.

Sunday, September 2, 2007

கலைமாமணி விழாவில் கருணாநிதி பேச்சு.

2006-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. திரைப்படம், நாடகம், இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்று விளங்கும் 69 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.

கலைமாமணி விருதுகளை ஆளுநர் பர்னாலா வழங்க, பதக்கங்களை முதல்வர் கருணாநிதி அளித்தார். விழாவில், கருணாநிதி பேசியது:

இந்த ஆண்டு சின்னத்திரை கலைஞர்களும் சிறப்பிக்கப்பட்டு இருக்கிறார்கள். முன்னதாக, அவர்களிடத்தில் ஒரு ஆதங்கம் இருந்தது. அவர்களுக்கும், விருது வழங்க வேண்டும் என்று. அதுகுறித்து என்னிடம் முறையிட்டார்கள்.

அதை நிறைவேற்றும் இடத்தில் நான் அப்போது இல்லை. தற்போது, நிறைவேறி இருக்கிறது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்பது முன்பு, சங்கீத நாடக சபா என்று இருந்தது. அதற்கு, திமுக ஆட்சியில் தான் இயல் இசை நாடக மன்றம் என பெயர் மாற்றப்பட்டது.

தமிழுக்கு தற்போது செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு இருக்கிறது. செம்மொழி அஸ்தஸ்து குறித்து பெருமை பேச வேண்டுமானால் என்னைத் தான் (கருணாநிதி) பேச வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் அனுப்பினார். அதை, புதையலாகப் பாதுகாத்து வருகிறேன்.

இன்று தமிழைக் காப்பாற்ற, பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தமிழர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. தமிழைக் காப்பாற்றுகிறவர்கள் எனக் கூறுபவர்களைக் கண்டு ஏமாந்து விடக் கூடாது. நாமும் ஏமாற்றி விடக் கூடாது.

கலைஞர் "டிவி'யை தமிழில் நடத்த வேண்டும் என அறிவுரை சொல்கிறார்கள். நன்றியோடு ஏற்றுக் கொள்கிறேன். கலைஞர் "டிவி'யில் தமிழ் வாழுமா எனக் கேட்கிறார்கள். கலைஞர் வாழ்கிறாரோ இல்லையோ? தமிழ் வாழும். அது, மற்றவர்களையும் வாழ வைக்கும்.

பகையைக் கக்கிக் கொண்டு தமிழைக் காப்பாற்ற முடியாது. உள்உணர்வுடன் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழைக் காப்போம் என்றார் கருணாநிதி.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...