.

Thursday, August 16, 2007

சிங்கப்பூரில் 'புதிய நிலா' 10ம் ஆண்டு விழா

சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் புதிய நிலா மாத இதழின் 10வது ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது.

மஸ்கட் தெருவில் (அரபு தெரு அருகில்) உள்ள சுல்தான் பள்ளிவாசல் இணை மண்டபத்தில் மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது.

தமிழறிஞர் டாக்டர் சுப.திண்ணப்பன் தலைமை தாங்குகிறார். சிங்கப்பூர் நாணய மாற்று வணிகர் சங்க பொதுச் செயலாளர் எம்.ஒய். முகம்மது ரபீக், மா.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்வேள் நற்பணி மன்ற பொதுச்செயலாளர் எம். இல்யாஸ் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

புதிய நிலா பத்தாம் ஆண்டு நிறைவு தொகுப்பு நூலை திராவிடர் கழக தலைவர் டாக்டர் கி.வீரமணி வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.

தொலைக்காட்சிப் படைப்பாளர் அ. முகம்மது அலி , சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆங்கில இலக்கிய பேராசிரியர் டாக்டர் சித்ரா சங்கரன், பன்னூலாசிரியர் டாக்டர் சையத் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார்.

புதிய நிலா இதழின் சிறப்பாசிரியர் மு.ஜகாங்கீர் ஏற்புரை மற்றும் நன்றியுரையினை நிகழ்த்துகிறார்.

இந்த விழா தொடர்பாக முதல்வர் கருணாநிதி வாழ்த்துரை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தியில், இதழ் பணி என்பது மிகுந்த பொறுப்பு வாய்ந்தது. உண்மைச் செய்திகளை சமுதாய நன்மைக்காக நெஞ்சுரத்துடனும், நடுவு நிலையுடனும் வெளியிடுவது நாட்டில் நேர்மையும் நியாயமும் நிலைக்கச் செய்யும் திருப்பணியாகும். அற வழியில் மக்களை ஆற்றுப்படுத்திடும் அறப்பணியாகும்.

இப்பணியில் பத்தாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது இதழ் நடத்துவோருக்கு பெருமை சேர்ப்பதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய நிலா இதழின் முகவரி : புதிய நிலா
390 விக்டோரியா தெரு
#01 - 11 கோல்டன் லேண்ட்மார்க் எஸ் சி
சிங்கப்பூர் 188061
தொடர்புக்கு : 9007 2961

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...