.

Wednesday, August 22, 2007

சென்னை: கேள்வி கேட்ட பயணிகளை இறக்கிவிட்ட ஏர்-டெக்கன்!!

சென்னை: விமானத்தில் ஏர்-கண்டிசன் செயல்படாததை தட்டிக் கேட்ட 4 பயணிகளை இறக்கிவிட்ட ஏர்-டெக்கன் நிறுவனம் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்து அசிங்கப்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இன்று இச் சம்பவம் நடந்தது.

இன்று காலை சென்னையில் இருந்து மும்பைக்குச் செல்ல இருந்த ஏர் டெக்கன் விமானத்தில் ஏசி செயல்படவில்லை. இதனால் பயணிகள் புழுக்கத்தில் தவித்தனர். விமானத்தில் 132 பயணிகள் இருந்தனர்.

இது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த ராய் (56) விமானப் பணிப் பெண்களிடம் புகார் செய்தார். ஆனால், அவர்கள் எந்த பதிலும் தரவில்லை. இதையடுத்து அவரது மனைவி (வயது 49) மற்றும் மகள் (வயது 25) ஆகியோர் பணிப் பெண்களை கேள்வி கேட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக கார்த்திகேயன் (47) என்பவரும் பேசினார்.

ஏசி செயல்படாததற்கு பதில் சொல்ல மறுத்த விமான ஊழியர்கள், அவர்களை விமானத்தை விட்டு இறங்குமாறு கூறினர். அதை ஏற்க 4 பயணிகளும் மறுத்தனர்.

இதையடுத்து இவர்கள் இறங்காவிட்டால் விமானத்தை கிளப்ப மாட்டோம் என விமானிகளும் முரண்டு பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து ஏர் டெக்கன் நிறுவன ஊழியர்கள் விமான நிலைய பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் தகவல் கூறினர். அவர்கள் விமானத்தில் ஏறி 4 பயணிகளையும் வெளியேற்றினர்.

பின்னர் அவர்களை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக 6.20க்குப் புறப்பட்டுச் சென்றது.

ஏர் டெக்கன் மீது தவறு இருந்தாலும் பயணிகளை அவர்கள் நடத்திய விதம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இறக்கிவிடப்பட்ட பயணிகள் மீது ஏர் டெக்கன் புகார் ஏதும் தரவில்லை. இதையடுத்து அவர்களை போலீசார் விடுவித்தனர். இன்று மாலை விமானத்தில் அவர்களை மும்பைக்கு அழைத்துச் செல்வதாக ஏர் டெக்கன் உறுதியளித்துள்ளது.

செய்தி வழி : தட்ஸ்தமிழ்.காம்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...