.

Saturday, June 9, 2007

என் எம்.எல்.ஏ பதவியை பறிக்க முடியாது: ஜெ

சட்டசபைத் தேர்தல் வேட்பு மனு தாக்கலின்போது, கோடநாடு எஸ்டேட் குறித்த தகவலைத் தெரிவிக்காமல் ஜெயலலிதா மறைத்து விட்டார். இதனால் அவரது எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படலாம், அவரால் எதிர்காலத்தில் தேர்தலில் நிற்கவே முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.

இதுகுறித்து ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கை மூலம் விளக்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சட்டசபைத் தேர்தல் வேட்பு மனு தாக்கலின்போது நான் எந்த விதி மீறலிலும் ஈடுபடவில்லை. எதையும் மறைக்கவில்லை. எனவே எனது எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படும் வாய்ப்பே இல்லை. நான் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படலாம் என்ற கேள்விக்கும் இடம் இல்லை.

இதுதொடர்பாக கருணாநிதி காணும் கனவு பலிக்கப் போவதில்லை. எனவே கருணாநிதியின் பேச்சால் தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும், எனக்கு வாக்களித்த ஆண்டிப்பட்டி வாக்காளர்களும் குழப்பமடையத் தேவையில்லை.

கோடநாடு எஸ்டேட் குறித்து கருணாநிதி பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இவற்றுக்கு நான் பதில் அளிக்கப் போவதில்லை. காரணம், இந்தக் கேள்விகளைக் கேட்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை. உரியவர்கள் கேட்கும்போது இந்தக் கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பேன்.

கோடநாடு எஸ்டேட்டில் நான் மே மாதம் சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்தேன். அதை கருணாநிதி பெரும் பிரச்சினையாக்குகிறார். என் மீது அனைத்து வகையான குற்றச்சாட்டுக்களையும் அடுக்குகிறார்.

விசாரணை என்ற பெயரில், அரசு அதிகாரிகளையும், போலீஸாரையும் அனுப்பி அப்பாவி தேயிலைத் தோட்டத் தோழிலாளர்களை துன்புறுத்துகிறார். எஸ்டேட்டின் அன்றாடப் பணிகளை ஸ்தம்பிக்கச் செய்துள்ளார். இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறுவதன் மூலம் அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயலுகிறார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

காரைக்காலுக்கு யூனியன் பிரதேச உரிமை?

புதுவையின் ஒரு அங்கமான; நாகை தஞ்சை மாவட்டங்களினூடே அமைந்துள்ள காரைக்கால் நகருக்கு சுயாட்சி உரிமை முழக்கம் எழுந்துள்ளது.

காரைக்கால் போராட்டக்குழு என்கிற அரசியல் சார்பற்ற அமைப்பினர், காரைக்காலுக்கு தனி(யூனியன் பிரதேச) உரிமை வேண்டி, 'உண்மை அறியும் குழு' வொன்றை அனுப்பி வைத்து காரைக்கால் மீது காட்டப்படும் பாகுபாடுகளைக் காண மத்திய அரசை கோரியுள்ளனர்.

இவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் ராமஸ்ரீனிவாசன் "1956ல் இந்திய அரசுக்கும் பிரான்சு அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி காரைக்காலின் உரிமைகள் பழையபடியே தொடர வேண்டும், ஆனால் புதுவை அரசு காரைக்கால் பகுதியை புறக்கணித்து வருகிறது" என்றார். "ஒப்பந்தப்படி பிரான்சின் ஆளுமையின்போது காரைக்காலுக்கு கிடைத்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்"

மேலும் படிக்க..

சண்டிகர்: இந்தியாவின் முதல் புகைத்தல் தடை நகரம்!

இந்தியாவின் தூய்மையான; பசுமையான நகரம் என்று பெயரெடுத்துள்ள சண்டிகரின் மகுடத்தில் மற்றுமொரு மணிமுடியாக அது புகை பிடிக்கா நகரமாக ஜூலை1 முதல் ஆகவுள்ளது.

2003 ஆம் ஆண்டு சட்டத்தீர்மானத்தின் மீது 293 மனுக்களை தகவலறியும் சட்ட உரிமையின் கீழ் தொடுத்த சண்டிகர் மக்கள் இதனைச் சாதித்துள்ளனர். சண்டிகர் பற்றிய மதிப்பு வணிக; சுற்றுலா தளங்களில் உயர இது வழிவகுக்கும்.

பெண்கள், குழந்தைகள், புகை விரும்பாதோர் ஆகியோரை மறைமுக புகையிழுத்தலிலிருந்து காக்கும் வகையில் பொதுஇடங்களில் புகைப்பதை இச்சட்டம் தடைசெய்யும்.

1980களிலும் 90களிலும் துப்பாக்கி முனையில் இம்மாற்றத்தை கொணர முற்பட்ட தீவிரவாதிகள் தோல்வியைத் தழுவியதும், தானாய் ஏற்பட்ட மக்கள் மனமாற்றத்தில் இப்போது இம்மாற்றம் சாத்தியமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

TOI

வளைகுடா: இந்தியத்தொழிலாளர் நிலை!

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான இந்தியத்தொழிலாளர்களின் பொருளாதார நிலை அத்தனை திருப்திகரமாக இருக்கவில்லை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

துபாயிலிருந்து இயங்கும் அரசு சாரா அமைப்பொன்று மேற்கொண்ட கணக்கெடுப்பில், 95 சதவிகித இந்தியப்பணியாளர்கள், குறிப்பாக தொழிலாளர்கள், பல வருடங்களுக்குப்பின் நாடு திரும்பும் போது வெறுங்கையுடனே திரும்புகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. விலைவாசிகள், வாழ்க்கைச்செலவினங்கள் இதில் முக்கியப்பங்கு வகிக்கின்றனவாம். 10,100 நடுத்தர, குறைந்த சம்பளப் பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 95 சதத்தினர் இந்தியா திரும்பும் காலத்தில் வாழ்க்கைச் சரவல்களை எதிர்கொள்வதாகவும், மற்ற 5 சதத்தினரே சமாளிக்கும் மனத்துடனும், பணத்துடனும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

பத்து சதவிகித இந்தியர்களே இந்நாடுகளில் குடும்பத்துடன் வசிப்பதாகவும், மற்றவர்கள் குறைந்த சம்பளத்துடனும் அதிகரித்து விட்ட மருத்துவச்செலவுகளுடனும் போராடியே வருவதாக, பிரவாசி பந்து வெல்ஃபேர் டிரஸ்ட் தலைவர் ஷம்சுத்தீன் பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியப்பணியாளர்களின் தற்கொலை விகிதம் வருடாவருடம் உயர்ந்து வருவதும் மற்றொரு கவலை தரும் போக்காகும். இவற்றுக்கும் மனப்பிரச்னைகளும், பணப்பிரச்னைகளுமே பெரிதும் காரணமாக அமைகின்றனவாம்

The Hindu News Update Service-லிருந்து..

புற்றுநோயைத் தடுக்கும் விட்டமின் D

விட்டமின் D சத்தானது புற்றுநோயை, குறிப்பாக முதிர்ந்தவயது பெண்களுக்கு, தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோயைத் தடுப்பதில் இவை 60 சதவீதம் பலனளிக்கின்றனவாம்.

கலிபோர்னியாவின் சாண் டியகோ பல்கலை.ப்பேராசிரியர் ஒருவர் "இந்த அளவுக்கு புற்று நோயை தடுக்கும் வேறு வழிகள் இதுவரை கண்டறியப்படவில்லை" என்றார்.

இது பற்றிய முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டாலே எதையும் நிச்சயித்து சொல்ல முடியும் என்ற மற்றொரு பேராசிரியர் எட்வர்ட், தற்சமயம் மிகச்சிறிய ஆய்வே மேற்கொள்ளப்பட்டது என்றார்.

மனித உடலின் மேற்தோல் சூரியஒளியின் புற ஊதா கதிர்களைக் கொண்டு விட்டமின் Dயை தானே தயாரித்துக்கொள்ளும் இயல்புடையது.

மேலும் படிக்க...

ச: Forbes பத்திரிகை முகப்பில் HCL

இந்திய தகவல்நுட்ப நிறுவனங்களில் வன்பொருள், மென்பொருள் இரண்டிலும் வலிமைபெற்றுவரும் சிவ நாடாரின் எச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தை அட்டைப் படத்தில் சித்தரித்து சிறப்பு கட்டுரையுடன் வெளியிட இருக்கிறது உலக வணிக இதழ்களில் முதன்மையான ஃபோர்பஸ் இதழ். இந்தியாவின் முதல் கணினி நிறுவனம் இன்று பில்லியன் டாலர் நிறுவனமாக உருவெடுக்க நடந்தவழியை மீள்நினைவாற்றியிருக்கிறது.ஜூன் 18 அன்று புத்தகநிலையங்களில் கிடைக்கவிருக்கும் இதழில் அந்த நிறுவனம் சந்தித்த பணதட்டுப்பாட்டையும் முக்கிய வாடிக்கையாலர்களை இழந்ததையும் கூட எழுதியிருக்கிறது.

மேலும்..Indian IT firm HCL on Forbes' cover

பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை: உயர்நீதிமன்றம் அதிரடி!

பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கையில், தங்களது பள்ளி மாணவர்களுக்கே பள்ளிக்கூடங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் மெட்ரிகுலேஷன் பாட முறையில் பத்தாவது வகுப்பு படித்த முகம்மது ஆசிம் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அதில், தான் பத்தாவது வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தனது பள்ளிக்கூடத்தில் பிளஸ் ஒன் வகுப்பில் அனுமதி கிடைக்கவில்லை. தனக்கு பிளஸ் ஒன் வகுப்பில் இடம் தர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசுக்கு இதுபோல பல புகார்கள் வந்துள்ளன. இந்த விஷயத்தில் நீதிமன்றமே நல்ல உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் இன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில், பத்தாவது வகுப்பை தங்களது பள்ளியில் முடித்த மாணவர்களுக்கு பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கையில் பள்ளிக்கூடங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது.

பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கைக்கு கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கக் கூடாது. எந்தவித தேர்வையும் நடத்தக் கூடாது. இந்த உத்தரவு உடனடியாக அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியப்பயணிக்கு மலேஷியன் ஏர்லைன்ஸ் நஷ்ட ஈடு!

மலேசிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி இந்திய சைவப்பயணிக்கு சிக்கன் பகோடா உபசரித்த மலேஷியன் ஏர்லைன்ஸ் நஷ்ட ஈடாக இரண்டு இலட்சம் ரூபாய் வழங்குகிறது!

மார்ச் 2003ல் பங்களூருவிலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில், தான் சைவ உணவு கேட்டிருந்தும், தனக்கு சிக்கன் பகோடா வழங்கப்பட்டதாகவும், அதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அரவிந்த் சர்மா என்கிற அந்தப் பயணி விமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

இத்தீர்ப்பை இந்திய வம்சாவழி மாஜிஸ்திரேட் ராஜலிங்கம் உரைத்தார்.

மேலும்...

சவூதி: 60 நாட்கள் சுற்றுலா விசாக்கள் அனுமதி!

சுற்றுலா வழியாக அந்நியச்செலாவணியைப் பெருக்கும் திட்டத்தின் கீழ், வெளிநாட்டவர்களுக்கு சுற்றுலாக்களுக்கான குழு நுழைமதி(Group Visa)களை வழங்கிட சவூதி அரசு முன் வந்துள்ளது.
இத்தகவலை சுற்றுலாத்துறை உயர் ஆணையத்தின் தலைவர் அஹ்மத் அல் ஈசா தெரிவித்துள்ளார்.

இவை ஹஜ் உம்ரா போன்ற புனிதப்பயணங்களுக்கு அப்பாலும் வழங்கப்படும் சுற்றுலா நுழைமதிகளாகும்.குறைந்தபட்சம் சுற்றுலாக்குழுவினர் ஐந்துபேரேனும் இருக்கவேண்டும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் மொத்த வளர்ச்சி விகிதத்தில் சுற்றுலாத்துறை 6% சதவீதம் (55 பில்லியன் ரியால்கள்) பங்களித்துவருவதும், இவ்வளவை அதிகரிக்க அரசு தீர்மானித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...

ச: தமிழக அரசு அதிமுக தொண்டர்களை விடுவித்தது

சனியன்று தமிழக அரசு வியாழனன்று போராட்டத்தில் ஈடுபட்டு கைதான அதிமுக தொண்டர்களை விடுவிக்கும்மாறு ஆணை பிறப்பித்தது. விழுப்புரம் அருகே காவல் ஆய்வாளரை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள 28 பேர் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்று அரசுக் குறிப்பு கூறுகிறது.

TN Govt orders release of AIADMK volunteers- Hindustan Times

ச: அரசு தலைவர்கள் மீது வழக்குத் தொடுக்க முன்னனுமதி பெறுவதை நீக்க வேண்டும் : பொதுநல வழக்கு

உத்திரபிரதேச முதல்வர் மாயாவதியின் மீது 175 கோடி தாஜ் வழக்கில் ஆளுநர் முன் அனுமதி மறுத்ததையொட்டி அத்தகைய பாதுகாப்பு அரசியல்தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப் படுவதை அரசியல் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று பதிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும் ...The Economic Times

ச: பிரிட்டனில் குற்றம்புரிந்தவரை நீதிமன்றம் அந்நாட்டிற்கு வெளியேற்றம்

கற்பழிப்பு, கொலை குற்றங்கள் சாட்டப்பட்டிருக்கும் மணீந்தர் பால் சிங் கோலியைவெளியேற்றுமாறு வெள்ளியன்று தில்லி நீதிமன்றத்தில் அந்நாட்டிற்கு வெளியேற்றும் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரித்தானிய கோரிக்கையை ஏற்ற நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர் அக்குற்றம் புரிந்திருக்கக்கூடிய வாய்ப்புகளை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் அதே நேரம் அவருக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் இந்த வெளியேற்றத்திற்கு அனுமதி அளிப்பதாகவும் தீர்ப்பில் கூறியுள்ளார்.

கோலி 17 வயது பிரிட்டிஷ் பெண்ணை கடத்திச் சென்று வன்புணர்ந்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப் பட்டுள்ளார். கொலைபுரிந்து இந்தியாவிற்கு தம் உடல்நலமில்லா அன்னையை காண்பதற்கு வந்து இங்கேயே தலைமறைவாக இருந்தார். ஜூலை 14,2004இல் மேற்குவங்கத்தில் கலிம்போங்கில் பிடிபட்டார்.

Court allows Kohli extradition, but says don't hang him- Hindustan Times

ச:அட்லாண்டிஸ் விண்வெளி விமானம் ஏவப்பட்டது

பிளோரிடாவின் கென்னடி விண்வெளிநிலையத்திலிருந்து கதிரவன் மறையும் வேளையில் அட்லாண்டிஸ் விண்வெளிக்கலம் தன் பயணத்தைத் துவக்கியது. கடந்த ஆறுமாதங்களாக விண்வெளியில் வசித்துவரும் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதாவில்லியம்ஸை மீட்டுக் கொண்டுவரும். அமெரிக்க நேரம் வெள்ளி இரவு 7:38க்கு(இந்திய நேரம் சனி காலை5:08) தன் ஏழு பேர் குழுவினருடன் கிளம்பிய இந்த விண்கலம் விண்ணிலுள்ள பன்னாட்டு விண்வெளி நிலையத்தை, அது தென் இந்திய பெருங்கடலிற்கு மேலே வரும்போது, இந்திய நேரம் திங்கள் மதியம் ஒருமணிக்குச் சென்றடையும்.
Atlantis blasts-off to fetch Sunita Williams-The United States-World-The Times of India

ச: முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் மணீந்தர்சிங் மருத்துவமனையில் அனுமதி

தனது இரண்டு கைகளும் அடிபட்ட மணீந்தர்சிங் இன்று தில்லி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டார். அவரது மனைவி இது வீட்டில் ஏற்பட்ட விபத்தினால் நிகழ்ந்தது என்று கூறினாலும் உள்ளூர் தொலைக்காட்சிகள் ் அதிகாரபூர்வமான தகவல் ஒன்றும் இல்லாதநிலையில் அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம என செய்திகளை வெளியிட்டு வருகின்றன. 1982இலிருந்து 1993 வரை 35 டெஸ்ட் பந்தயங்களில் ஆடியுள்ள மணீந்தர் கடந்த மாதம் போதைமருந்து வழக்கொன்றில் மாட்டி் பிணையில் வந்துள்ளார்.

Cricinfo - Maninder Singh hospitalised

It was an accident: Maninder's wife : maninder singh, suicide, wife, accident : IBNLive.com : CNN-IBN

ச: கோவா முதல்வராக திகம்பர் காமத் பொறுப்பேற்றார்

கோவாவின் 19ஆவது முதல்வராக திகம்பர் வி காமத்,54, நேற்று பொறுப்பேற்றார்.

முன்னதாக வெளியேறும் முதல்வர் பிரதாப் சிங் ரானேவிற்கும் மாநில காங். தலைவர் ரவி நாயக்கிற்கும் ஆன இழுபறியில் அனைவருக்கும் சம்மதமான காமத் பெயர் பரிந்துரைக்கப் பட்டது. சரஸ்வதி பிராமணரான இவரின் தெரிந்தெடுப்பு மாயாவதியின் தாக்கத்தாலா என்று மாநில அரசியலில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.

The Hindu : National : Kamat sworn in Goa Chief Minister

-o❢o-

b r e a k i n g   n e w s...