.

Sunday, July 1, 2007

"TCS" க்கு வாழ்த்துக்கள்

TCS நிறுவனம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து இந்த நடப்பு ஆண்டில் சுமார் 1006 மாணவர்களை நேர்முகத் தேர்வின் மூலம் பணி அமர்த்திருக்கிறது. இது இந்தியாவிலேயே ஒரு புதிய சாதனை.

"மேலும் செய்திக்கு CNN IBN TV.."

விமான நிலையம் மீது தாக்குதல் - இங்கிலாந்தில் பரபரப்பு.

பிரித்தானிய மாகாணங்களுள் ஒன்றான ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கார் தாக்குதல் நடத்தினர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையத்திற்குள் ஒரு கார் படு வேகமாக வந்தது. அந்தக் காரை பாதுகாவலர்கள் நிறுத்த முயன்றனர். ஆனால் பாதுகாவலை மீறிக் கொண்டு அந்தக் கார் படுவேகமாக நுழைவாயிலை நோக்கி விரைந்தது.

வந்த வேகத்தில் நுழைவாயில் சுவற்றில் மோதி நின்றது. அடுத்த விநாடியே கார் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காரில் வந்தவர்கள் தற்கொலைப் படைத் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற தகவல் பரவியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தக் காரைச் சுற்றிலும் போலீஸார் குவிந்தனர். அங்கிருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேயற்றப்பட்டனர்.

தீப்பிடித்து எரிந்த காரிலிருந்து குதித்த இருவரும் உயிர் தப்பிவிட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் தெற்காசியர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் ஒருவரின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்னொருவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த இந்த திடீர் சம்பவத்தால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.

நேற்று முன் தினம் தான் லண்டனில் குண்டுகளுடன் நிறுத்தப்பட்ட கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.

இந் நிலையில் கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் கார் குண்டு மற்றும் கிளாஸ்கோ தாக்குதல் குறித்து லண்டன் மாநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இரு சம்பவங்கள் தொடர்பாகவும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனில் கார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கும், கிளாஸ்கோ தாக்குதலுக்கும் தொடர்புகள் உள்ளன. இது தீவிரவாத தாக்குதல் என்று கூற முடியும்.

விமான நிலையத்தில் மோதியவர்களில் ஒருவர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளார். அவரது உடலில் சந்தேகத்திற்கிடமான ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டது. அது தற்கொலைப் படையினர் அணியும் ஜாக்கெட்டாகவும் இருக்கலாம். அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதும் அந்த நபர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலிருந்து ஊழியர்கள், நோயாளிகள் இடம் மாற்றப்பட்டனர். பின்னர் உடலிலிருந்து அந்தக் கருவி எடுக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது என்றார்.

இதற்கிடையே செஷையர் பகுதியில் ஒரு பெண் உள்பட 3 பேர் இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் முஸ்லீம் என்று நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். போலீஸார் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து இவர்கள் இருவரும் வந்த காரை மடக்கி இருவரையும் கைது செய்தனர்.

இருப்பினும் இந்தக் கைது குறித்த முழு விவரத்தையும் காவல்துறை வெளியிடவில்லை.

இந்த இரு சம்பவங்களையும் தொடர்ந்து இங்கிலாந்து முழுவதும் பாதுகாப்பு நிலை உச்சகட்ட அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

நன்றி: தட்ஸ் தமிழ்

கர்நாடகம்: கள் சாராய விலக்கு நடைமுறைபடுத்தப்பட்டது.

ஜூலை 1-ந்தேதி (இன்று) முதல் கள், சாராய கடைகள் மூடப்படும் என்று கர்நாடக மாநில துணை முதல்-மந்திரியும் நிதிமந்திரியுமான எடியூரப்பா அறிவித்திருந்த படி இன்று காலை 10 மணி முதல் கள்-சாராய விற்பனை நிறுத்தப்பட்டது.

இதனிடையே கள் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், மாநிலம் முழுவதும் 4 லட்சம் தொழிலாளர்கள் கள் சாராய விற்பனை மூலம் வாழ்க்கை நடத்தி வந்தனர். அவர்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்யாமல் கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கள் விற்பனைக்கு தொடர்ந்து அனுமதி தர வேண்டும் என்று கேட்டு இருந்தனர்.

இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அரசுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பி உள்ளார்.

"சிவாஜி" படத்தில் நடித்த துணை நடிகர் கொலை

போரூர் ஏரிக்கரை பகுதியில் வசித்து வந்தவர் ஜீவா (35) இவர் `சிவாஜி', "வசந்தம் வந்தாச்சு" உள்பட ஏராளமான படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

அவர் தனது நண்பர் செல்வராஜுடன் வட பழனி பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 3 பேர் கும்பல் இருவரையும் குண்டு கட்டாக தூக்கி ஆட்டோவில் வைத்து கடத்தி சென்றது. சிறிது தூரம் சென்றதும் செல்வராஜை அந்த கும்பல் அடித்து கீழே தள்ளியது. ஜீவாவுடன் ஆட்டோ மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது.

மறுநாள் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் "ஜீவாவை முடித்து விட்டோம்'' என்றும் வெளியில் சொன்னால் உன்னையும் முடித்து விடு வோம் என்றும் செல்வராஜை மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போய் செல்வராஜ் இது பற்றி யாரிடமும் கூறாமல் இருந்தார். நேற்று மேற்கண்ட விபரத்தை புகாராக எழுதி விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் அழகேசனிடம் கொடுத்தார்.

அவரோ கடத்தல் என்பதெல்லாம் நாடகமாக இருக்கும்'' என கூறி ஜீவா காணா மல் போய் விட்டார் என வழக்குப் பதிவு செய்துள்ளார். இதற்கிடையே கடந்த 27-ந் தேதி ஜீவா கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு நந்தம்பாக்கம் அருகே மணப்பாக்கம் ராணுவ சுடுகாட் டில் பிணமாக கிடந்தார். அவரது பிணத்தை கைப்பற்றி போரூர் ராமச்சந்திரா ஆஸ் பத்திரிக்கு அனுப்பிய நந் தம்பாக்கம் போலீசார் ஜீவா மர்மமான முறையில் மரணமடைந்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பதை கூட விசாரிக்க மனமில்லாமல் ஜீவா வழக்கை கிடப்பில் போட்டனர். அக்கம் பக்கத்து காவல் நிலையத்துக்கு கூட இப்படி ஒரு ஆண் நபர் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கிறார் என அந்த தகவலை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஜீவாவின் நண்பர் செல்வராஜுக்கு ஜீவா மணபாக்கம் சுடுகாட்டில் கொலை செய்து வீசப்பட்டுள்ள தகவல் கிடைத்தது. இவராக போய் நந்தம் பாக்கத்தில் விசாரித்த பின்னர் தான் சுடுகாட்டில் பிண மாக கிடந்தவர் ஜீவா என்றும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீசுக்கு தெரிய வந்தது. தாமதமாக விழித்துக் கொண்ட நந்தம்பாக்கம் போலீசார் இது பற்றி விசாரணையை தொடங்கி உள்ளனர்.கொலை தொடர்பாக நந்தம்பாக்கம் போலீஸ்காரர் ஒருவர் கூறும் போது:-

ஜீவா கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்தால் குற்றவாளியை பிடிக்க வேண்டும், கோர்ட்டு வழக்கு என அலைய வேண்டும் அதனால் அனாதை பிணம் என்று கணக்கு காட்டி எரித்து விட முடிவு செய்தனர். ஆனால் கடைசி நேரத்தில் செல்வராஜ் தந்த தகவலால் ஜீவா வழக்கை விசாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு இங்குள்ள போலீஸ் அதிகாரிகள் கவனமில்லாமல் உள்ளனர் என்றார்.

நன்றி: மாலைமலர்

பர்தா சர்ச்சை: மறுப்பு வெளியிட்டார் பிரதீபா

"பர்தா அணிவதிலிருந்து முஸ்லிம் பெண்கள் வெளிவர வேண்டும்' என்று பேசி சர்ச்சையில் சிக்கிய பிரதீபா பாட்டீல், எதிர்பார்த்தபடி தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார். தன்னை சந்திக்க வந்த முஸ்லிம் தலைவர்களிடம், "பர்தா என்பது பெண்களுக்கு முகலாயர்கள் அளித்த மரியாதை' என்று தெரிவித்துள்ளார்.

முகலாய படையெடுப்பின் போது, பெண்களை பாதுகாக்க அவர்கள் பர்தா அணிய வைக்கப்பட்டதாகவும், தற்போது அது போன்ற நிலை இல்லாததால், பர்தா பழக்கத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் வெளிவர வேண்டும் என்றும் ஜனாதிபதி தேர்தல் காங்., கூட்டணி வேட்பாளர் பிரதீபா பாட்டீல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார் பிரதீபா பாட்டீல்.

சமீபத்தில் ஜமாயத் உலேமாயே ஹிந்த் மவுலானா அர்ஷத் தானி, காங்., மூத்த தலைவர் ஹசன் அலி, டில்லி மேயர் தலத் சுல்தான் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள், பிரதீபா பாட்டீலை சந்தித்து பேசினர்.அப்போது, இந்தியாவின் மேம்பாட்டில் முஸ்லிம் தலைவர்களின் பங்களிப்பை திரும்பத் திரும்ப வெகுவாக பாராட்டினார் பிரதீபா. முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும் விஷயத்தில், தான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.தொடர்ந்து, "முகலாயர்கள் பெண்களுக்கு பெரிதும் மதிப்பும் மரியாதையும் அளித்தனர். பர்தா என்பது பெண்களுக்கு முகலாயர்கள் அளித்த மரியாதை தான்' என்று கூறினார்



தினமலர்

திருமாவளவன் படப் பிரச்னை தீர்ந்தது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போராளியாக நடித்துள்ள படம் 'அன்புத்தோழி'. இந்தப் படத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பல காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றிருந்ததால் படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்படவில்லை. இதனால் படம் மேல்முறையீட்டுக்கு சென்றது. அங்கு "அன்புத்தோழி' விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான படம் இல்லை என தயாரிப்பாளர் பிரபாவதியும், இயக்குநர் எல்.ஜி.ரவிச்சந்திரனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கமளித்தனர்.

இதையடுத்து 12 உறுப்பினர்கள் கொண்ட ரிவைசிங் கமிட்டி படத்தை வெள்ளிக்கிழமை பார்த்தது. 'ஈழம்', 'வெறியாட்டம்' போன்ற வார்த்தைகளையும், சில காட்சிகளையும் நீக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதை தயாரிப்பு தரப்பு ஏற்றுக்கொள்ளவே படத்துக்கு "யு' சான்றிதழ் வழங்கப்பட்டது. படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

தினமணி

முன்னெச்சரிக்கை கண்காணிப்பு: யு.எஸ். கப்பலால் அணுக் கதிர்வீச்சு ஏற்படுமா?

சென்னை துறைமுகத்துக்கு ஜூலை 2-ம் தேதி வரவுள்ள "யு.எஸ்.எஸ். நிமிட்ஸ்' கப்பலில் இருந்து அணுக் கதிர்வீச்சு வெளியாகிறதா என்பதை மூன்று இடங்களில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத் தலைவர் டாக்டர் ஏஆர். ரெட்டி தெரிவித்தார்.

சென்னை வரவுள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பல் "நிமிட்ஸ்' குறித்து சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியது:

"நிமிட்ஸ்' கப்பலில் இருந்து கதிரிவீச்சு வெளியாகிறதா என்பதைக் கண்காணிக்க, அந்தக் கப்பலைச் சுற்றி ரோந்து கப்பல் ஒன்று பணியில் ஈடுபடுத்தப்படும். துறைமுகத்தில் இருந்தபடியும் ஒரு குழு கப்பலைக் கண்காணிக்கும். மேலும் இரண்டு மொபைல் ஆராய்ச்சிக் கூடங்கள் கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இதோடு மண், நீர், காற்று, உணவு ஆகியவற்றிலும் கதிர்வச்சு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தச் சோதனை கப்பல் வருவதற்கு முன், கப்பல் வந்தபின் மற்றும் கப்பல் சென்றபின் என மூன்று முறை நடத்தப்படும்.

"நிமிட்ஸ்' கப்பல் நிற்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு வேறு கப்பலோ, படகுகளோ அனுமதிக்கப்படாது.

இந்தக் கப்பலில் 190 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. இது கப்பலை இயக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கல்பாக்கத்தில் 220 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் குடியிருப்புகள் உள்ளன. இதனால் எந்த பாதிப்பு ஏற்பட்டதில்லை.

"நிமிட்ஸ்' கப்பல் துறைமுகத்திலிருந்து 3.7 கிலோ மீட்டர் (இரண்டு கடல் மைல்கள்) தொலைவில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது. இதுவரை 10 வெளிநாட்டு அணு ஆயுதப் போர் கப்பல்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்தக் கப்பல்களால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்றார் அவர். தமிழ்நாடு கப்பல்படை அலுவலர் (பொறுப்பு) வான் ஹால்டன் கூறியது: ஜூலை 2-ம் தேதி வரும் இந்தக் கப்பலில் 450 உயர் அதிகாரிகளும், 5,000 ஊழியர்களும் உள்ளனர். இந்தக் கப்பல் 5-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது.

அரசு அனுமதியின் பேரிலேயே இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வருகிறது. போதுமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி

வீண் வாதம் செய்கிறார் பொன்முடி: ராமதாஸ்

கல்லூரிக் கட்டண விவகாரத்தில் அமைச்சர் பொன்முடி நடவடிக்கை எடுக்காமல் வீண் வாதம் செய்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், சுயநிதிக் கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம்தான் உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

"இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) போன்ற கமிட்டிகளிடம்தான் கூடுதலான அதிகாரம் குவிந்துள்ளது. அதை எதிர்த்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் போரிட்டால், முதல்வரின் அனுமதியுடன் நானும் அதில் பங்கேற்பேன்" என்று உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் ராமதாஸ் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டபடி, மத்திய அரசின் நிறுவனங்களுக்கும், சுயநிதிக் கல்லூரிகளின் கட்டண நிர்ணயத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கட்டாய நன்கொடையை தடுப்பதற்கும் அந்த நிறுவனங்களின் பணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதோடு அந்த நிறுவனங்களின் பணி முடிந்து விடுகிறது. கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் தான் உள்ளது.

2002-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அது தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் 2003-ம் ஆண்டில் குழுக்கள் அமைக்கப்பட்டு கட்டணம் நிர்ணயித்து அரசாணையும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

கட்டண நிர்ணயம் தொடர்பாக, மாநில அரசிடம் எதுவுமே இல்லை என்பதைப் போல, அமைச்சர் சொல்லியிருக்கிறார். அதிகாரம் இல்லாமலா 1992-ம் ஆண்டில் நன்கொடை தடைத் சட்டத்தை (ஜெயலலிதா தலைமையிலான) மாநில அரசு கொண்டு வந்தது.

மக்கள் சிரிக்க மாட்டார்களா? இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லும்போது மட்டும் எங்களிடம் அதிகாரம் இல்லை என்பதைப்போல சட்டத்தைக் கொண்டு வந்தவர்களே சொன்னால், அதைக் கேட்டு மக்கள் சிரிக்க மாட்டார்களா?

இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்காமல் மத்திய சுகாதாரத் துறையையும் வம்புக்கு இழுத்து போராடத் தயாரா என்றும் அமைச்சர் பொன்முடி விதண்டாவாதம் செய்திருக்கிறார். கூட்டணி பற்றி உபதேசமும் செய்திருக்கிறார்.

கட்டாய நன்கொடை, கட்டணக் கொள்ளை பற்றி அரசுக்கு புகார்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன. முதல்வரின் தனிப் பிரிவுக்கே இத்தகைய புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

சில குறிப்பிட்ட படிப்பில் தனியார் கல்லூரிகளிடம் இருந்து அரசின் ஒதுக்கீட்டுக்கு உரிய இடம் பெறப்படவில்லை என்றும், அவர்கள் விரும்பிக் கொடுத்த இடத்தை மட்டும் பெற்றுக் கொண்டு திருப்தி அடைந்திருக்கிறார்கள் என்ற விவரம் எல்லாம் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் விரிவாக விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே, அரசுக்கு எதுவுமே தெரியாது என்று அமைச்சர் கூறுவது சுத்தப் பொய்.

யாரும் புகார் கொடுக்கவில்லை என்பதற்காக நாட்டில் நடந்துகொண்டிருக்கின்ற அக்கிரமங்களை எல்லாம் மக்கள் நல அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?

இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக மத்திய அரசை நோக்கி கையைக் காட்டி திசை திருப்புவது எந்த வகையில் நியாயம்.

மத்திய அரசுக்கும், இங்கே மாநிலத்தில் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல அமைச்சர் பொன்முடி வேண்டுமானால் பேசலாம். ஆனால், மக்கள் அதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

முந்தைய சற்றுமுன்...: இராமதாஸ் Vs திமுக: "மத்திய சுகாதாரத்துறையை எதிர்த்து போராடத்தயாரா?"

தினமணி

சக்திவாய்ந்த வெடிபொருள் பறிமுதல்: பெரும் விபத்து தவிர்ப்பு

காஷ்மீரில் அமர்நாத் குகைக் கோயிலுக்கு பெஹல்காம் அடிவார முகாமில் இருந்து செல்லும் வழியில் கானாபல் அருகே சக்திவாய்ந்த வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டு செயலிழக்கப்பட்டது. இதையடுத்து, பெரும் விபத்தும் உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டது.

அனந்த்நாக் டிகிரி கல்லூரி அருகே கேட்பாரற்றுக் கிடந்த ஒரு டிபன் பாக்ஸில் சக்திவாய்ந்த 5 கிலோ வெடிபொருள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அச்சாலையின் இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு வைத்ததற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புதான் காரணம் என்று மாவட்டப் போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் ஜாவீத் அகமது மட்டூ கூறினார்.

தினமணி

UK terror threat now 'critical'

லண்டனின் க்ளாஸ்கோ விமான நிலையத்தில் எரியும் காரை கொண்டு நுழைவாயிலை தகர்த்து இடித்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டனர்.

இரன்டு கார் நிறைய வெடுகுண்டுகள் இருந்ததை நேற்று கண்டுபிடித்து உயிர்சேதத்தைத் தடுத்ததன் தொடர்ச்சியாக இன்று இந்த தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.

மேலும் குண்டுவெடிப்புகள் நிகழலாம் என்று கணிக்கப்படுவதால் நாடெங்கும் தீவிரவாத தயார் நிலையை 'அதி உயர் நெருக்கடிநிலை' என்று பிரகடனம் செய்துள்ளார்கள். இரகசியமாக தகவல் தெரிவிக்க விரும்புவோர், 0800789321 என்னும் எண்ணில் துப்புகளைப் பகிரலாம்.

BBC NEWS | UK | UK terror threat now 'critical'

இண்டர்நெட்டில் செக்ஸ் - சென்னைக்கு 2-வது இடம்

சென்னை, ஜுன். 30-

இண்டர்நெட்டில் செக்ஸ் தகவல்களை தேடும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் எந்த நாட்டில், எந்த நகரங்களில் கூக்லி இணைய தளம் மூலம் செக்ஸ் தகவல்கள் அதிகம் தேடப்படுகின்றன என்ற புள்ளி விபரம் "கூக்லி சர்ச் டிரெண்ட்'' மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் உலகிலேயே பாகிஸ்தான் நாட்டில்தான் இண்டர்நெட் மூலம் செக்ஸ் தகவல் தேடுவோர் அதிக எண்ணிக்கை யில் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இதற்கு அடுத்த 2-வது இடத்தில் எகிப்த் நாடும், 3-வது இடத்தில் இந்தியாவும் உள்ளன. துருக்கி, வியட்நாம், மொராக்கோ, ஈரான், சவுதி அரேபியா, செர்பியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் முறையே 4 முதல் 10 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளன.

உலக நகரங்கள் அளவிலான பட்டியலில் புதுடெல்லி முதலிடத்தையும், சென்னை 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. 3-வது இடத்தை எகிப்து நாட்டின் முக்கிய நகரமான கெய்ரோ பிடித்துள்ளது.

இஸ்தான்புல், அன்காரா, ராபர்ட், மும்பை, வர்சா ஆகிய நகரங்கள் முறையே அடுத்த டுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

நன்றி: மாலை மலர்

Saturday, June 30, 2007

சிங்கப்பூருக்கு இரயிலில் போகலாம்!

சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கும், யாங்கூன், டெஹ்ரான், ஏன் துருக்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நகரங்களுக்கும் இரயிலில் செல்லும் கனவு மிகச்சில வருடங்களிலேயே நனவாக வாய்ப்பிருப்பதாக இச்செய்தி தெரிவிக்கிறது.

நியூயார்க்கில் இது தொடர்பான ஒப்பந்தத்தில் இரயில்வே போர்டு தலைவர் ஜே.பி.பத்ரா கையெழுத்திட்டுள்ளார்.

ஜெ.விவகாரம்: தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி குற்றச்சாட்டு

4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த வழக்கில் ஜெயலலிதா மீதான புகார் கேட்பாரற்று போய்விடுமோ என சந்தேகப்படுகிறேன் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

வெற்றிக்கு சிறப்பு

கேள்வி:- கள்ள ஓட்டு புகார் சொல்ல முடியாத அளவிற்கு மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்று, மத்திய அரசின் காவல் துறையினரே பொறுப்புகளை வகித்து இந்த இடைத்தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. உங்கள் அணிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கின்றது. இது உங்கள் ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்:- கள்ள ஓட்டு புகார் எந்த இடத்திலும் ஏற்படவில்லை. எந்தப் பத்திரிகைகளிலும் அப்படியொரு செய்தி வரவில்லை. கள்ள ஓட்டு புகார் மாத்திரமல்ல, எந்தப் புகாரும் இல்லாமல் இந்தத் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. தேர்தல் கமிஷன் ஒரு வகையிலே சிந்தித்துச் செயல்பட்டாலும், அந்தச் சிந்தனையும் செயலும் எங்கள் அணியின் வெற்றிக்கு சிறப்பைத் தேடிக் கொடுத்திருக்கின்றன.

செயற்கையிலே தான்

கேள்வி:- இது செயற்கையான முடிவு என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

பதில்:- உலகத்திலேயே நீங்கள், நான் எல்லோருமே செயற்கையிலே தான் பிறக்கிறோம். அதிகார துஷ்பிரயோகம், சதி, அராஜகம், ராவணன், கம்சன், இரணியன் போன்ற ஜெயலலிதாவின் இலாகாக்கள் முழுவதும் அவரது அறிக்கையிலே சொல்லப்பட்டுள்ளது.

மீண்டும் அந்தப் பதவிகளில்

கேள்வி:- தேர்தல் ஆணையத்தால் மதுரையிலிருந்து மாற்றப்பட்ட அதிகாரிகள் எல்லாம் மீண்டும் அந்தப் பதவிகளிலே அமர்த்தப்படுவார்களா?

பதில்:- ஏற்கனவே அப்படி பழைய காலத்தில் நடைபெற்றிருக்கிறது. தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்தினால் மாற்றப்பட்ட அதிகாரிகள் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் அந்தப் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இப்போது தேர்தல் பணிகள் முடிவுற்றதும், அதற்கான அறிவிப்பு வந்த பிறகு அரசு அதைப்பற்றி யோசிக்கும்.

ஜெயலலிதா அறிக்கை

கேள்வி:- தேர்தல் களத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் எல்லாம் முழு மூச்சுடன் உங்களை எதிர்த்தன. இதையெல்லாம் விட தேர்தல் ஆணையமே கடும் எதிர்ப்பைக் காட்டியது. இப்படி எல்லா பக்கங்களிலிருந்தும் வந்த எதிர்ப்பினை மீறி நீங்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருந்த போதிலும், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் இது உண்மையான வெற்றியல்ல என்றும், வாக்காளர்கள் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார்கள் என்று அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரே?

பதில்:- (செய்தியாளர்களிடம் காட்டி) இது ஜெயலலிதா அறிக்கை. அதில் உண்மை எப்படி வெளி வந்திருக்கிறது என்பதைப் பாருங்கள். "மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வந்துள்ள முடிவு எதிர்பார்த்தது தான்'' - ஆக இவர்கள் இந்த முடிவினை எதிர்பார்த்துத் தான் இருந்திருக்கிறார்கள். மேலும் அறிக்கையிலே சொல்கிறார், "இப்போது வந்துள்ளது மக்கள் தீர்ப்பு அல்ல, இது. தி.மு.க.வினரின் திட்டமிட்ட சதி. நியாயமாகத் தேர்தலை நடத்தி இருந்து அதில் அ.தி.மு.க. இயல்பாக வெற்றி பெற்றிருந்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.'' இந்த அறிக்கையில் அவரே கையெழுத்திட்டுள்ளார்.

அழகிரிக்கு பதவி?

கேள்வி:- இந்த இடைத் தேர்தல் வெற்றிக்கு முழு முதல் காரணம் அழகிரி என்று அனைவருமே கூறுகிறார்கள். எனவே அவருக்கு கட்சியிலே பதவிப் பொறுப்பு ஏதாவது கொடுக்கப்படுமா?

பதில்:- அவருக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள்.

கேள்வி:- வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மகத்தான வெற்றி. அவரது வெற்றிக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்தீர்கள். ஆனால் எல்லா எதிர்க்கட்சிகளும், ஏன் தேர்தல் ஆணையம் கூட உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் குறி வைத்துத் தாக்குகிறார்களே?

பதில்:- அதில் நான் பெருமையடைகிறேன். நானும் என்னுடைய குடும்பத்தினரும் அதற்காக பெருமையடைகிறோம்.

உணர்ந்து செயல்படுவோம்

கேள்வி:- இந்த வெற்றியின் மூலமாக ஆட்சிக்கு கூடுதலாகப் பொறுப்பு தரப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?

பதில்:- மக்கள் பொதுத் தேர்தல் நேரத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதை கண்கூடாகப் பார்க்கிறார்கள். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் எங்கள் அணிக்கு வெற்றியைத் தந்துள்ளார்கள். தொடர்ந்து இதனைக் கட்டிக் காக்கும் பொறுப்பு எங்கள் அணிக்கு இருப்பதை உணர்ந்து செயல்படுவோம்.

விஜயகாந்த் கட்சிக்கு கூடுதல்

கேள்வி:- விஜயகாந்த் கட்சிக்கு கடந்த தேர்தலில் கிடைத்ததை விட இந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்களே?

பதில்:- எனக்குத் தெரியாது. நான் அந்தக் கணக்கைப் பார்க்கவில்லை.

கேள்வி:- இன்று காலையில் வெளிவந்த "ஆனந்த விகடன்'' பத்திரிகையில் தலையங்கத்தில் வெற்றி மட்டுமல்ல, அதை அடைகின்ற வழியும் முக்கியம், காங்கிரஸ் வெற்றி பெற்றால் கூட, அது பெருமையடையத் தக்க வெற்றி அல்ல என்று எழுதியிருக்கிறார்களே?

பதில்:- இதற்கு இன்று திராவிடக் கழகத் தலைவர் வீரமணி விடுதலையில் விளக்கமாக பதில் எழுதியிருக்கிறார்.

காங்கிரசுக்கு கூடுதல் இடம்

கேள்வி:- சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக ஒரு இடம் கிடைக்கச் செய்திருக்கிறீர்கள். இதற்கு மேலிடத்திலிருந்து நன்றி தெரிவித்திருக்கிறார்களா?

பதில்:- வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

4 இடங்களில் போட்டி

கேள்வி:- சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நான்கு இடங்களில் போட்டியிட்டது பற்றி நடைபெறும் வழக்கில், நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்ட பிறகும், தேர்தல் ஆணையம் நேரடியாக நடவடிக்கை எடுக்காமல், அந்தத் தீர்ப்புக்கு விளக்கம் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து, அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதைப் பற்றி?

பதில்:- நீதி மன்றத்தில் இது போன்ற ஒரு விளக்கத்தைக் கேட்க ஒரு வழக்கறிஞர் முற்பட்டதற்கு அடிப்படை காரணம் என்ன என்பது அறியப்பட வேண்டிய ஒன்று. இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் சார்பில் இது போன்ற விளக்கங்களைக் கேட்பது - அதே நீதி மன்றத்தில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், எம்.பி., எழுப்பிய கேள்வியில் காணப்படும் ஐயப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

தி.மு.க.வுக்கு எதிராக

கேள்வி:- தேர்தல் ஆணையம் தொடர்ந்து தி.மு.கழகத்திற்கு எதிராகவும், ஜெயலலிதாவைக் காப்பாற்றுகின்ற முயற்சியிலும் ஈடுபடுவதற்கான காரணம் என்ன?

பதில்:- அது இன்று நேற்றல்ல. பொதுத் தேர்தலுக்கு முன்பே பொன்னேரி தொகுதியில் 20 ஆயிரம் போலி வாக்குகள் சேர்க்கப்பட்டு, அது வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு - அந்த உண்மையைக் கண்டறிந்த பிறகு, அந்தப் பகுதியின் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாஸ்கர் சுந்தரம், அந்த விவரங்களை என்னிடத்திலே ஆதாரத்துடன் கொண்டு வந்து காட்டி விளக்கினார். நான் உடனடியாக அவரையும், தி.மு.கழக தலைமைக் கழகத்தில் உள்ளவர்களையும் தமிழகத் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தாவிடம் அனுப்பி வைத்து விவரங்களைக் கூறுமாறு சொன்னேன். அவர் அந்தப் புகாரை ஏற்றுக் கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி பல புகார்கள் தி.மு.க. கூட்டணியினரால் தரப்பட்டவை கேட்பாரற்றுப் போய் விட்டன. அந்த வரிசையில் தான் நான்கு இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்த விவகாரம் இடம் பெறுமோ என்று சந்தேகப்படுகிறேன்.

தி.மு.க.வாக இருப்பது தான்

கேள்வி:- தேர்தல் ஆணையத்திற்கும், தி.மு.கழகத்திற்கும் இடையே இப்படிப்பட்ட உரசல் நடப்பதற்கு என்ன காரணம்?

பதில்:- நாங்கள் தி.மு.கழகமாக இருப்பது தான்!

ராமதாஸ் போராட்டம்

கேள்வி:- டாக்டர் ராமதாஸ் கோட்டைக்குள்ளே வந்து உங்கள் அனுமதியோடு சுயநிதி கல்லூரிகள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து போராடப் போவதாக அறிவித்திருக்கிறாரே, அதற்கு இன்று அமைச்சர் பொன்முடி கூட அது மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குட்பட்டது, எனவே டெல்லியில் போராடலாம் என்று கருத்து தெரிவித்திருக்கிறாரே?

பதில்:- "கோட்டைக்குள்ளேயே என் கால் படாது'' என்று ஒரு முறை சத்தியமே செய்திருக்கிறார், டாக்டர் ராமதாஸ். இப்போது பட்டால், அது வரவேற்கப்பட வேண்டியது தானே. ஆனால் எதற்காக என்பது பிரச்சினை. அதற்கு தான் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்திருக்கிறார்.

கேள்வி:- சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிகமாக கட்டணம் வாங்கப்படுவதாக டாக்டர் ராமதாஸ் சொல்கிறார். அதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை. யாரும் அப்படிப்பட்ட புகார் கூறுவதில்லை என்று பொன்முடி சொல்கிறார். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அப்படி அதிகக் கட்டணம் கொடுப்பவர்கள், புகார் கொடுத்தால், ஆதாரங்களோடு புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அமெரிக்க கப்பல்

கேள்வி:- அணுசக்தி கப்பல் ஒன்று அமெரிக்காவிலிருந்து சென்னை வருவதைப் பற்றி பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசு என்ன செய்யப்போகிறது?

பதில்:- மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரச்சினை இது. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. அது குறித்து போராட்ட அறிவிப்புகளும் வருகின்றன. நாங்கள் இன்னும் அதுபற்றி எங்கள் உயர் நிலைக் குழுவில் சிந்திக்கவில்லை.

கேள்வி:- குடியரசு தலைவர் தேர்தல் உங்கள் கூட்டணி சார்பாக போட்டியிடும் பிரதீபா பட்டீல் அவர்கள் மீது ஊழல் புகார்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே?

பதில்:- பிரதமரே அதை மறுத்திருக்கிறார்.

கேபிள் டி.வி. அரசுடமை?

கேள்வி:- டாக்டர் ராமதாஸ் அரசு சார்பில் கேபிள் நெட் ஒர்க் ஆரம்பிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறாரே?

பதில்:- இதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறதா? மாநில அரசுக்கு இருக்கிறதா? என்பதே கேள்விக் குறியாக உள்ளது. மத்திய மந்திரி ராஜா, அது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்கிறார். எனவே இதை ஆராய்ந்து - அது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு வந்தால், அதைத் தேசியமயமாக்குவதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவோம்.

தீவிரவாத பயிற்சி

கேள்வி:- தேனியில் 600 மாணவர்களுக்கு தீவிரவாத பயிற்சி கொடுக்கப்பட்டதாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்:- அதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்படுகிறது. நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காஞ்சீபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல்கள் நடைபெற்றன. அப்போது ஆதாரப்பூர்வமாக தேர்தல் விதிமுறை மீறல்கள் எல்லாம் சொல்லப்பட்டன. ஆனால் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் அந்த அளவிற்கு விதிமுறை மீறல்கள் இல்லையே என்று தேர்தல் ஆணையரிடம் நாங்கள் கேட்ட போது, இது குழந்தைத் தனமான வாதம் என்றும், இரண்டையும் ஒப்பிட்டுக் கேட்கக் கூடாது என்றும் கூறியதைப் பற்றி?

பதில்:- அவர் சொன்னது குழந்தைத் தனமா? நீங்கள் சொன்னது குழந்தைத் தனமா என்பதை உங்கள் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்.

துணை ஜனாதிபதி

கேள்வி:- குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிடப் போவதில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். தி.மு.க. போட்டியிடுமா?

பதில்:- தி.மு.க. இதுவரையில் அந்தக் கோரிக்கை வைக்கவில்லை.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

"தினத்தந்தி"

இராமதாஸ் Vs திமுக: "மத்திய சுகாதாரத்துறையை எதிர்த்து போராடத்தயாரா?"

பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு அதிக பணம் வசூல் செய்வதாக குற்றம்சாட்டும் டாக்டர் ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறையை எதிர்த்து போராட தயாரா என்று அமைச்சர் பொன் முடி கேள்வி எழுப்பினார்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வி கட்டணம்

தமிழகத்தில் உயர்கல்வித்துறை இருக்கிறதா? என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். அவருக்கும் உங்களுக்கும் தெரியப்படுத்துவற்காக சில விளக்கங்களை தெரிவிக்க இருக்கிறேன். உயர் கல்வித்துறை மூலம் ஓராண்டில் செயல்படுத்தப்பட்ட முக்கிய சாதனைகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பல்வேறு சங்கடங்கள் இருந்தாலும் ஒரு குழு அமைத்து நுழைவுத்தேர்வை ரத்து செய்தது பெரிய சாதனையாகும். அரசு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான கட்டணத்தை ரூ.12,500-ல் இருந்து ரூ.7,550 ஆக குறைப்பதற்கான நடவடிக்கையை கடந்த கல்வி ஆண்டு முதலே எடுத்து இருக்கிறோம்.

ரூ.27 கோடி ஒதுக்கீடு

அண்ணாபல்கலைக்கழக நிர்வாகம் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக்கில் உள்ள 192 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக்கில் சேரும் முதல் ஆண்டு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் இலவச பாட புத்தகமும் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு கல்லூரிகளில் ஷிப்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டதால் இதுவரை அரசு கல்லூரிகளில் 30 ஆயிரம் மாணவர்கள் படித்து வந்த நிலை மாறி குறைந்த பட்சம் 50 ஆயிரம் மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் கல்வி கட்டணம் அறவே ரத்து செய்யப்பட்டுள்ளது. 542 அரசு கல்லூரிகளில் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமுதாய கல்லூரிகளை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு கல்லூரிகளில் வகுப்பறைகள் கட்டுவதற்காக ரூ.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியாரிடம் 250 பொறியியல் கல்லூரி

கடந்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் 65 சதவீதம் இடங்களையும் சிறுபான்மை பொறியியல் கல்லூரியில் 50 சதவீத இடங்களும் அரசுக்கு ஒதுக்கப்பட்டு நீதிமன்ற சிக்கல் இல்லாமல் பெற்று உள்ளோம். மனசாட்சி உள்ளவர்கள் இதை பாராட்டுவார்கள். ஒரு மூத்த அரசியல்வாதியான டாக்டர் ராமதாஸ், ராமன் குழு உள்ளதா? சுப்பிரமணியம் குழு உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய கமிட்டிகள் நியமிக்கப்படும் வரை இந்த கமிட்டிகள் நடைமுறையில் இருக்கும் என்று ஏற்கனவே பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. 39 சதவீதம் இடம் நிர்வாகத்திற்கு ஒதுக்கப்படும் என்று சட்டம் இயற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தனியாரிடம் மொத்தம் 250 பொறியியல் கல்லூரிகள் உள்ளது.

புகார்கள் வரவில்லை

சென்னையை சுற்றியுள்ள பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பரவலாக செய்திகள் இருந்த போதும் தனிப்பட்ட முறையில் பெற்றோர்களிடம் இருந்தோ, மாணவர்களிடம் இருந்தோ எங்களுக்கு எந்த விதமான ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் வரவில்லை.

டாக்டர் ராமதாசிடம் புகார் செய்த பெற்றோர் சங்கத்தினர் மாணவர்கள் எந்த கல்லூரியில் யார் எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்று கூறினால் தகுந்த நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.

250 பொறியியல் கல்லூரிகளில் 150-க்கும் மேற்பட்ட கல்லூரி ராமன் குழு, சுப்பிரமணியன் குழு மூலமாக ரூ.39 ஆயிரம், ரூ.32 ஆயிரம் என்ற கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சில கல்லூரிகள் இதை விட குறைவான கட்டணங்களை வசூல் செய்கிறார்கள். டாக்டர் ராமதாஸ் எந்த கல்லூரியில் அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள் என்று எழுதிக்கொடுத்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்.

மற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டை விட உயர் கல்வி கட்டணம் குறைவாக இருந்தது என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். கேரளாவில் உள்ள நீதிமன்ற தீர்ப்பின் படி கல்விக்கட்டணம் ரூ.75 ஆயிரம் வசூல் செய்கிறார்கள். கடந்த ஓராண்டு காலமாக அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் காரணமாக கல்வி கட்டணங்கள் குறைவாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.

ராமதாஸ் போராட தயாரா?

கிராமப்புற மாணவர்கள் பயன் அடையும் வகையில் உயர் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம். பொறியியல் மருத்துவ கல்லூரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் முழுமையாக மாநில அரசிடம் இல்லை. டெல்லியில் நடந்த மாநாட்டில் மாநிலத்திற்கு முழுமையான அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று நான் கூறியிருக்கிறேன். இந்தியா முழுவதும் பொறியியல் கல்லூரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் எம்.சி.ஐ., டி.சி.ஐ., பி.சி.ஐ., எ.ஐ.சி.டி.ஈ.யிடம் தான் உள்ளது.

எனவே டாக்டர் ராமதாஸ் எம்.சி.ஐ., டி.சி.ஐ., பி.சி.ஐ., எ.ஐ.சி.டி.ஈ. ஆகிய குழுக்களின் அதிகாரத்தை குறைக்க மத்திய சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு போராட முன் வந்தால், முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் அனுமதி பெற்று நானும் போராட தயாராக இருக்கிறேன்.

மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் வேண்டும். மேலே குறிப்பிட்ட நிர்வாக அதிகாரத்தை கட்டுப்படுத்தி, தடுத்து நிறுத்த டாக்டர் ராமதாஸ் போராடினால் அவருக்கு பின்னால் நானும் போராட்டத்தில் கலந்து கொள்வேன்.

நாங்கள் எடுத்த நடவடிக்கை நிதானமானது. நிரந்தரமாக மாணவர்களுக்கு பலன் அளிக்க கூடியது.

எதிர்காலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் அரசு எல்லா விதமான நடவடிக்கையும் எடுத்து வருகிறது. உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கல்வியின் தரம் உயர்த்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

ராமதாசிடம் கேட்க வேண்டும்

கேள்வி:- கூட்டணி கட்சிகளான தி.மு.க., பா.ம.க. இப்படி ஒருவர் மீது ஒருவர் புகார் கூறலாமா?

பதில்:-இது பற்றி டாக்டர் ராமதாசிடம் தான் கேட்க வேண்டும்.

கேள்வி:-கிராமப்பகுதி மாணவர்களுக்கு முன்பு வழங்கப்பட்டது போல் 15 சதவீத இட ஒதுக்கீட்டை தொழிற்கல்லூரிகளில் வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளாரே?

பதில்:-இந்த முறையை நாங்கள் தான் கொண்டு வந்தோம். இந்த முறை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அது நிறுத்தப்பட்டு விட்டது.

கேள்வி:-பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேருவதற்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக ஒரு குற்றச்சாட்டுக்கூட வரவில்லையா?

பதில்:- ஒரு குற்றச்சாட்டுக்கூட வரவில்லை. உயர் கல்வித்துறை இயக்குனருக்கு புகார் வந்தால் கூட அவர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து இருப்பார்.

அதிக கட்டணம்

கேள்வி:- 250 பொறியியல் கல்லூரிகளில் ஒரு கல்லூரியில் கூட அதிக கட்டணம் வசூல் செய்தார்கள் என்பதற்கான ஆதாரம் இல்லையா?

பதில்:- ஆதாரம் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து இருப்போம். டாக்டர் ராமதாசுக்கு எழுதியிருக்கும் குற்றச்சாட்டை எங்களுக்கு எழுதியிருந்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். அதே நேரத்தில் தனியார் தொழிற்கல்லூரிகளில் ஆய்வு செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அந்த கல்லூரிகளில் நிர்வாகத்தில் நாங்கள் தலையிட்டால் நீதிமன்றத்திற்கு சென்று விடுவார்கள்.

கேள்வி:- பொறியியல் கல்லூரிகளில் கண்காணிப்பதற்காக தனி குழு அமைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

பதில்:- இதற்காக இயக்குனர் தலைமையில் ஒரு குழு உள்ளது. இந்த குழுவிடம் புகார் கூறினால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

"தினத்தந்தி"

103 வயதில் தீக்குளித்த மூதாட்டி

வாழ்க்கையில விரக்தி என்பது யாருக்கும் எந்த வயதிலும் ஏற்படலாம் என்பதற்கு உதாரணமாக அமைந்து விட்டது டெல்லியைச் சேர்ந்த "மொங்கிபேன் மகாடியா''வின் சாவு.

103 வயதில் எல்லோருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த அவர் கடந்த வியாழக்கிழமை மாலை அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல அந்த பகுதியில் உள்ள அனைவருக்குமே அதிர்ச்சியைக் கொடுத்தார்.

டெல்லியில் தனது 61 வயது மகன் வீட்டில் வசித்துக் கொண்டிருந்த அவர் திடீரென்று அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண் டார்.

அவரது உடலில் மளமள வென பற்றிய தீயை அணைத்த மகனும், மருமகளும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கே பாட்டியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி காந்தி கிராமம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். "தன் சக காலத்து உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் இறந்து விட்டதால் வாழ்க்கையில் தனிமையில் விடப்பட்டது போல் எனது தாய் உணர்ந்தாள்.

இதனால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தது போல் காணப்பட்டார். "இனி நான் எதுக்கு வாழணும்'' என்று அடிக்கடி கூறி வந்தார்.எனவே அந்த எண்ணங்களே அவரை தற்கொலை செய்யத் தூண்டியிருக்க வேண்டும்'' என்று மொங்கிபேனின் மகன் கூறினார்..

-o❢o-

b r e a k i n g   n e w s...