பின்னர் குர்பானியா பஜாரில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் 4 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர்.

பின்னர் போலீசார் உள்ளே வராமல் தடுக்க பில்பிலோ-குர்பானியா பாலத்தை கண்ணிவெடி வைத்து தகர்த்தனர். அதன் பின்னர் காந்தி நகர் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். போலீசாரும் திருப்பித் தாக்கினர். சனிக்கிழமை அதிகாலை வரை இந்த சண்டை நீடித்தது. இதில் 4 போலீசார் காயமடைந்தனர். தீவிரவாதிகள் தரப்பில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களைத் தூக்கிக்கொண்டு தீவிரவாதிகள் தப்பினர்.

தீவிரவாதிகள் ஜவான்களிடமிருந்து 4 தானியங்கி துப்பாக்கிகளை பறித்துச் சென்றனர்.

தினமணி

Saturday, April 7, 2007

இந்திய கிரிக்கட் அணியின் தலைவராக திராவிட் தொடருவார்

மேற்கிந்தியத் தீவுகளில் நடக்கும் உலகக் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியில் இருந்து இந்தியா முன்னதாகவே வெளியேற நேர்ந்த போதிலும், இந்திய அணியின் தலைவராக ராகுல் திராவிட் தொடர்ந்தும் இருப்பார் என்று இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

தேசிய அணியின் விளையாட்டுத் திறனையும் மற்றும் உள்ளூர் விளையாட்டையும் முன்னேற்றுவதற்கான வழி வகைகள் குறித்து இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரியம் மும்பாயில் கூடி ஆராய்ந்தது.

பதற்றப்படுவதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை என்ற சமிக்ஞையை வெளிக்காட்டுவதற்காகவே, ராகுல் திராவிட்டை தொடர்ந்தும் அணித் தலைவராக வைத்திருக்க கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வங்காளதேசத்தில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் போட்டிகளில் தற்காலிக பயிற்சியாளரான ரவி சாஸ்திரியுடன் இணைந்து டிராவிட் செயற்படுவார்.

பிபிசி-தமிழ்

ஜெயலலிதா இந்தியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்

அண்மைக்கால தமிழகத் தலைவர்களிலேயே 'புரட்சிகரமாக' முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா நடந்துவரும் உத்தரபிரதேச தேர்தலில்
பரேலி நகரில் நாளை ஞாயிறு அன்றுநடக்க இருக்கும் தேர்தல் கூட்டத்தில் இந்தியில் பேசவிருப்பதாக MSN INDIA செய்தி கூறுகிறது. அவர் முலாயம்சிங் யாதவிற்கு ஆதரவு கொடுத்துள்ளார்.

கிரிக்கெட் வாரியம் ஒப்பந்த முறையை கைவிடுகிறது

இந்தியக் கிரிக்கெட் வாரியம் தனது விதிகளை கடுமையாக்குமுகமாக விளையாட்டுவீரர்களை ஒப்பந்தமுறையில் பணம் தருவதற்கு பதிலாக இனி பழையபடி ஒரு ஆட்டத்திற்கு ஒரு இலட்சம் என்றும் ஆட்டத்தொடரை வென்றால் மூன்று இலட்சம் என்றும் தர முடிவு செய்துள்ளது.

இதுபற்றி மேலும்..DNA - Sport - Daily News & Analysis

தமிழ்நாடு: RDX கொண்டுசென்ற கார் வெடித்ததில் 20 பேர் பலி

விழுப்புரம் அருகே செந்தூர் கிராமம் அருகே ஆர்டிஎக்ஸ் எடுத்துச் செல்லப்படுவதாக சந்தேகிக்கப் படும் காரொன்று தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்து சிதறி அந்த இடத்தில் புளி பறித்துக் கொண்டிருந்த பத்துபேரும் அதே இடத்திலும் மருத்துவமனையில் பத்துபேருமாக இறந்தனர்். சம்பவ இடத்திற்கு விரைந்த பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ5 இலட்சம் கொடுக்கவும் பாதிக்கப் பட்ட வீடுகளை கட்டித்தரவும் மாநில அரசு ஆவண செய்யும் என கூறினார்.


மேல் விவரங்களுக்கு..Zee News - 20 killed as explosives-laden car blows up in TN

கிரேக் சாப்பல் மும்பை மருத்துவமனையில், பயணம் இரத்து ?

இந்திய கிரிக்கெட் குழுவின் பயிற்சியாளராக விலக இருக்கும் கிரேக் சாப்பல் நேற்று உடல்நிலை காரணமாக சோதிக்கப் பட்டதைத் தொடர்ந்து இன்று இரவு தனது சிங்கை பயணத்திற்கு முன்பாக பம்பாய் ஆஸ்பிடலில் வழக்கமான சோதனைகளுக்காக சேர்க்கப் பட்டார். அவரை அங்கு அழைத்துவந்த டாக்டர் அசோக் கிருபளானியும் மருத்துவமனை ஊடகதொடர்பாளரும் நிருபர்களிடம் அவர் அனுமதிக்கப் படவில்லை, வழமையான சோதனைதான் என்பதை வலியுறுத்தினர். சோதனைகளின் முடிவைப் பொறுத்தே இன்றிரவு அவர் பயணம் செய்வாரா என்பதை மரு. கிருபளானி முடிவு செய்வார்.

The Hindu News Update Service

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா முன்னிலை.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா முன்னிலையில் உள்ளது. டெல்லி மாநகராட்சி தற்போது காங்கிரஸ் வசம் உள்ளது. 272 உறுப்பினர்களை கொண்ட மாநகராட்சிக்கான தேர்தல் கடந்த வியாழக்கிழமை நடந்தது.மாநகராட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரசும், அதை கைப்பற்ற பாரதிய ஜனதாவும் களம் குதித்தன. 200க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி மாநகராட்சியை கைப்பற்றுவோம் என்று பாரதியஜனதா நம்பிக்கை தெரிவித்திருந்தது.

தமிழ்ப் புத்தாண்டில் வெளிவரும் படங்களை 4 மாவட்டங்களில் திரையிடுவதில்லை

'தமிழ்ப் புத்தாண்டில் வெளிவரும் படங்களை 4 மாவட்டங்களில் திரையிடுவதில்லை': திரையரங்க உரிமையாளர் சங்கம் முடிவு:

சேலம் திரைப்பட விநியோகஸ்தர்கள் கவுன்சில் தருமபுரி நகர திரையரங்குகளுக்கு புதிய படங்களை வழங்க மறுத்து வருகிறது. அதனால் சேலம் திரைப்பட விநியோகஸ்தர்கள் கவுன்சிலின் சர்வதிகாரப் போக்கை கண்டித்து வரும் தமிழ்ப் புத்தாண்டில் வெளிவரும் புதிய திரைப்படங்களை

  • சேலம்,
  • தருமபுரி,
  • கிருஷ்ணகிரி மற்றும்
  • நாமக்கல்
மாவட்டத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளில் திரையிடுவதில்லை என முடிவு செய்கிறோம்.

அடித்து நொறுக்கப்பட்டது அதிமுக எம்.எல்.ஏ. வீடு

தந்தை, தங்கை கணவர் மீது தாக்குதல்; ஓரத்த நாட்டில் பதற்றம்: போலீஸார் குவிப்பு

ஒரத்தநாடு, ஏப். 7: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்த நாட்டில் அதிமுக பேரவை உறுப்பினர் வி.பி. கலைராஜனின் வீடு மர்ம கும்பலால் வியாழக்கிழமை நள்ளிரவு அடித்து நொறுக்கப்பட்டது.

அதிமுக தென்சென்னை மாவட்டச் செயலராகவும், தி. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ளவர் வி.பி. கலைராஜன். இவரது தந்தை வீடு ஒரத்தநாடு கம்மாளத் தெருவில் உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு 20 பேர் கொண்ட மர்ம கும்பல் கலைராஜனின் வீட்டுக்கு காரில் வந்தது. அக்கும்பல் அரிவாள், கட்டை மற்றும் கிரிக்கெட் மட்டை ஆகியவற்றைக் கொண்டு வீட்டின் முன்புறம் இருந்த ஓடுகள், மோட்டார் சைக்கிள், சைக்கிள் ஆகியவற்றைச் சேதப்படுத்தியது.

அப்போது வெளியே வந்த பட்டுசாமியையும் குமரவேலுவையும் இக்கும்பல் கட்டையால் தாக்கியது. இதில் இருவரும் காயமடைந்தனர். சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் வெளியே வந்தவுடன் அக்கும்பல் தப்பியோடியது.

வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவையில் அதிமுக எம்.எல்.ஏ. கலைராஜன் செருப்பைத் தூக்கிக் காட்டியதாகவும் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி

☈ காந்தி அமைதி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவள்ளூர், ஏப். 7: காந்தி அமைதி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ரன்வீர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காந்தியை நினைவு கூரும் வகையில் அவர் பெயரில் பெருமைமிக்க அமைதி விருது 1995-ம் ஆண்டு முதல் இந்திய அரசால் வழங்கப்படுகிறது.

பிரதமர் தலைமையிலான குழு ஆண்டுதோறும் விருதுக்கு உரிய நபரை தேர்ந்தெடுத்து சிறப்பித்து வருகிறது.

அந்த வகையில் 2006-ம் ஆண்டுக்குரிய காந்தி அமைதி விருது பெற சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் வன்முறை இல்லாத வகையில் அல்லது காந்திய வழியில் சமூகநீதி, மதநல்லிணக்கத்துக்கு அரும்பாடுபட்ட தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தாங்கள் கடந்த 10 ஆண்டுகளில் ஆற்றிய பணிகளை விவரமாக தொகுத்து எழுதி ஆட்சியருக்கு அனுப்பலாம்.

தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்டு தமிழக அரசு மூலமாக இந்திய அரசுக்கு வரும் 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.

எனவே, காந்தி அமைதி விருதுக்கு மனு செய்ய விரும்பும் தனிநபர்கள், நிறுவனங்கள் காந்திய வழியில் தாங்கள் ஆற்றிய பணிகளை தொகுத்து உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

☈ வாண வேடிக்கையில் விபரீதம் : ஆட்டோ வெடித்து மூவர் பலி

குடியாத்தம் அருகே வாண வேடிக்கையில் விபரீதம் : ஆட்டோ வெடித்து மூவர் பலி

வேலூர்: குடியாத்தம் அருகே, கோயில் திருவிழாவில் நடந்த வாண வேடிக்கை நிகழ்ச்சியில், ஆட்டோ வெடித்து சிதறியதில் மூவர் இறந்தனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ளது சென்றாம்பள்ளி கிராமம். ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் கோயில் திருவிழா நடந்து வருகிறது. அதையொட்டி இரவு பூப்பல்லக்கு விழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், விழாவில் பங்கேற்றனர். பல்லக்கு ஊர்வலத்தின் முன்னணியில், ஆட்டோவில் வர்ண விளக்கு, மைக் செட் கட்டி, அறிவித்தபடி சென்றனர். அப்போது பக்தர்கள், வாண வேடிக்கை நிகழ்ச்சி நடத்தினர். கண்ணை கவரும் ஒளி வெள்ளத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின. வெடித்த பட்டாசுகளில் ஒன்று, பல்லக்கு ஊர்வலத்தில் சென்ற ஆட்டோ மீது விழுந்தது. பட்டாசு விழுந்து தீப்பற்றிய அடுத்த சில வினாடிகளில், ஆட்டோ வெடித்து சிதறியது. அந்த விபத்தில் ராமாலை கிராமத்தை சேர்ந்த அசோக் (40) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 15 பேர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ராஜாகோவில் பகுதியை சேர்ந்த ஆஷாக் (12), குடியாத்தத்தை சேர்ந்த சண்முகம் (32) ஆகியோர் பலியாகினர். இந்த சம்பவத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கலாம் என்றும், சாவு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

☈ உத்தரபிரதேசத்தில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று

உத்தரபிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்பதற்கான பலப்பரீட்சை இன்று துவங்குகிறது. சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது.

13 மாவட்டங்களில் பரவியுள்ள 62 தொகுதிகளில் நடக்கும் ஓட்டுப்பதிவு அசம்பாவிதம் இல்லாமல் நடக்க மத்திய படையினர் உட்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் சென்றும் ஓட்டுப்பதிவு நடவடிக்கைகளை தேர்தல் அதிகாரிகள் பார்வையிட உள்ளனர். முதல்வர் முலாயம் சிங்கின் அரசியல் எதிர்காலம் உட்பட பலரின் தலைவிதி இன்றைய தேர்தலில் முடிவாகும்.உ.பி.,யில் மொத்தமுள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. இறுதிக் கட்ட ஓட்டுப்பதிவு அடுத்த மாதம் 8ம் தேதி நடக்கிறது

-o❢o-

b r e a k i n g   n e w s...