.

Monday, May 21, 2007

நன்மங்கலத்தில் 1,000 மரங்களை வெட்ட அரசு அதிரடி முடிவு: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை நன்மங்கலம் வனப்பகுதியில் சுமார் 250 ஏக்கர் பரப்பில் உள்ள 1,000-க்கும் அதிகமான மரங்களை வெட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

சென்னைப் புறநகர்ப் பகுதியான மேடவாக்கத்தை அடுத்த நன்மங்கலத்தில் சுமார் 900 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி உள்ளது. இது வனத்துறையால் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலை, மலையை சார்ந்த வனப்பகுதியான இங்கு இந்திய கொம்பு ஆந்தை, கானான் கோழி, நாமக்கோழி உள்ளிட்ட பல்வேறு அரிய வகை பறவைகளும், 100-க்கும் அதிகமான அரியவகை மூலிகைத் தாவரங்களும், மரங்களும் உள்ளன.

இப் பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட கருங்கல் குவாரிகள் செயல்பட்டன. இப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருதி கடந்த சில ஆண்டுளுக்கு முன்னர் குவாரிகள் தொடர்ந்து செயல்பட வனத்துறை தடை விதித்தது. இதன் பின்னர் இப் பகுதி காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது.

மரங்களை வெட்டுவது ஏன்? நன்மங்கலம் வனப்பகுதியில் வன ஆராய்ச்சி நிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையத்துக்காக இங்கு ஏற்கெனவே 9 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டன. இந் நிலையில் இங்கு மேலும் 250 ஏக்கர் நிலத்தில் இந்த நிலையத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் சரக வனத்துறையிடம் இருந்து இந்த நிலம் வனத்துறை ஆராய்ச்சி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை வெட்டிவிட்டு அந்த நிலத்தில் சோதனை அடிப்படையில் புதிய வகை மரக்கன்றுகளை பயிரிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த மரங்கள் அனைத்தையும் வனத்துறையினரே வெட்ட முடியாது என்பதால் வெட்டும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான டெண்டர் கோரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...